Saturday 6 August 2011

மாற்றங்கள்


( சங்கு காலாண்டிதழில் வெளியான சிறுகதை ) 


'ரமேஷ்.... இங்க வாப்பா...!'

என்ன கூப்பிட்டேளா....'

'நம்ம.... நிரஞ்சனா நிச்சயார்த்தம் பற்றி எல்லாரிட்ட சொல்லிட்டியோன்னோ.....'

'அவ ஆபீஸ் பிரண்ட்ஸ்.... எனக்குத் தெரிஞ்சவா... நம் உறவுக்காரா சிலருக்கும் சொல்லிட்டேன்.'

'நம்ம ஆத்துல முதல் விசேஷம் இது... வெளியூர்காரா நம்பள சேர்ந்தவா.... எல்லாரையும் கல்யாணத்துக்குப் கூப்பிட்டா போதும்...'

'சரிப்பா....'

' ஏன்னா ...! எப்ப பாருங்க... உங்க அப்பாருக்கு எதையாவது பேசணும்... பதில் வாங்கணும்'

'சாரு.... அவர் அப்படித்தான்... நாம தான் சரி செஞ்சுண்டு  போகணும் .  அவர் கேக்குறதுக்குப் பதில் சொன்னாப் போதும்.  இப்பதான் நோக்கு புரியறதா... முப்பது வருஷமா நீயும் தான் அவரண்ட பேசுற...'

'ஆமா... நா சொல்றச்சே என் வாயை மூடுறேள் எப்படியோ போங்க... நீங்க ஆச்சு... அவராச்சு...'

'வீடு நிறைந்த கூட்டம்.  மாப்பிள்ளை வீட்டில் எல்லோரும் வந்து விட்டனர்.  கிருஷ்ண அய்யங்கார் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு வீட்டினுள் அலைகிறார். உடம்புக்குத் தானே வயதெல்லாம்.  மனைவி ருக்கு என்கிற ருக்மினி பட்டுப்புடவை மடி சாரில் ஹாலில் அமர்ந்து கணவர், மகன் ரமேஷ், மருமகள் சாருலதா, பேத்தி ரஞ்சனாவையும் கவனிக்கிறார்.

 மாப்பிள்ளை சீனுவாசன் அப்பா ரங்கநாதன் அம்மா அலமேலு மூவரும் வருங்கால மாட்டுப் பெண்ணை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 'ரங்கநாதன்.... எல்லாம் ரெடியாயிடுத்து.... சாஸ்திரிகளும் வந்துட்டார்.  ஆரம்பிக்கலாமா?' 'கிருஷ்ண அய்யங்காரின் குரலில் பெருமிதம்.

 'பேஷா... ஆரம்பிங்கோண்ணா...' சாஸ்திரியிடம் மாட்டுப் பொண்ணுக்கான பட்டுப்புடவை, ஜாக்கெட், பழம், பூ, இத்யாதிகளுடன் தாம்பளத்தில் வைத்து ரங்கநாதன் கொடுத்தார்.  சாஸ்திரிகள் தாம்பளத்தை ரமேஷ், தம்பதிகளிடம் தந்தார், பெற்றுக் கொண்டு திரும்புகையில்...

 'மாமா... சித்த... நில்லுங்கோ...' 'மாப்பிள்ளை கையிலிருந்த பையில் அழகான சிறிய அட்டைப் பெட்டியை புடவையின் மீது வைத்து, சிரிப்புடன் சீனுவாசன் தந்தான்.  ரமேஷீம் வாங்கிக் கொண்டார்.

 அலங்கார பூதிதையாக நிரஞ்சனா மெல்ல மெல்ல நடந்து வந்தாள்.  அவள் நிறத்துக்கு ஏற்றவாறு மாப்பிள்ளை வீட்டாரின் மயில் கழுத்து நிறப்புடையில் வரும்போது மயிலொன்று அசைந்தாடி வருவது போல் இருந்தது.
 மனையில் அமர்ந்தாள்.

 மாப்பிள்ளை சீனுவாசன், ரங்கநாதன், அலமேலு மூவரும் நிரஞ்சனாவை இமைகள் சேராது பார்க்கின்றனர்.  பெண் பார்க்க வந்த போது இருந்த நிரஞ்சனா இப்போது கூடுதல் அழகும், வாளிப்பும் இருக்கக் கண்டனர்.

 பெண்ணும், மாப்பிள்ளையும் ஒரே படிப்பு. எம்.பி.ஏ.இ. தனியார் நிறுவனங்களில் கை நிறைய சம்பளத்தில் உயர் பதவிகளை அலங்கரிக்கும் போது மகிழ்ச்சிக்கு சொல்லவா வேண்டும்.  இருவரும் கைபேசிகள் இல்லாமலேயே பணிபுரிகின்றனர்.  இந்தக் காலத்திலும் இப்படி.  இரு பெற்றோர்களின் வளர்ப்புகள் அப்படி.

 இரு குடும்பங்களிலும் மகிழ்ச்சி தான் குடி கொண்டிருந்தன .  நிச்சயதார்த்தம் முக்கால் மணிக்குள் முடிந்து விட்டது.

 'ரமேஷ் எல்லாரையும் சாப்பிட அழைச்சுண்டு போ... யாருக்கு என்ன தேவையோ... பார்த்துப் பார்த்து செய்யணும்... தெரியறதா...' அப்பாவின் உத்தரவுக்குப் பணிந்தார்.

 அங்கு வந்திருந்தவர், இருவீட்டார், எல்லாரையும் சாப்பாடு கூடத்துக்கு அழைத்துச் செல்கிறார்.

 மாப்பிள்ளையும்  பெண்ணும் கண்களால் சந்திக்கின்றனர்.  காதில் கைவைத்து செல்போன் நன்றாக இருக்கிறதா என ஜாடையில் கேட்கிறான்.  அவள் ஆட்காட்டி விரலுடன் பெருவிரலை இணைத்து ஓ...கே சொன்னாள்.  கண்கள் பேசும் போதும் வாய் பேச்சுக்கே இடமில்லை என்பார்களே இதுவாகத்தான் இருக்கும் போல.

 நிகழ்வுக்கு வந்தவர்கள் சாப்பிட்ட பின் வழிகேட்டு கலைந்தனர்.  மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் புறப்பட்டனர்.

 கிருஷ்ண அய்யங்கார் ஈசி சேரில் தன் உடம்பைக் கிடத்தினார்.  பக்கத்தில் மனைவி ருக்மினி வந்தமர்ந்தார்.

 'ருக்கு நோக்கு ஞாபகம் இருக்கோண்ணோ... நேக்கு லேசு பாசா தெரியறதுடி... நம்ம நிச்சயார்த்தத்தன்னிக்கு நோக்கு நா ஏதாவது கொடுக்கவும் இல்லடி....'

'இப்போ... அதுக்கு என்ன? அன்னைக்கும் இன்னைக்கும் என்னண்ணா முடிச்சுப்போடுறேள்.. மாப்பிள்ளை பையன் சீனு, நிரஞ்சனாவுக்கு ஏத்த வரன், அது போறும்.'

'பொண்ணுக்குப் புடவையோட செல்போனையும் பொட்டில வெச்சு குடுத்துப் புட்டான்டி நோக்குத் தெரியுமா?....'

'ஆமா... பார்த்தேன்.... அதுக்கென்ன இப்போ?...'

'இதெல்லாம் நேக்கு ஓவர் பில் டப்னு தெரியுறதடி...'

'சரிண்ணா அவர் அவர் இஷ்டம் செஞ்சுட்டுப்போறா....'

'நாற்பது வருஷம் என்னோடு குடும்பம் நடத்தி என்ன பிரயோஜனம்?.... அசடு அசடு இதெல்லாம் நோக்குப் புரியாது டீ. இதைப்பத்தி பின்னால நோக்கு சொல்றேன்...'

 இரவில் நெடுநேரம் நிரஞ்சனா அறையில் விளக்கு எரியும்.  ஒரே சிரிப்பும், பேச்சும் தான்.  செல்போனில் தன் வருங்கால கணவரிடம் பேசுகிறாள்.  பேசிவிட்டுப் போகட்டும் ரமேஷீக்கும் சாருலதாவுக்கும் இது மகிழ்ச்சி தரும் விசயமே.

 ஆபிசில் வேலையின் போது சீனு பேசினான்.  சாயங்காலம் வீட்டுக்கு வரும்படி கேட்டுக் கொண்டான்.  மாமியார், மாமனாரைப் பற்றி சீனுவிடமும் பேசலாமே என நினைத்து வேலை முடிந்ததும் அவன் வீடு சென்றாள்.

நிரஞ்சனா பஸ்ஸில் தான் வேலைக்கு போய் வருகிறாள்.

 முன் நேரத்திலேயே சீனுவாசன் ஆபிசிலிருந்து வீட்டுக்கு வந்து நிரஞ்சனாவின் வருகைக்கு காத்திருந்தான்

 'அம்மா யாரு வர்றானு பாரு...'

' வாம்மா... வா எங்காத்துக்கு நீ வர்றது  முதல் தடவை.  சித்த அங்கேயே நில்லு... ஆரத்தி கொண்டு வர்ரேன் '

நிரஞ்சனாவுக்கு திலகமிட்டு வலது பாதத்தை முன் வைத்து வாசலில் நுழைய அலமேலு கேட்டுக் கொண்டாள்.  வீட்டை கண்களால் அளக்கிறாள்.

சுத்தத்துடன் அழகுடனும் இருந்தது.  அவளுக்குப் பிடித்து விட்டது.
வெளியில் சென்று வந்த ரங்கநாதன் நிரஞ்சனாவைப் பார்த்ததும் மகிழ்ச்சி தோன்ற மனைவியைப் பார்த்தார்.

'அலமு....! மாட்டுப் பொண்ணுக்கு சிரமபரிகாரம் ஏதாவது...'

'ஜலம் கொடுத்துட்டேன், சுவீட்டும், காரமும் ரெண்டு நிமிஷத்துல ரெடி பண்ணிடறேன்...'

கிச்சனை நோக்கிச் சென்ற அலமேலுவின் பின்னாலேயே நிரஞ்சனா சென்று விட்டாள்.  பேசுவதற்கும் கிடைத்த வாய்ப்பு தவறிப்போனதே என நினைக்கிறான் சீனு கிச்சனில் எல்லாமே கேட்டு நிரஞ்சனா திருப்தி அடைந்தாள்.  மனதில் தோன்றிய கேள்விகளுக்கு எல்லாமே விடைகள் பெற்றாள் வருங்கால மாமியாரிடமிருந்து

'மாமி.... நா புறப்படறேன் ஆத்துல தேடுவா....

இன்னொரு நாளைக்கு வர்றேன்... நிறைய பேசலாம்....'

வெளியில் வந்த அலமேலு மகனைப் பார்த்தாள்.

சீனு நம்ம நிரஞ்சனாவைப் பத்திரமா அவ ஆத்துல விட்டுட்டு வா...'

'சரிம்மா....'

டூவிலரில் செல்லும் போது நிறைய பேசினான், அவளிடம்...
தினமும் ஆறு மணிக்குள் வீடு திரும்பும் பேத்திக்காக வாசலில் காத்திருக்கிறார்.

டூவிலரில் வீதி வலம் வந்த இருவரையும் பார்த்தார்.  அதிர்ந்தார் கிருஷ்ண அய்யங்கார் குசல விசாரிப்புகள் முடிந்தன.  தாத்தாவும் இருவரும் வீட்டினுள் சென்றனர்.  சிறிய உபசரிப்புகளுக்குப் பின் சீனு விடை பெற்றுக் கொண்டான்.
 மகன் ரமேஷ் வந்ததும் இது பற்றி கேட்க வேண்டும்.

 நிச்சயதார்ததம் முடிந்ததுமே இப்படித்தான் நடப்பதா? என்ன தான் நாகரீகம் வளர்ந்து விட்டாலும் இப்படியா வரட்டும்...

 அவரின் ஆவேசம் கொழுந்து விட்டு எரிந்தது.

 வேலை முடிந்து களைப்புடன் ரமேஷ் வீட்டினுள் நுழைந்தார்.  மனைவி உபசரிப்புக்குபின் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

 கல்யாணம் நடக்கப்போறது... அதுக்குள்ளாற என்ன அவசரம் டூவீலர்ல வீதியில் வலம் வருதுகள் வீட்டுல ஏறக்கிட்டு போறான்.  பொண்ணா லட்சணமா நடக்குறாளா... எங்க காலத்துல இதெல்லாம் கிடையாது... நோக்கு தெரிஞ்சிருக்குமே....

 அப்பாவின் முகத்தைப் பார்த்தார் ரமேஷ் ஆவேசம் அதிகரிப்பால் உடம்பு நடுங்குவதையும் கன்னச்சதைகள், கண்கள் முறையே ஆடுவதும், சிவப்பானதையும் தெரிந்து கொண்டார்.

' இப்போ... என்ன நடந்து  விட்டது...?

 என்ன நடக்கனும்னு நீ விரும்புறே...!

 அப்பா சின்னஞ்சிறுசுக அப்படித்தான் நடக்கும்.  நிறைய படிச்சதுகள் வாழ்க்கையை எப்படி நடத்தனும் என்ற வழி முறைகள் எல்லாமே இன்னைக்கு அவளாளுக்கு அத்துபடி ஆயிடுச்சி... உங்க, என்னோட காலமெல்லாம் வேற... இன்றைய தலைமுறையோட காலமெல்லாம் வேற... நாளாக காலமெல்லாம் மாறிண்டே வருது... நாம தான் அவளாளோட வேகத்துக்கு மாறனும்.... இல்லேன்னா அவா நம்மை விட்டுட்டுப் போயிடுவா... அதனால் எல்லாத்தையும் யோசிச்சு நடந்துக்கனும் அது தான் நமக்கு நல்லதையும் தரும்.

 தனது எண்ணங்களை முழுமையாக அப்பாவிடம் தெரிவித்து விட்ட பெருமிதம் ரமேஷின் முகத்தில் மிளிர்ந்தன.

 ஹாலின் நடுவேயுள்ள கதவுக்குப் பின்னால் நின்று கவனித்த சாருலதாவின் மனதில் கணவனின் பேச்சு கரும்பாக இனித்தது.


குரு. ராதாகிருஷ்ணன்

 சங்கு காலாண்டிதழ் எண். 139.