Monday 28 March 2011

இனப்படுகொலையின் ஆதாரங்களை முகத்தில் அறையும் ஆவணம்...


ஈழத் தமிழர்கள் படுகின்ற அல்லல், அவலங்களை நிழற்படங்கள் மூலம் உலகின் கவனத்தைக்கு கொண்டு வரும் ஆவணப் புத்தகம் தான் என்ன செய்யலாம் இதற்காக?


சனவரி 2011 இறுதியில் கைவரப் பெற்ற இப்புத்தகம் வாசிக்கும் யாரையும் கலவரப் படுத்தும். தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு என மூன்று மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.

புத்தக ஆசிரியர் ஜெ.பிரபாகரன் மேற்கொண்டுள்ள கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் அனைவரும் தெரிந்து கொள்ள முடிகிறது. இப்புத்தகம் ஈழத்தில் நிகழ்ந்த எல்லாவற்றையும் ஆவணப்படுத்துகின்றன.


 நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர், அமெரிக்க மருத்துவர் எலன் சாண்டர் எம்.டி., இலங்கை ஜெயசூர்யா, ஜெர்மனி பெரிமன் சர்வதேச மனித உரிமைகள் கழகத்தைச் சார்ந்த விராஜ் மென்டில் ஆகியோர் அணிந்துரைகள் வழங்கியுள்ளனர்.







20ஆம் பக்கத்திலிருந்து 174 பக்கங்கள் வரை வண்ணப் புகைப்படங்கள் தரப்பட்டுள்ளன.யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டது, கிஃபி (KFIR) விமானத் தாக்குதல்கள் (Shell Attack) எறிகணைத் தாக்குதல்கள், வலையத்தாக்குதல் முள்ளிவாய்க்கால், பொக்கணை, வட்டக்கச்சி தர்மபுரம், புதுக்குடியிருப்பு, வன்னிப் பகுதி, முல்லைத் தீவு ஆகிய இடங்களில் நடந்த தாக்குதல்கள் ஆகிய அனைத்தும் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன.


8.1.2011 அன்று மன்னார் மறை மாவட்ட திருச்சபையின் கத்தோலிலிக்க பங்குத் தந்தை மற்றும் இரு பாதிரியார்கள் The Lessons Learnt and Reconciliation Commission போரின் அவலங்களை ஆதாரங்களுடன், ஆலோசனைகளையும் இணைத்து பத்து பக்க அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.


இணையத்தில் இவ்வறிக்கையை முழுமையாக பதிவிறக்கம் செய்து வாசிக்கலாம்.ஈழம் குறித்து உலகப் பிரமுகர்களின் கருத்துக்கள் (பக்.175); தமிழினப் படுகொலைகள் (பக்.176-216); 1956 ஆம் ஆண்டு முதல் 2009 வரை காலத்தில் நடத்தப் பெற்ற பேச்சு வார்த்தைகள், ஒப்பந்தங்களின் பட்டியல் (பக்.207); ஈழத் தமிழர்களின் அறவழிப் போராட்டங்கள் (பக்.211); கி.மு. 500 லிருந்து கி.பி. 1948 வரையிலான இலங்கைத் தீவில் தமிழர்களின் பூர்வீகம் (பக்.212) என அட்டவணைகளாகத் தரப்பட்டுள்ளன.


இலங்கை அதிபரை சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்றவாளியாக அல்ல இன அழிப்புக் குற்றம் சாட்டி உலகறியச் செய்ய வேண்டும். போர்குற்றவாளி என்றால் தப்பித்துக் கொள்ள வழிகள் பல உண்டு. யூத இனப்படுகொலை, செர்பேனிக்கா படுகொலை, ருவாண்டா இனப்படுகொலை, குர்தீஷ் (ஈராக்) இனப்படுகொலை, என அணிவகுத்து வருகின்ற கொலைகளை விட ஈழத்தமிழினப் படுகொலை உலக அளவில் தாக்கங்களை ஏற்படுத்தும். அத்தாக்கத்தினை முன்வைக்கும் இந்த ஆவணம் வரலாற்றில் இடம் பெறும். சர்வதேச நீதிமன்றத்தில் இந்த ஆவணம் ஆதாரப்பூர்வமான மறுக்க இயலாத ஒன்றாகவும் திகழும்.


