Thursday 23 August 2012

மனநிறைவு தேவை


'செய்யும் தொழிலே தெய்வம். அதில் திறமை தான் நமது செல்வம்'. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் இந்தப் பாடல் வரிகள் எல்லாக் காலத்திலும் நினைவில் கொள்ளத்தக்கவை.

திறமைக்கேற்ற பதவி அநேகருக்குக் கிடைப்பது இல்லை.

திறமைகள் எல்லோரிடமும் இருக்கின்றன. வெளிப்படுத்துவதில் தான் வேறுபாடுகள் இருக்கின்றன.

தனியார் நிறுவனங்களிலும், அரசுப் பணிகளிலும் பணியாற்றுபவர்கள், தங்கள் பணிகளைச் செம்மையாகச் செய்தல் வேண்டும்.

அதைவிட்டு நம் திறமை என்ன ? பாழாய்ப் போன இந்த வேலையில் வந்து மாட்டிக் கொண்டேனே ! என்று மனம் புழுங்குகிறவர்கள் தான் நிறைய இருக்கின்றனர்.

வேலை கிடைக்கும் முன் அவர் பட்டபாட்டை விரைவில் மறந்து போவார்.

வருகின்ற பேரூந்தில் நிற்பதற்கு இடம் கிடைத்தால் போதும். கிடைக்குமா ? இது ஆரம்ப நினைப்பு.

நிற்க இடம் கிடைத்து விட்டது. உட்கார் இடம் கிடைக்காதா? என அலைபாயும் மனதின் இடை நினைப்பு.

உட்காரவும் இடம் கிடைத்துவிட்டது. சன்னல் அருகில் காற்றாட உட்கார்ந்தால் நல்லது என நினைக்கும் இறுதி நினைப்பு.

அத்தோடு நின்று விடாது. தொடரும் நினைப்புகள், இதற்கு விடிவே இல்லை.
எந்தப் பணி என்றாலும் மன நிறைவோடும் ஈடுபாடுடன் செய்து பழகுங்கள்.

எந்த நிலையிலும் தான் பார்க்கும் பணி மோசமானது என்ற தவறான எண்ணத்தை விலக்குங்கள்.

வேலை தேடித் தரும் அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காகக் காத்திருப்பவர்கலை எண்ணிப் பாருங்கள்.

உடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் அன்போடு பழகுங்கள். உங்களின் பணியை முடித்து விட்டு மற்றவர்களுக்கு உதவுங்கள்.

மற்றவர்கள் மீது கரிசனம் காட்டும் போது அவர்களின் அன்பு கேட்காமலேயே நமக்குக் கிடைத்து விடும்.

பணியில் ஈடுபாடு அதிகமானால் திறமை வெளிப்படும். இனங்கண்டு மற்றவர்களால் நம் திறமை பாராட்டுக்கு உட்படும் போது மகிழ்ச்சி கரை புரண்டு ஒடும்.

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற முதுமொழியை எண்ணிப் பார்ப்போம்.


குரு ராதாகிருஷ்ணன்

Wednesday 15 August 2012

சரி செய்து கொள்ளுங்கள்


அறிகுறிகளை அறிவித்துக் கொண்டு தான் நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. கூர்மதியினால் அவைகளைத் தெரிந்து கொண்டவர்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்று முன்பே அறியும் ஆற்றல் ஏற்படும்.

சிலர் எல்லாமே நம் வினைப்படிதான் நடக்கும். தடுக்க யாராலும் முடியாது. நம் விதியின் பயனே என்றவாறே இருந்து விடுவர்.

இவர்களை 'சோற்றால் அடித்த பிண்டம்' என்று தான் அழைக்க வேண்டும். இவரைப் போன்றவர்கள் வீட்டுக்கும், நாட்டுக்கும் உதவ இயலாதவர்கள் என்று ஒதுக்கி விடுவர்.

ஒரு செயல் நல்லதோ, கெட்டதோ, பயன்பாட்டின் போது நல்லவைகளுக்கு அறுகுறிகளிலும் கெட்டவைகளுக்கு தடயங்களும் கிடைப்பது தான் நியதி.

நற்செயல்களின் கர்த்தாக்களுக்கு அறிகுறிகளின் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

கொடுஞ்செயல் புரிபவர்களை கைது செய்ய தடயங்கள் உதவியதாகக் காவல்துறையினர் வாக்குமூலங்களின் வாயிலாகத் தெரிய வருகின்றன.

இப்படி நடக்குமென்று எதிர்பார்க்கவில்லை. அறிந்தால் வேறு விதமாகச் செயல்பட்டு வெற்றி பெற்றிருக்கலாமே என எண்ணுவது சிலரின் வழக்கம்.

சுயசிந்தனை அற்றவர்கள் தான் இவ்வாறு நினைக்கின்றனர்.

