Tuesday 28 June 2011

முடிவற்ற சகாப்தம்




சிறுகதை என்பது தற்காலத்தில் (1934ல்) எழுந்த மேனாட்டு சரக்கு, சிறுகதை என்றால் சிறுகதை கொஞ்சப் பக்கங்களில் முடிந்து விடுவது என்பதல்ல. சிறுகதை என்ற பிரிவு இலக்கியத்தில், அதில் எழுதப்படும் பொருள் பற்றியது ஒரு சிறு சம்பவம் ஒரு மனோநிலை ஆகிய இவற்றை எடுத்து எழுதுவது, சிறுகதையில் முக்கிய சம்பவமோ நிகழ்ச்சியோ அல்லது எடுத்தாளப்படும் வேறு எதுவோ, அது ஒன்றாக இருக்க வேண்டும்.


    சில சமயங்களில் ஒரோர் சிறுகதை நூறு பக்கங்களுக்கு மேல் போகலாம், உதாரணமாக மேனாட்டில் ஆங்கில சிறுகதைகள் பிரெஞ்சு கதைகளிலும், ருஷ்ய கதைகளிலும் சுருக்கமாக விஷயத்தை புதிய மாதிரியில்  எழுதப்படுகிறது. ஆங்கில நாட்டு கால்ஸ் வொர்த்தி, ஹார்டி, பிரெஞ்சு மொப்பஸான், அன்தோலி பிரான்ஸீ முதலிய சிறுகதை ஆசிரியர்கள் சிறுகதை என்ற இலக்கியப் பகுதியை மிகவும் திறமையாக எடுத்தாண்டிருக்கிறார்கள்.

    சிறுகதை என்பது வாழ்க்கையில் சிறிய சாரளங்கள் .இதற்கும் நாவலுக்கும் வித்தியாசம் நாவல் வாழ்க்கையை அதன் பல்வேறு சிக்கல்களுடன் கொந்தளிப்புகளுடன் அப்படியே சித்தரிக்க முயலுகிறது. சிறுகதை ஒரு சிறு சம்பவத்தை தனித்த விஷயத்தை எடுத்து ஆளுகிறது என்பது தான்.

    என் கதைகளில் எதையாவது ஒன்றைக் குறிப்பிட்டு அது பிறந்தவிதத்தை சொல்வது  என்றால் ரிஷி மூலம் நதி மூலம் காணுகிற மாதிரிதான். சில ஆபாச வேட்கையில் பிறந்திருக்கலாம் வேறு சில அவை சுமக்கும் பொருளுக்குச் சற்றும் சம்பந்தமே இல்லாத ஒரு காரியம் கை கூடாது போது எழுதப்பட்டிருக்கலாம்.





    இதனால் சுயமாகக் கற்பனை பண்ணிக்கொண்டிருக்கிறவனுக்கு இன்னதான் இந்த கதையை எழுதத் தூண்டியது என்று சொல்வது எளிதல்ல. கேட்டதால் தோணித்து எழுதினேன் என்று தான் சொல்ல வேண்டும்.

    நான் கதை எழுதுவதற்கு நிஷ்டையில் உட்கார்ந்து யோசித்து எழுதும் வழக்கம் இல்லை. இதை நான் ஸ்பஷ்டமாகச் சொல்ல வேண்டியதில்லை. நான் முன் விவரித்த உதாரணங்களே போதும் என் கதைகளில் நூற்றுக்குத் தொண்ணுறு எடுத்த எடுப்பில் எழுதியும் வெற்றி காணுவதற்குக் காரணம் என் நெஞ்சில் எழுதாக் கதைகளாகப் பல எப்பொழுதும் கிடந்து கொண்டே இருக்கும்.