என்ன செய்யலாம் இதற்காக?
ஆசிரியர்: ஜெ.பிரபாகரன்
வெளியீடு:பென்னி குயிக் பதிப்பகம்
4/1411 செந்தில் நாதன் தெரு
தாசில்தார் நகர்
மதுரை-625020.
பக்கங்கள்: 216, விலை ரூ.500/- .


 குரு . ராதாகிருஷ்ணன்

நன்றி : வடக்கு வாசல் - மார்ச் 2011

Sunday 6 March 2011

வெற்றி யாருக்கு ?


கமலக்கண்ணன் அவர் பிறந்த கிராமத்தின் முதல் பட்டதாரி . எழுத்தராக பணியில் சேர்ந்து கண்காணிப்பாளராக உயர்ந்தவர் . அவர் பணிபுரிந்த அலுவலகத்தில் இலஞ்சம் பெறாதவர் . கண்டிப்பானவர்.

அவர் பெறுகிற ஊதியம் தான் மனைவி லட்சுமி , மகன் ராகேஷ் , மகள் ரம்யா என நால்வரையும் காப்பாற்றுகிறது .

வெற்றி பெறும் ஒரு ஆணின் பின்னால் நிச்சயம் ஒரு பெண் இருப்பாள் என்பதற்கு அவர் மனைவி நல்ல உதாரணம் .

கல்லூரியில் பொருளாதாரம் மூன்றாம் வருடத்தில் மகனும் , உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பில் மகளும் படித்து வருகின்றனர்.

குடும்பப் பாரம்பரியம் , கெளரவம் பற்றி பிள்ளைகளுக்குச் சொல்லிச் சொல்லி வளர்த்தவர் கமலக்கண்ணன் தம்பதியர்.

'லட்சுமி ... லட்சுமி ... !' கணவனின் குரல் கேட்டு கூடத்துக்கு வந்தாள் மனைவி .

ராகேஷ் பத்தி பிரின்சிபல் என்னிடம் ஏதோ சொல்லணுமாம். வந்து நேரில் பார்க்க சொல்லி கடிதம் வந்திருக்கு .

படிப்பு இந்த வருடம் கடைசி இல்லையா ? ஏதாச்சும் சொல்லணும்னு அவருக்குத் தோணியிருக்கலாம் . ஆபீஸ் போறதுக்கு முன்னாடி போய் பார்த்துட்டுத் தான் போங்களேன் ..

தொலைபேசியில் அலுவலகத்துக்குத் தாமதமாக வர அனுமதி சொன்னார்.

'வாங்க ... கமலக்கண்ணன் ! உங்க பையன் ராகேஷ் கல்லூரிக்கு வந்து இருபது நாட்களுக்கு மேலாகிறது . இதோ வருகைப் பதிவேட்டைப் பாருங்க ... அவன் கவனமெல்லாம் வேறு பாதையில் போகிறது என் நினைக்கிறேன் . கூப்பிட்டு நேரில் கேட்டால் பல்வேறு காரணங்கள் . எதுவுமே நிஜமாக எனக்குத் தெரியவில்லை . பைனல் இயர் ... அதான் ... கவனியுங்க ! '

' நன்றி ஐயா ... அவசியம் கவனம் செலுத்துவேன். '

அலுவலகப் பணிகளில் அவரது நாட்டம் செல்லவில்லை . விடுப்புப் போட்டு விட்டு வீட்டில் போய் சும்மா இருக்கவும் அவர் மனது இடம் தரவில்லை . கல்லூரிக்கு போகும் பையனின் விருப்பம் என்னவாக இருக்கும் ? யோசிக்க யோசிக்க குழப்பம் தான் மிஞ்சியது .

வீடு சென்றவர் பணிமுடித்து பையனின் வருகைக்காக கூடத்திலே அமர்ந்திருந்தார்.

ராகேஷ் வந்தான்.

' என்ன ராகேஷ் ? நான் கேள்விப்படதெல்லாம் நிஜமா ? இருபது நாளா நீ காலேஜுக்குப் போகவில்லையாமே ? எங்க போற ? என்ன செய்யறே ?'

