Tuesday 5 July 2011

யார் அடிமை


 ( இலக்கியச் சிறகு இதழில் வெளியான சிறுகதை ) 


தாரிணி முதுகலை தமிழ் இலக்கியம் படிக்கிறாள். தொழிலதிபர் தாமோதரன், கவிதா தம்பதியரின் ஒரே வாரிசு எது வேண்டுமென்றாலும் நொடிப் பொழுதில் கொண்டு வந்து சேர்க்கும் பணியாட்கள் எங்கு செல்ல நினைத்தாலும் தாரிணிக்கு மட்டும் மகிழுந்து. அதை ஓட்டும் திறமையும் அவளுக்கு உண்டு. அவள் இன்றைய மங்கை.

கல்லூரி வாசலில் அழகாக, ஒயிலாக வந்திறங்கும் அவளுக்கு நிறைய தோழிகள். உடன் வந்த ஓட்டுநர் அதே மகிழுந்தில் வீடு சென்று மதிய உணவுடன் திரும்புவார். மூன்று பேருக்கான அறுசுவை உணவு வகையறாக்கள் வந்திறங்கும். உடனிருந்து அந்த உணவை ருசிக்க தாரிணியின் தோழிகள் முறைபோட்டு செல்வதுண்டு.

 உள்ளுக்குள் தாரிணிக்கு இது கர்வத்தை தந்தது. எல்லா விசயத்திலும் ஆணுக்குப் பெண் சளைத்தவள் இல்லை என்பதை அவளது உடை, நடை, பாவனைகள் காட்டின.

அவளது வாய் மூடாத பேச்சு தோழிகளை அசர வைத்து விடும். தமிழ்ப்பாடம் நடத்தும் பேராசிரியை பிருந்தாதான் தமிழ் புலத்தலைவர். அனைத்து சங்க இலக்கியங்கள் தவிர தற்கால இலக்கியங்களையும் மாணவிகளிடம் கொண்டு செல்பவரும் அவரே.

கற்பிதங்களிலும், கற்பித்தலிலும் மென்மை காணலாம். அழகிலும் குறை இல்லை. பெண்களே பெண்ணை (அவளை) காமுறச் செய்யும் அழகு. முதிர்கன்னி, வகுப்பறையில் சில வேளைகளில் மாணவிகளை பாடம் நடத்தச் சொல்லி பார்ப்பவர் பேரா. பிருந்தா. வகுப்பறையில் பட்டிமன்ற நிகழ்வுகளையும் நடத்தச் சொல்லி கவனிப்பதுவும் உண்டு.

பட்டிமன்றத்தின் தலைப்புகள் பெண்ணியம் சார்ந்தவைதான் அதிகமாக அலசப்படும்.
பேரா. பிருந்தா தாரிணியை அவரது அறைக்கு அழைப்பதாக ஏவலர் சொல்ல கணக்கு வகுப்பிலிருந்து அனுப்பப்பட்டாள்.

'தாரிணி – அனைத்து கல்லூரிகளுக்கு இடையே பேச்சுப்போட்டி நடக்க இருக்கிறது – நம் கல்லூரியின் சார்பாக நீ பேச வேண்டும் - உன் பெயரைப் பரிந்துரைத்து கல்லூரி முதல்வருக்கு அனுப்பி விட்டேன்'.

'நன்றி அம்மா ........ என்ன தலைப்பில் பேச வேண்டும்' சொல்லுங்கள்?

உனக்குப் பிடித்த தலைப்பு தான் .... 'ஆணுக்குப் பெண் அடிமையில்லை' ......

'உங்களின் விருப்பம்தான் என் விருப்பம் கலந்து கொள்கிறேன். தலைப்புக்கான குறிப்புக்களை சொல்லுங்களேன்.'

'தாரிணி ... உனக்கு ஏற்ற தலைப்பு தான் .... காந்தி, பாரதி கூறியவைகளைச் சொல்வதோடு, பெண்களை அடிமைப்படுத்தும் போக்கு பற்றி பேசினாலே போதும். கால அவகாசம் இருபது நிமிடங்கள்தான். உறுதியாக ..... உன் பேச்சு சிறப்பாக இருக்கும் ....... வாழ்த்துக்கள்  .....'

'நன்றி ....... அம்மா ....'

'வகுப்பில் ..... நடக்கும் பட்டிமன்றங்களில் உன் பேச்சு நன்றாக இருக்கிறது ..... அதை உத்தேசித்துத்தான் உன் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. போட்டி நடைபெறும் இடம், நாள், காலம் எல்லாம் அடுத்த வாரத்தில் அறிவிப்பார்கள். உன் குறிப்புகளை சேகரிக்க நம் கல்லூரி நூலகம் உதவும்...'

விடைபெற்று நடந்தாள். பேட்டி பற்றிய அறிவிப்பு வந்து விட்டது. சுற்றறிக்கை கல்லூரி அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. பேச்சுப் போட்டியில் தாரிணி மட்டுமே வெல்லப் போகிறாள் என மாணவிகள் நிறை பேர் பேசிக் கொண்டனர்.   

பச்சையப்பன் கல்லூரி மைய மண்டபம், மெல்லப் பறந்து வரும் வண்ணத்துப் பூச்சிகளை வியப்புடன் நோக்கும் மாணவர் கூட்டம். அவர்களிடையே கூச்சலும், கும்மாளமும் சேர்ந்து கும்மியடிக்கின்றன.