    அந்தக் கிடங்கிலிருந்து நான் எப்போழுதும் எடுத்துக் கொள்வேன். கதை எழுதும் சிலர் இவற்றை விவரப்பட்டியல் எழுதி ஒரு மூலையில் போட்டு வைப்பார்கள் நான் அப்படியல்ல ஞாபக மறதிக்கு அரிய வசதி அளிப்பேன். அதையும் தப்பி வந்தவைதாம் புதுமைப் பித்தன் கதைகள் என்ற கோவையும் பிறவும் ஆனால் ஒன்று எடுத்து ரூபத்தில் அமையும் வரை மனசில் உறுத்திக் கொண்டு கிடக்கும் நிலையில் இந்தக் கதைகள் யாவும் இவற்றைவிடச் சிறந்த ரூபத்தில் இருந்தன என்பது என் நம்பிக்கை எழுதி முடித்த பிறகு அவைசற்று ஏமாற்றத்தையே அளித்து வந்திருக்கின்றன. ஆனால் ஏமாற்றம் வெகுநேரம் நீடிப்பதில்லை.

    இதுவரை நீங்கள் வாசித்தது அமரர் எழுத்தாளர்  சொ. விருத்தாசலம் எனும் இயற்பெயர் கொண்ட புதுமைப்பித்தன், ' ஊழியன் ' எனும் சஞ்சிகையில் கட்டுரைகளாக எழுதியவற்றில் சிலது மட்டுமே.

    இவ்வாறு தன் மனதில் பட்டதை யாருக்காவும் எதற்காகவும் சொல்லாது விட்டது கிடையாது. வாழ்க்கையில் யாரையும் சமரசம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து முடித்த அப்பெருந்தகையின் 63வது நினைவு தினம் எதிர்வரும் 30.06.2011ல் பிறக்கிறது.

    தமிழ் எழுத்துலகில் தனக்கென ஓரு வகையான நடையும் லாவகமும் கொண்டவர் அமரர் புதுமைப் பித்தன் இவர் எழுதிய கதைகள் ஆகும் என்றும் இவைகள் 10 தொகுதிகளாக வெளிவந்துள்ளது என ஆய்வறிஞர் திருமிகு. ஆ. இரா.வேங்கடாசலபதி  தெரிவித்துள்ளார்.

    இத்துணை திறமைகளையும்  ஓரு சேரப் பெற்ற அமர எழுத்தாளர் புதுமைப் பித்தனின் வரலாறை அவசியம் அறிந்து கொளல் வேண்டும்.

    கரிசல் இலக்கிய கர்த்தா அமரர் கு. அழகிரிசாமி தொ.மு.சி. ரகுநாதன், வல்லிக்கண்ணன் ,  பின் ஜெயகாந்தன் ஆகியோருக்கு தமிழ்ச் சிறுகதைகளில் ஈடுபாடும் ஆர்வமும் ஏற்பட புதுமைப் பித்தனே உந்து சக்தியாகியுள்ளார். என்பதை பல பேட்டிகளில் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
    இவர்களில் புதுமைப்பித்தனோடு நட்பு கொண்டு அவரின் அன்புக்குப் பாத்திரமானவர் அமர எழுத்தாளர் தொ.மு.சி. ரகுநாதன் இவர் எழுதிய புதுமைப்பித்தன் வரலாறு சிறப்பான ஆவணப்பதிவு அரிய செய்திகள் உள்ளடங்கிய நூல் பொது நூலகங்களில் இப்புத்தகம் கிடைக்கும் வாசிப்பவர்களுக்கு அதிய விருந்து.

    அய்ரோப்பியர் அரசில் தாசில்தாராகப் பணியாற்றி வந்த சொக்கலிங்கம் பிள்ளை பர்வதத்தம்மாள் தம்பதியருக்கு மகனாக திரிப்பாதிரிப்புலியூர் (கடலூர்) பிறந்தவர் புதுமைப் பித்தன்.

    25.04.1906ல் பிறந்த இவருக்கு தங்கை ருக்மணி அம்மா, தம்பி சொ. முத்துசாமி உடன் பிறந்தவர்கள் பர்வதத்தம்மாள் புதுமைப் பித்தனின் எட்டாவது வயதில் இறந்து போனார்.

    தாயாரின் தங்கையான காந்திமதி அம்மாள் அப்பாவின் இரண்டாவது மனைவி ஆனார். சிறுவயதில் தாயன்பு அறியாப்பருவத்தில் தாயின் மரணமும், சிற்றன்னையின் கொடுமைகளையும் அனுபவித்தவர் புதுமைப் பித்தன்.

    அப்பாவின் பணிமாற்றங்கள் தென்னாற்காடு மாவட்டத்திலேயே நடந்ததால் புதுமைப்பித்தனின் தொடக்கக் கல்வி செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் ஆரம்பமானது.

    தாசில்தார் பணி ஒய்வின் காரணமாக அப்பாவுடன் சொந்த ஊரான நெல்லைக்கு வந்து சேர்ந்தார் புதுமைப்பித்தன் தாமிரபரணி நதிக்கரையில் அமர்ந்துள்ள வண்ணாரப்பேட்டை வாசம் தொடர்ச்சியானது தடங்கலில்லாத கல்வி பு.பி.க்கு கிடைத்தது.

    பள்ளியிறுதி வகுப்பு முடித்து நெல்லை இந்துக் கல்லூரியில் இளங்கலை (பி.ஏ) பட்டம் பெற்றார். ஆனால் இது நடந்தது அவரது இருபத்தைந்து வயதுக்கு மேல் தான்.

    அப்பாவிற்கு மகனை  அரசுப் பணியில் அமர்த்திப் பார்க்கும் விருப்பம் இதனால் தடைப்பட்டு போனது மகனை சட்டம் படிக்க வைத்து வக்கீலாகப் பார்க்க நினைத்தார். ஆனால் புதுமைப் பித்தன் எண்ணமோ வேறாக இருந்தது. தன் விருப்பம் நிறைவேறாமலேயே சொக்கலிங்கம் பிள்ளை மரணமடைந்தார்.
    நிறைய ஆங்கில நாவல்கள் சிறுகதைகள் படிப்பதிலும் நண்பர்களுடன் உரையாடுவதிலும் ஊர் சுற்றி திரிவதிலும் தான் நாட்டம், ஈடுபாடு அதிகமாகிப் போனது.

    பட்டம் பெற்ற ஆண்டிலேயே திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கமலா என்ற பெண்ணை மனந்தார். இவரது வாரிசு ஒரே மகள் தினகரி.

    புதுமைப்பித்தனின் முதல் படைப்பு ' குலோப்ஜான் காதல் ' காந்தி இதழில் 1933ல் வெளியானது.






    1934 ஏப்ரலிலிருந்து 'மணிக்கொடி' இதழில் பா. கதைகள் கட்டுரைகள் வெளியிடப்பட்டன அந்த வருடமே சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.

    ஒரு வருடம் ஊழியன் பத்திரிகையின் உதவியாசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் ஆறு ஆண்டுகள் (1936 – 1943) தினமணியில் உதவி ஆசிரியர் பணி இதழின் ஆசிரியரான டி.எஸ். சொக்கலிங்கம் நிர்வாகத்தினரோடு மோதலினால் பொறுப்பிலிருந்து விலகினார். உதவி ஆசிரியர்களில் சிலரும் வெளியேறினர் அவர்களில் புதுமைப் பித்தனும் அடக்கம். தினசரி பத்திரிக்கையை டி.எஸ் சொக்கலிங்கம் (1944) ஆரம்பித்தார். அவரோடு புதுமைப்பித்தன் சேர்ந்து பணியாற்றினார்.

    பின்னர் அவ்விதழிலிருந்தும் விலகி திரைப்பட துறையில் நுழைந்தார். ஜெமினி நிறுவனத்தின் அவ்வையார் காமவல்லி ஆகிய இரு படங்களிலும் பணியாற்றினார்.

    வசனகர்த்தாவான புதுமைப்பித்தன் பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனத்தை தனது அம்மாவின் நினைவாக ஆரம்பித்தார். முதல் படம் குற்றாலக்குறவஞ்சியை 'வசந்தவல்லி' என பெயர் மாற்றவும் செய்ய நினைத்தார்.

    வீண் பணச்செலவும் கடன் தொல்லையும் சொந்தப்பட தயாரிப்பு முயற்சியின் விளைவாக ஏற்பட்டன.