'யாராவது எதையாவது சொன்னதாலே என்னை நீங்க நிக்க வெச்சு விசாரணை நடத்துறீங்க ! உங்களுக்கு நான் பட்டதாரியா வரணும் . அது நடக்கும் . சும்மா கவலைப்படாதீங்கப்பா !'

ஆத்திரத்தை அடக்கிக் கொள்ள பார்த்தார் . இயலவில்லை . மீண்டும் ஏதோ சொல்ல முயன்றான் ராகேஷ் . எழுந்தார் . அவன் கன்னத்தில் மாற்றி மாற்றி அறைந்தார்.

' அப்பா ... ! என்ற அலறல் கேட்ட லட்சுமி கூடத்துக்கு வந்தாள்.

' ஏங்க ? பையனை அடிக்கிறீங்க ?

' ராகேஷ் உன் அறைக்குப் போ ... ' எனச் சொல்லி விட்டு கணவன் பக்கத்தில் வந்தாள் .

தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையைக் கைநீட்டி அடிப்பது சரியல்ல என் இங்கிதமாகச் சொன்னாள்.

'அவன்... என்ன பேசுறான் தெரியுமா ? பிரின்சிபாலின் வார்த்தைகள் கேட்டு இவனை விசாரித்தால் , திமிரா பதில் சொல்றான் !

லட்சுமி மெளனமானாள் .

விடிந்தது . ராகேஷ் அறைக் கதவு திறந்து கிடந்தது . படுக்கை காலியாக இருந்தது . மேசையின் மீது ஒரு கடிதம் . எடுத்தார் ... படித்தார் ...

' நான் வெளியேறுகிறேன் . என் வழியில் யார் குறுக்கிட்டாலும் எனக்குப் பிடிக்காது . தற்கொலை செய்து கொள்ள மாட்டேன் . ஆனால் வாழ்ந்து காட்டுவேன் . தேட வேண்டாம் ... இப்படிக்கு ராகேஷ்.'

***

மகனின் வெற்றிடம் லட்சுமியை படுக்கையில் போட்டு விட்டது . பரிசோதித்த மருத்துவர்கள் பக்கவாதம் எனச் சொல்லி மாத்திரைகள், கை, கால்களில் தேய்க்கத் தைலங்கள் என எழுதினார்கள் .

அவருக்கு மட்டும் அந்தக் கவலை இல்லையா ? மனத்தைத் திடப்படுத்திக் கொண்டார் . வீட்டு வேலைக்கெனத் தனி ஆள் போடப்பட்டது . ரம்யா தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு பள்ளிக்குச் சென்று வந்தாள் .

பணிமுடித்து வீடு வந்ததும் மனைவியின் அருகில் அமர்ந்து பேசுவார் கமலக்கண்ணன் . மகனைப் பற்றியே தான் உரையாடல் இருக்கும் . சமாதானம் சொல்வார் .

' நேர்மையும் , கண்டிப்பும் இக்காலத்துப் பிள்ளைகளுக்குக் கசக்கின்றன . அவன் திருந்தி வருவானா ? இல்லை ...'

எட்டு நாள்களுக்குப் பின் லட்சுமியின் உயிர் மருத்துவமனையிலேயே பிரிந்தது . மகள் ரம்யாவுக்கு ஆறுதல் சொல்ல அவரால் இயலவில்லை . அவளுக்கு அம்மா தான் எல்லாம் .

வேகமாகச் சடங்குகளும் முடிந்து விட்டன . மகனின் வருகை பற்றி எதிர்பார்த்த உறவும் , சுற்றமும் கமலக்கண்ணனையே கொள்ளி போட வைத்தது .

இருபது நாளைக்குப் பின் அடுத்த வீடு திரும்பியது . பிளஸ் டூ படிக்கும் ரம்யா பள்ளிக்கு ஒழுங்காகச் சென்று வந்தாள்.

நாற்பது வருடத் தாம்பத்யம் . விரைவாகப் பெற்று வளர்ந்த பிள்ளைகள் . தற்போதைய மனைவியின் வெற்றிடம் , கமலக்கண்ணன் முடங்கிப் போனார் .