தன் அறிவுக்கு வேலை தந்திருப்பார் எனில் இவ்வாறு எண்ணுவதை விலக்குவார்கள். நிகழ்வுகளும் வேறு விதமாக நடந்திருக்கும்.

இன்பமும் துன்பமும் கலந்தது தான் வாழ்வியல். இரண்டையும் ஏற்றுக் கொண்டு சரி செய்து கொண்டால் நாம் வளம் பெற முடியும்.
சுயசிந்தனை, அறிவாற்றல், ஈடுபாடு, தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள் வெற்றி நடை போடுவார்கள்.

நடப்பதை யார் தடுக்க இயலும். எல்லாமே விதிப்படி தான் நடக்கும் என்று வேதாந்தம் பேசி, நத்தைபோல் சுருங்கி முடங்கிப் போகிறவர்கள் தோல்விகளையே கேட்டுப் பெறுபவர்கள் ஆவர்.

வாழ்க்கையைச் சரி செய்து கொண்டு செல்ல முயலுங்கள்.


குரு ராதாகிருஷ்ணன்

Monday 6 August 2012

பரிகாரங்கள் தேவை


கிராமங்களில் இனப்பகை, குடும்பப் பகை இன்றும் இருக்கின்றன. பகை முற்றிக் கலவரங்கள் ஏற்பட்டு வருகின்றன. பொதுச் சொத்துக்கள் ஏராளமாக நட்டமாக்கப்படுகின்றன.

இவைகள் வேறு உருவங்களில் நகரங்களை நோக்கி வந்துவிட்டன.

அரசியல் பகை, அலுவலகப் பகை, பணம் ஈட்டுவதில் பகை என பல வழிகளில் உருவாக்கப்பட்டுவிட்டன.

அவசரகதியின் காரணமாக இவைகளில் தங்களை நுழைத்துக் கொண்டு அவதிப்படுபவர்கள் நிறைய உண்டு.

பிறர்மீது ஆத்திரப்பட்டுப் பகை தேடிக் கொண்டவர் இறுதியில் தோல்வியே கண்டடைவர்.

மேலே கூறப்பட்ட பகைகள் சாசுவதமானவைகள் என்று நினைக்காதீர்கள்.

கால மாற்றத்தினால் அவைகள் காணாது போய்விடும்.

அரசியலில் கட்சிகளுக்கிடையே வளரும் பகை தொண்டர்களைப் பலி வாங்கும். அபூர்வமாகக் கட்சித் தலைவர் மரணமடைவதுண்டு, சில சமயங்களில்.

நிரந்தர கட்சி அரசியலில் இன்றைக்குத் தேவைப்படாமல் போனது எல்லோரும் அறிந்த உண்மை.

ஆளுங்கட்சி செல்வாக்கு, அடுத்த கட்சி ஆட்சிக்கு வரும்போது அடிபட்டுப் போகும்.
அலுவலகப் பதவியால் நற்பெயரும், செல்வாக்கும் பெறுபவர்கள் மீது உடன் பணியாற்றுபவர்கள் சிலர் பகைமை பாராட்டுவது உண்டு. இதனால் அலுவலகப் பணிகளில் சங்கடங்கள் ஏற்படும். பாதிக்கப்படுவது மக்களே என்பதை உணர மாட்டார்கள்.

மாறுதலில் அத்தகையோர் சென்று விட்டால் அலுவலகப் பகை மறந்து போகும்.

சொல்திறன், சந்தை விற்பனையில் கவனம்; தடங்கல்களிலிருந்து சமாளித்தல், வாடிக்கைகாரர்களிடம் பழகும் பண்பு இவைகளே ஒருவரின் பொருள் ஈட்டலில் முக்கியமானதாகும்.

இவைகளை அறிந்து கொள்ளாமல் வியாபாரத்தில் பகையை வளர்ப்பதுண்டு.

இவர்களுக்குப் பணம் சேர்க்க இயலாது. திறமைகள் ஒவ்வொருவரிடமும் பல்வேறு வகைகளில் குடி கொண்டிருக்கும்.

அவனுக்கு நான் இளைத்தவனா என்ற மனப்பான்மை நீண்ட நாள் இருக்காது.

பணம் காற்றில் பறக்கும் தூசியைப் போன்றது. காற்று பலமாகச் சுழன்றடிக்கும் போது உயரமான இடங்களில் போய் அமரும். அடுத்து அடிக்கும் காற்று அதைக் குப்பை மேட்டில் சேர்த்து விடும்.

தத்துவமல்ல நிதர்சனம்.

பகைகளைக் களைய காலத்தின் கையில் ஒப்படைத்து விடுவது தான் சாலச் சிறந்தது.

அதுவே சரியான பரிகாரமாகும்.


குரு ராதாகிருஷ்ணன்