    எம்.கே தியாகராஜ பாகவதரின் 'ராஜமுக்தி' படத்துக்கு புதுமைப்பித்தன் வசனம் எழுதினார் கை நிறையப் பணம் புழங்கலாயிற்று மனைவியுடன் ஐந்து நடசத்திர ஓட்டலில் தங்கி செலவழித்தார்.
    கதை வசனம் எழுதும் வேலையில் உற்சாகமுடன் ஈடுபடலானார்.

    1947ன் பிற்பகுதியில் 'ராஜமுக்தி' படத் தயாரிப்பு குழு புனாவிற்கு இடம் பெயர்ந்தது படத் தயாரிப்புக்குழுவினருடன் புதுமைப்பித்தனும் புனா சென்றார்.

    மனைவியையும் குழந்தையையும் திருவனந்தபுரத்துக்கு அனுப்பி விட்டு பயணப்பட்டார் அங்கிருந்த தன் மனைவிக்கு புதுமைப்பித்தன் கடிதங்கள் எழுதினார்.

    புனாவில் வசதிகள் இல்லாச்சூழல் அதனால் மிகுந்த துன்பங்களுக்கு ஆளானார் புதுமைப்பித்தன்.

    ஏற்கனவே அவருக்கு இருமல் அடிக்கடி உபாதையைக் கொடுப்பது உண்டு சமாளித்தார் ஆனால் அது காசநோயாக உருவானது. சரியான உணவும் போஷாக்கும் கிடைப்பது அரிதாகிப்போனது.

    காசநோய் தீவிரமடைந்தது புனாவிலிருந்து திருவனந்தபுரம் செல்ல எண்ணினார். ஒரு வருட வாழ்க்கையை முடித்து கொண்டு (1948ல்) ஊர் வந்து சேர்ந்தார்.

    நோய்க்கு பணச் செலவு அதிகமானது நண்பர்களிடம் பணம் கேட்டு கடிதங்கள் எழுதினார். பலன் கிடைக்கவில்லை.  இருப்பினும் நம்பிக்கையை விட்டுவிடவில்லை.

    புதுமைப்பித்தன் நண்பர் வைரவியாபாரி திருவனந்தபுரத்தில் வசித்து வந்தார். அவரது ஒரே மகன் எஸ். சிதம்பரம் புதுமைப்பித்தனின் கதைகளின் தீவிர வாசகனாகிப் பின் அவரைப் போலவே கதைகள் எழுத வேண்டும் என்ற விருப்பத்தால் புதுமைப்பித்தனை சந்திக்கிறார்.

    தனது ஆதர்ச எழுத்தாளரின் நிலை கண்டு பண உதவிகளையும் உடனிருந்து உதவிகளையும் செய்து வந்தார்.

    'சிதம்பரம் ........ பார்......... நாளை எத்தனை மணியாடர்கள் வருதுபார் .......' என்று சொல்லிக் கொண்டு எல்லா நண்பர்களுக்கும் கடிதங்கள் எழுதினார். பதிலும் இல்லை, ........... பணமும் வரவில்லை.

    வறுமை மிஞ்சிய நிலையில் பலவீனம் கொண்ட உடல் காசநோய்க்கு ஈடு கொடுக்கவில்லை சிறுகதை சிற்பியான புதுமைப்பித்தன் திருவனந்தபுரத்தில் 30.06.1948ல் இயற்கை எய்தினார்.

    அவர் மறைந்தாலும் விட்டுச்சென்ற நூல்கள் அவரின் புகழை இன்றும் பரப்பிக்கொண்டு வருகின்றன.

    தமிழ் எழுத்துலகில் நிறைய படைப்பாளிகள் வலம் வருகின்றனர். புதுமைப்பித்தனைப் பற்றி அவர்கள் அவசியம் அறிவது மட்டுமின்றி படைப்புகளை முழுமையாகப் படித்து பார்ப்பது அவர்களை மெருகேற்றும்.

    ஆளுமையும் சகாப்தமும் முடிந்து இரண்டு தலைமுறைகளுக்கு மேலாகிறது.

குரு ராதாகிருஷ்ணன்