இப்போதெல்லாம் அவருக்கு இரவில் தூக்கமில்லை ! ரத்தக் கொதிப்பும் , சர்க்கரை நோயும் அவரைப் பங்கு போட்டன . மருத்துவர் தந்த மாத்திரைப் பட்டியல் , ரத்தப் பரிசோதனை எனப் பற்பல சோதனைச் சீட்டுகள் கோப்பாக உருவெடுத்தன . இரவில் மாத்திரை போட்டால் தான் தூக்கம் வரும் நிலைக்கு வந்து விட்டார் அவர்.

கைவசம் நிறைய மாத்திரைகள் , மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார் .

***

கதவு தட்டப்படும் ஓசை . இரவு நேரத்தில் யார் தட்டுவது ? எழுந்து திறந்தார்.

முகம் நிறைய தாடியுடன் , ஜீன்ஸ் , டீ சர்ட் சகிதம் ஓடின . அவனுடன் நான்கு பேர் . அவர்களும் அதே போலத் தான் .

' என்னைத் தெரியலியா அரைகுறை அப்பா !' ராகேஷ் தான் , குரல் அடையாளம் காட்டியது .'

'அப்பா ... ! அம்மா ... தங்கையெல்லாம் எங்கே ?' குரல் கேட்டு ரம்யா தேம்பி தேம்பி வந்தாள் .

' அண்ணா ... அம்மா செத்துட்டாங்க ... ' என்றதும் ராகேஷின் கண்களில் நீர் தளும்பின .

' இவர்கள் என் நண்பர்கள் . நாங்க ஒரு புராஜெக்ட்டுக்காக வந்திருக்கோம் . இங்கே தான் அது நடக்கப் போகிறது . உங்களை எல்லாம் பார்க்கணும்னு தோணிச்சி .. அதான் வந்தேன் .'

இந்தியில் அவர்களிடம் ராகேஷ் ஏதோ சொன்னான் . கமலக்கண்ணனுக்கு புரியவில்லை . தளர்ந்து போன அவருக்கு எல்லாமே புதிராகவே தெரிந்தன .

அனைவரும் ராகேஷ் காண்பித்த அறைக்குச் சென்றனர் . அனைவரும் இரவு முழுவதுமாக நிறைய பேச்சுகள். வரைபடம் வைத்தும் தீவிரமாகப் பேசிக் கொண்டனர் . இந்தியிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறிக் கேட்டது . காலை , மதியம் , இரவு அவர்களுக்கு எல்லாமே உணவு விடுதியிலிருந்து வாங்கி வந்து தந்தான் ராகேஷ் .சன்னல் வழியாக கவனித்த கமலக்கண்ணன் மனத்தில் பிரின்சிபாலின் சொற்கள் திரைப்படம் போல odina .

முடிவுக்கு வந்தார் . ஏதோ தவறான ஒன்று நடக்கத் திட்டமிடப்படுகிறது . இதைத் தடுக்க என்ன செய்யலாம் ? நாளை இரவு தான் செயல்படுத்தப் போவதாக அவர் காதில் விழுந்தன அரைகுறை வார்த்தைகள் .

***
விடிந்தது. சுறுசுறுப்பானார் . அறைக்குச் சென்று தன்னிடமுள்ள மாத்திரைகளில் தூக்க மாத்திரைகளை மட்டும் எண்ணினார் . பால்காரனிடம் ஒன்றரை விட்டர் பால் வாங்கினார் . ரம்யாவிடம் அஞ்சறை பெட்டியிலிருக்கும் கசகசாவை அள்ளி மைப் போல அரைக்கச் சொன்னார் .

' ராகேஷ் ... உனக்கும் நண்பர்களுக்கும் நான் இன்றிரவு பால் தரப்போகிறேன் . அவசியம் அவர்களும் , நீயும் சாப்பிட வேண்டும் .. '

'சரிப்பா...' ஐந்து டம்ளர்களில் முப்பது தூக்க மாத்திரைகளையும் , கசகசா விழுதையும் சரி பங்காகக் கலந்தார் . மகனின் அறைக்குச் சென்று எல்லோரிடமும் டம்ளர்களைத் தந்தார் . பால் டம்ளர்கள் கை மாறின . நிம்மதியாகப் படுக்கச் சென்றார் கமலக்கண்ணன் .

