Saturday 7 April 2012

வழிகாட்டும் வல்லவர்கள்


வாழ்க்கையில் தோல்விகளைக் காணும் போது துவண்டு போவதும்; வெற்றிகளைப் பெறும் போது களிப்பில் ஆட்டம் போடுவதும் ஒவ்வொருக்கும் ஏற்பட்ட அனுபவம் தான்.

இரண்டையும் சமமாகப் பாவித்து வாழ்க்கையில் வெற்றிகளைப் பெற்ற வல்லவர்களின் வரலாறுகள் எல்லோருக்கும் வழிகாட்டும்.

டேல் கார்னகீ (Dale Garnege ) என்னும் அமெரிக்க எழுத்தாளரை எல்லாத் தரப்பு மக்களும் அறிந்திருக்கிறார்கள். உளவியலைப் பற்றி அதிக அளவில் எழுதியிருக்கிறார்.

தன் முன்னேற்ற நூல்கள் ஆங்கிலத்தில் நிறைய எழுதியுள்ளார்.

'மேடைப் பேச்சும், வியாபாரிகள் பிறரை எப்படித் தன் வயப்படுத்துவது' என்னும் நூல் உலக அளவில் பெயர் பெற்றதாகும். இன்றும் நிறையப் பதிப்புகளில் பிரசுரமாகி வருகின்றன.

டேல் கார்னகீ பன்னிரெண்டு வயதில் வேளாண் பண்ணையில் வேலை பார்த்தவர். உண்ண உணவும், உடுக்க உடையும் வாங்க மிகவும் சிரமப்பட்டார். வறுமையை எதிர்த்து இளவயதில் போராடும் மனத்திண்மை பெற்றார். நாற்பத்தி ஆறாம் வயதில் உலகப் புகழ் பெற்றார். விடாமுயற்சி, சமமான அறிவு, சாதிக்க வேண்டுமென்ற ஆர்வமே அதற்குக் காரணமானது.

நியூயார்க், பிலடெல்பியா, பால்டிமூர், லண்டன், பாரீஸ் ஆகிய நகரங்களுக்குச் சென்றவர், அங்கெல்லாம் மேடைப் பேச்சுப் பயிற்சியைத் தந்தார்.

ஆரம்பத்தில் இவரது ஒரு இரவு பேச்சுக்கு 2 டாலர்கள் மட்டுமே கிடைத்தன. ஆனால் பின் நாளில் அத்தகைய கற்பித்தலுக்கு 30 டாலர்கள் கிடைத்தன.

வறுமையில் உழன்ற டேல் கார்னகீ சாதிக்க வேண்டுமென்ற வெறியே உலகமறிந்த பெரிய எழுத்தாளராகப் பெயர் பெற வழியமைத்துத் தந்தன.

சாமர்செட் மாம் ( Somerset Maugham) என்னும் புகழ் வாய்ந்த ஆங்கில எழுத்தாளர் ஆரம்பத்தில் வறுமையில் வாடியவர் தான். மருத்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர். ஆங்கில இலக்கியத்தில் தனிப்பெரும் இடத்தைப் பெற வேண்டுமென்ற உந்துதலே டாக்டர் தொழிலுக்கு முழுக்குப் போட வைத்தது.

இவர் எழுத ஆரம்பித்த பதினோரு வருடங்கள் வரை வறுமையில் தான் வாடினார்.

தன் கதைகள் மக்களிடம் போய்ச் சேராதோ என மனம் புழுங்கியவர். வருட வருமானம் நூறு பவுன்கள் தான் கிடைத்தன.

இவரது ஆர்வமும், விடாமுயற்சியும் தான் ஆங்கில இலக்கிய உலகில் நிகரில்லாதவராக விளங்க முடிந்தது. தன் எழுத்துக்களால் இருபது லட்சம் பவுன்கள் ஈட்டுபவராக வல்லமை பெற்றார்.

சாமர்செட் மாம் உலகப் புகழ்பெற்ற ஆங்கில நூல்களை எழுதினார். சில மனித உறவு (Human Bondage ) நிலாவும் ஆறு பென்னிகளும் (The Moon and Six Pence ) மழை (Rain ) வண்ணம் தீட்டிய முகத்திரை ( The Painted Veil ) ஆகிய நூல்கள் அமர காவியங்களாக போற்றப்படுகின்றன.

ஷேக்ஸ்பியர்  ( Shakespear ) என்னும் ஆங்கிலக் கவிஞரை உலகம் என்றும் மறக்காது. இவரது பெற்றோர்கள் படிக்காதவர்கள். வறுமையின் காரணமாக ஷேக்ஸ்பியர்  படிப்பைப் பாதியில் விட்டு விட்டு பதிமூன்றாம் வயதில் வேலைக்குச் சென்றார்.

பசுக்களிடம் பால் கறப்பது,செம்மறி ஆடுகளின் உரோமத்தை வெட்டிச் சுத்தம் செய்தார். மேலும் தோல்கள் பதனிடும் தொழிலில் உதவியாளராகவும் வேலை பார்த்தார்.

இவ்வேலைகள் பிடிக்காது போகவே லண்டன் மாநகருக்கு வந்து சேர்ந்தார்.

நாடகங்களில் நடிப்புத் தொழிலை மேற்கொண்டார். ஐந்தாண்டுகளில் நடிப்பின் மூலம் நிறையச் செல்வத்தைச் சேர்த்தார். இரண்டு நாடக அரங்குகளின் பங்குதார், நிலம் வாங்கி விற்கும் தரகர், அதிக வட்டிக்குப் பணம் கொடுப்பது போன்றவைகளில் ஈடுபட்டார்.

நாற்பத்து ஐந்தாவது வயதில் இவரது ஆண்டு வருமானம் நாலாயிரம் பவுன்டுகளாக இருந்தனவாம்.

காதலித்து மணம் புரிந்த மனைவி, இவரை விட எட்டு வருடங்கள் மூத்தவர்.

ஷேக்ஸ்பியர் இறந்து ஏழு வருடங்கள் கழிந்து தான் நாடகங்கள் அனைத்தும் நூல்களாக வெளியிடபட்டன.

இவரது புகழ்வாய்ந்த நாடகங்களான ' ஹாம்லெட்; மாக்பெத்; வசந்த கால இரவுகள்' ஆகியவை உயிருடன் இருந்த போது நூறு பவுன்கள் கூட ஈட்டவில்லை.

அவைகள் புத்தகங்களாக வெளிவந்த போது இருபத்தைந்து லட்சம் பவுன்களுக்கு விற்றுத் தீர்ந்தன.

வாழ்ந்த காலங்களில் பல முதலீடுகளின் வாயிலாகத் தான் செல்வந்தராக ஷேக்ஸ்பியர் வாழ்ந்தார்.

டேல் கார்னகீ, சாமர்செட் மாம், ஷேக்ஸ்பியர் - இம்மூவரின் வாழ்க்கை வரலாறு நமக்கு வெறும் பாடமல்ல; வழிகாட்டும் கலங்கரை விளக்குகளே.


குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment