'செய்யும் தொழிலே தெய்வம். அதில் திறமை தான் நமது செல்வம்'. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் இந்தப் பாடல் வரிகள் எல்லாக் காலத்திலும் நினைவில் கொள்ளத்தக்கவை.
திறமைக்கேற்ற பதவி அநேகருக்குக் கிடைப்பது இல்லை.
திறமைகள் எல்லோரிடமும் இருக்கின்றன. வெளிப்படுத்துவதில் தான் வேறுபாடுகள் இருக்கின்றன.
தனியார் நிறுவனங்களிலும், அரசுப் பணிகளிலும் பணியாற்றுபவர்கள், தங்கள் பணிகளைச் செம்மையாகச் செய்தல் வேண்டும்.
அதைவிட்டு நம் திறமை என்ன ? பாழாய்ப் போன இந்த வேலையில் வந்து மாட்டிக் கொண்டேனே ! என்று மனம் புழுங்குகிறவர்கள் தான் நிறைய இருக்கின்றனர்.
வேலை கிடைக்கும் முன் அவர் பட்டபாட்டை விரைவில் மறந்து போவார்.
வருகின்ற பேரூந்தில் நிற்பதற்கு இடம் கிடைத்தால் போதும். கிடைக்குமா ? இது ஆரம்ப நினைப்பு.
நிற்க இடம் கிடைத்து விட்டது. உட்கார் இடம் கிடைக்காதா? என அலைபாயும் மனதின் இடை நினைப்பு.
உட்காரவும் இடம் கிடைத்துவிட்டது. சன்னல் அருகில் காற்றாட உட்கார்ந்தால் நல்லது என நினைக்கும் இறுதி நினைப்பு.
அத்தோடு நின்று விடாது. தொடரும் நினைப்புகள், இதற்கு விடிவே இல்லை.
எந்தப் பணி என்றாலும் மன நிறைவோடும் ஈடுபாடுடன் செய்து பழகுங்கள்.
எந்த நிலையிலும் தான் பார்க்கும் பணி மோசமானது என்ற தவறான எண்ணத்தை விலக்குங்கள்.
வேலை தேடித் தரும் அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காகக் காத்திருப்பவர்கலை எண்ணிப் பாருங்கள்.
உடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் அன்போடு பழகுங்கள். உங்களின் பணியை முடித்து விட்டு மற்றவர்களுக்கு உதவுங்கள்.
மற்றவர்கள் மீது கரிசனம் காட்டும் போது அவர்களின் அன்பு கேட்காமலேயே நமக்குக் கிடைத்து விடும்.
பணியில் ஈடுபாடு அதிகமானால் திறமை வெளிப்படும். இனங்கண்டு மற்றவர்களால் நம் திறமை பாராட்டுக்கு உட்படும் போது மகிழ்ச்சி கரை புரண்டு ஒடும்.
போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற முதுமொழியை எண்ணிப் பார்ப்போம்.
குரு ராதாகிருஷ்ணன்