***
வீட்டுக்கு அருகிலுள்ள ஆற்றுப் பாலத்தின் மீது அதிவேக ரயில் தடதடத்துச் சென்ற ஒலி கேட்டு விழித்தார் . மகனின் அறைப்பக்கம் பார்த்தார். எல்லோரும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர் . ரயில் பாலத்தைத் தகர்க்க இருந்த தீவிரவாதியாக மாறிவிட்ட மகனையும் , இதர தீவிரவாதிகளையும் ஜெயித்து விட்டார் அவர் .

அடுத்தநாள் . செய்தித்தாள்களில் தலைப்பு செய்திகள் . நிகழவிருந்த ரயில் பாலம் தகர்ப்பு , பல பயணிகளின் சாவுகளைத் தடுத்த பெருமை கமலக்கண்னையையே சாரும் .

நன்றி : புதுகைத் தென்றல் - மே 2008

Friday 4 March 2011

இசைக்குறிப்புகளை மொழி பெயர்த்தல்

“இசைக் குறிப்புகளை மொழி பெயர்த்தல்’’ எனும் தலைப்பைக் கொண்ட கவிதைத் தொகுப்பின் படைப்பாளி கவிஞர் வே. முத்துக்குமார்.

இவர் நெல்லை மண்ணுக்குச் சொந்தக்காரர். இவர் வடக்கு வாசல், கல்கி, மங்கையர் மலர், உயிர்மை, பரிசல், கதைமலர், உண்மை, கதை சொல்லி, சூர்யகாந்தி, விழிப்புணர்வு, குமுதம், நவீன விருட்சம், முத்துக்கமலம் மற்றும் இணைய இதழ்களான உயிரோசை, கீற்று, நட்பூ ஆகியவைகளில் 2002 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டு முடிய வெளிவந்துள்ள தன் கவிதைகளை தொகுத்துத் தந்துள்ளார். இத்தொகுதியில் 86 கவிதைகள் உண்டு.

இவரது கவிதைகளை அவ்வப்போது படித்தாலும், ஒரு சேர அத்துணைக் கவிதைகளையும் வாசகர்கள் படிக்க ஒரே தொகுப்பாக தந்துள்ளது சிறப்பு. 86ல் 26 கவிதைகளுக்குத் தலைப்புகளே தரப்படவில்லை. தலைப்பற்ற கவிதைகள் மனங்களை வருடிச் செல்லும், படிக்கும் வேளையில்.




“உயிர்மை’’ இதழில் வெளியான கவிதையே (பக் 86) முத்துக்குமாருக்கு 61 வரிகள், 4 பக்கம் (பக். 24-27) கவிதை மற்றும் நாலே வரிகளிலும் (பக் 50) கவிதைகளை படைக்கத் தெரியும் என்பதை நிதர்சனமாக்கி உள்ளன.


அம்மா, உறவுகள், கடவுள், பூர்வீக வீடு, பணம் இவையெல்லாம் தனிப்பட்ட மனித வெளிப்பாடுகளாகும். இவை சம்பந்தமான கவிதைகளை வாசிப்பவன் தன்னில் கடந்த, நிகழ்கால நிகழ்வுகளைப் பின்னோக்கி செல்ல வைக்கின்றன.


தொகுதியின் துவக்கத்திலேயே கவிஞர் முத்துக்குமார் கட்டியங்கூறி விடுகிறார் (பக் 3-4). வாசிப்பை நேசிப்பவர்கள் கவிஞரின் தன்னிலை விளக்கத்தைப் படித்தபின், கவிதைகளை வாசிக்க வேண்டும்.


தன் வாழ்வில் தனக்கு மட்டுமே வாய்த்த சில அபூர்வத் தருணங்களைத் தாமிர பரணியின் நதி நீராய் உள்ளங்கையில் தேக்கி தன் சக மனிதனுக்கு மாற்றுகிறார் என பதிப்பாளரின் கூற்று அருமையான வாசகமாகும்.


நல்ல இக்கவிதைத் தொகுப்பை வழமையான நேர்த்தி, கவனிப்புகளோடு சிறந்த வகையில் வெளியிட்டுள்ள ‘வம்சி புக்ஸ்’ பதிப்பகத்துக்குப் பாராட்டுகள். கவிதைகளை நேசிக்கும் மனம் படைத்தவர்கள் அவசியம் படிக்க வேண்டிய தொகுப்பு.


இசைக்குறிப்புகளை மொழி பெயர்த்தல் (கவிதைகள்)வே.முத்துக்குமார்வெளியீடு: வம்சி புக்ஸ்19 டி.எம். சாரோன், திருவண்ணாமலை.செல்: 9444867023விலை ரூ.90/-


குரு.ராதாகிருஷ்ணன்

நன்றி : வடக்கு வாசல் - பிப்ரவரி 2011

கிருஷியின் சிருஷ்டிகள்

மனிதர்களின் தோற்றம், சமூகம், கலாச்சார வளர்ச்சி மற்றும் குணங்களைப் பற்றிய அறிவியல் பிரிவு ‘ஆந்த்ரபாலிஜி' அல்லது மானிடவியல் என அழைக்கப்படுகிறது. இத்துறை கடந்த 40 லட்சம் ஆண்டுகளில் மனித இனம் சார்ந்த உயிரியல் பூர்வமான தகவல்களும் ஆராய்வில் எடுத்துக் கொண்டுள்ளன.
முதன் முதலில் மனித இனம் தோன்றிய காலங்களில் ஓசை (சப்தம்) மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொண்டனர் என மானிடவியலார் கண்டறிந்த உண்மை ஆகும். மனிதன் ஓசைகளைப் பிறப்பித்து பரிணாம வளர்ச்சியின் வழி பாட ஆரம்பித்திருக்கலாம். வர, வர அதுவே பாடல், கவிதை என உருமாறி வந்துள்ளன என்பதுவும் மானிடவியலாரின் கூற்று எனப்படுகிறது.


மகாகவி பாரதி ஓசை நயம், சந்தம் மிக்க பல கவிதைகளை நமக்கு வழங்கியிருக்கிறார். அவரிடமிருந்து பாவேந்தர் பாரதிதாசன் அவர் வழி கவிஞர்கள் என தொடருகின்ற நிலை நமக்குத் தெரிந்ததே.
பேனா பிடித்தவர் எல்லாம் பெர்னார்டுஷா ஆகிவிட முடியுமா! கவிஞர்களில் சிலர் ‘அத்தி பூத்தது போல்' என சொல்வார்களே, அப்படி சிலர் அவ்வப்போது நமக்குக் கிடைப்பது உண்டு. எனக்கு அப்படி கிடைத்தவர்தான் கவிஞர் கிருஷி.

பாரதி வாழ்ந்த வருடங்கள் 39 தான் (1882-1921). ஓசை நயமும், சந்தம் மிக்க பல்வகை கவிதைகளை நமக்குத் தந்து விட்டு சென்றவர்.

நெல்லைக் கவிஞர் ‘கிருஷி'யின் "மழை வரும் பாதையில்' எனும் கவிதைத் தொகுதியை வாசிக்கும் வாய்ப்பினை நான் பெற்றேன். இந்தத் தொகுதியில் மதம், மனித நேயம், இயற்கையின் நேசிப்பு, தீவிரவாதம், பெண்ணியம் இன்னும் இன்னும் பல கவிதைகளை 53 தலைப்புகளில் வழங்கியுள்ளார்.
மேலும் இத்தொகுதிக்கு ‘தீங்கின்றி நாடெல்லாம்' ஆய்வறிஞர் பேரா.தொ.பரமசிவன், ‘கல் சிலேட்டில் வானவில்' எனும் தலைப்பில் கவிஞர் கல்யாண்ஜியும் செழுமையும் அருமைகளும் நிறைந்த அணிந்துரைகளை வழங்கியுள்ளனர்.

இப்போது வெளிவரும் கவிதை, உரைநடை நூல்கள் எல்லாவற்றையும் இன்றைய வாசகன் இலகுவாக வாங்கி விடுவது இல்லை. நூலாசிரியர் பேர் பெற்றவரா, நூலின் அணிந்துரை, பக்க அளவு, முகப்பு பின் அட்டை வடிவமைப்பு இவையெல்லாம் வாசகருக்கு பிடித்தால் தான் விலை போகும். அதற்கு தேவை தரமானதாள், அச்சு நேர்த்தி, முழுமையான மெய்பு திருத்தம், கட்டமைப்பு இவைகள் தான் இன்றைய தேவைகள்.

இவைகளை எல்லாம் கருத்தில் கவனமிருந்தி மிகமிக நல்ல முறையில் கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ள திருவண்ணாமலை ‘வம்சி புக்ஸ்' பதிப்பகத்தாருக்கு என் பாராட்டுகள்.

‘இயற்கை'யை சிறக்கச் செய்யும் கவிஞரின் ‘மழை' வாசகனுக்கு சொல்கிற ரகசியம்: (பக்.17)

மலைமுகடுகளிலும்,விசும்புவெளியிலும்கார்மேகங்களால்மிதந்து தவழ்ந்ததும்நான் தான்தாழ்ந்த நிலம் நோக்கிசதா தாவிச் செல்வதும்பள்ளங்களை நிரப்பிப் பாய்வதும்என் சுபாவம்குளங்களில் ஏரிகளில்நிறைந்து தளும்புகிறதுஎன் மனம்

‘மதம்' பற்றிய கவிஞரின் எண்ணங்களை படிக்க வேண்டும் (பக்.71) அவசியமும், அவசரமும் தேவை என்பது என் எண்ணம்.
குண்டு வைத்தவனுக்கு / உண்டு மதம் / வெடிக்கும் குண்டுகளுக்கு / ஏது மதம்?

வெடித்துச் சிதறும் / மனிதப் பிண்டங்களுக்கு / என்ன மத அடையாளம் / ரத்தச் சிதறல் தவிர!

வான் கிழிக்கும் மரண ஓலம் / யாரை அழைக்கும் / அம்மா தவிர!
பற்றிப்படரும் / நெருப்புச் சுவாலையில் / சுற்றி வளைக்கும் கரும்புகையில் / எந்தக் கடவுள் தோன்றக்கூடும்!

கிளம்பி வரும் எந்த மதம் / ஆளப்போகிறது நாளை / பிணக்குவியல் மீது / சிம்மாசனம் போட்டு நிலம் பற்றி எரியும் / சடலக் குவியலில் - உன் சகோதரியின் / கிழிந்த மேனி / உன்னையும் அழைக்கக்கூடும்.

உன் நண்பனின் குழந்தை / கிடக்கக் கூடும் / கரிக்கட்டையாய் ஆம் சகோதரனே.

பாரதியார் "ஆசை முகம் மறந்து போச்சே'' என அவர் காலத்திய வட்டார வழக்கை சொன்னார்.

கவிஞர் கிருஷி சொல்கிறார்: "செத்த நேரம் / தலை சாய்த்துத் / தைப்பாற ஒரு / குட்டிச் சுவருமில்லை "அகாலத்தின் பௌர்ணமி'' எனும் கவிதையினுடே வருகிறது. (பக்.94) இவ்வரிகள்.

அருமை, எளிமை, சுருக்கம் கொண்ட கவிதைகளை யாத்துத் தந்த கவிஞர் ‘கிருஷி' அவர்களை பாராட்டுகிற வகையில் எனக்கு தகுதியில்லை தான். இருப்பினும் இது போன்ற பல தொகுதிகளை இவர் தர வேண்டும் தமிழ் உலகுக்கு என்ற விருப்பம் எனக்கு நிறைய உண்டு.


"போர் சொல்லும் கவிஞர்'' என வரும் காலங்களில் ‘கிருஷி' போற்றப்படுவார். என் முடிந்த முடிவாகும் இது.

"மழை வரும் பாதையில்'' - கவிதை - வெளியீடு: வம்சி புக்ஸ், 19 டி.என்.சாரோன், திருவண்ணாமலை. பக்கங்கள் 112, விலை 2 ரூ. 60/-


குரு.ராதாகிருஷ்ணன்

நன்றி : யமுனை இணைய இதழ் - பிப்ரவரி 16 - 28, 2011