கல்லூரி முதல்வர் ஒலிபெருக்கியில் கல்லூரிக்குப் பெருமை சேர்க்கும் வகையில் பேச்சுப்போட்டியை இடையூறுகள் இன்றி நடத்தித்தர மாணவர்களை கேட்டுக் கொண்டனர்.

அனைத்துக் கல்லூரி பேராசியர்கள், பேராசிரியைகள் மாணவ, மாணவிகள், பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் என நிறைய கூட்டம். தாரிணியின் பெற்றோரும் வந்திருந்தனர். பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் ஒருங்கிணைத்தார். சற்றொப்ப பத்து கல்லூரிகளில் தெரிவு செய்யப்பட்டவர்கள் பேசி முடித்தனர். சில மாணவிகள் தலைப்புக்கு சம்பந்தமின்றி பேசினர்.

ராணிமேரிக் கல்லூரி தமிழ் இலக்கிய முதுகலை மாணவி தாரிணி பேச அழைக்கப்பட்டாள். மேடை ஏறியதும் எல்லோருக்கும் வணக்கம் கூறி பேசினாள்.

'இன்றைய சூழலில் எல்லா மதங்களும் பெண்களை பாவத்தின் பிறப்பிடம் எனும் பார்வையை வரித்துக் கொண்டு அதன் வழி கருத்துக்களை மதவாதிகளும் சொல்கின்றனர். சூது, மது, மாது இம் மூன்றும் மனிதனை மாய்க்கும் பெரும் தீமைகள். இவ்விதமாக விடாமல் சொல்லியே பெண்களை ஆண்கள் அடிமைகளாக நடத்துகின்ற சூழல் உருவாக்கப்பட்டு விட்டன.

அடிப்படை இதே போல உருவாக்கம் ஆனதால் சமய சாத்திரங்கள் இதையே வலியுறுத்துகின்றன. இதன் பரிணாம வளர்ச்சியே பெண்ணைப் பெற்றவர் ஆணிடம் பணத்துக்குத் தாரை வார்க்கும் நிலை ஏற்பட்டது. பெண், பிள்ளைகளைப் பெறும் சாதனமாகவும், அதனால் ஆணின் நிலை உயர்வானதாகச் சிறப்பிக்கப்படுகிறது. என்னைப் பொறுத்த வரையில் பெண்ணின் பிறவிநோக்கம் ஆணுக்கு எதிராகப் போரிடுவதும் தான். ஆம், போராடித்தான் எதையும் பெற வேண்டும். சமுதாயம் பெண்களைக் குடும்ப அடிமைகளாகவும், காமப் பொருளாகவும் பயன்படுத்துகிறது. பொருளாதாரச் சுதந்திரம் பெண்களுக்கு தரப்படவில்லை. ஆகவே ஆண்களிடமிருந்து பிரிந்து வாழும் உரிமையை பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். பாலியல் சுதந்திரம், கட்டுப்பாடற்ற விடுதலை என பெண்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஆண்களுக்கு அப்போது பெண்களின் மகத்துவம் புரியும். புரட்சிப் பெண்களாகவும் தோன்றுவார்.'

பேச்சை முடித்துக் கொண்டாள் தாரிணி. மாணவிகளின் கையொலிகள் அவளுக்கு நிறையக் கிடைத்தன. அடுத்து பச்சையப்பன் கல்லூரி முதுகலை தமிழ் இலக்கிய மாணவன் அரவிந்தன் அழைக்கப்பட்டான்.

சம்பிரதாயமான வணக்கங்களுடன் பேச்சைத் துவங்கினான் 'காந்தி சொன்னதை இங்கு நினைவுகூர வேண்டும் இறைவன் படைப்பில் அற்புதமான படைப்பு பெண். மென்மையும். மேன்மையும் நிறைந்த படைப்பு உலகில் வேறு எதுவுமில்லை. இதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பேசுவது பெண்களுக்கு அழகல்ல... அதே போல வீட்டையும், கணவனையும், பெற்றோரையும் உடன் பிறந்தவரையும் கட்டி ஆள்பவள் பெண் என்கிறது ரிக்வேதம், இங்கு மட்டுமல்ல உலகெங்கிலும் பெண் தாழ்வாகவும், ஆணை மேலாகவும் கருதி நடத்தும் முறைமை ஏற்பட்டிருப்பது முற்றிலும் தவறு. அது துன்பங்களுக்கு எல்லாம் அடிப்படை அநீதிக்கெல்லாம் உச்சம், கலியுகத்தின் பிறப்பு, இதை வலியுறுத்தியது நம் மகாகவி பாரதிதாசன்.

பெண்களுக்கு ஜீவன் உண்டு. மனம் உண்டு, புத்தி உண்டு, ஜம்புலன்கள் உண்டு அவர்கள் செத்த யந்திரங்கள் அல்லர். உயிருள்ள செடி, கொடிகளைப் போலவும் அல்லர்.  சாதாரணமாக ஆண் மாதிரியாகவே தான் புறவுறுப்புகளில் தான் மாறுதல். ஆத்மா ஒரே மாதிரி என்றும் சொன்னதும் நம் பாரதிதாசன். ஆணும் பெண்ணும் சம நிலையில் போற்றப்பட வேண்டும் எனும் வாதம் சரியானாலும் இருவரும் இயற்கையின் நியதிப்படி ஒரே தன்மையராக இருக்க வாய்ப்பே இல்லை.

ஆண்கள் செய்யும் அனைத்தையும் பெண்கள் செய்ய இயலும் என்று அடம் பிடிப்பது சரியில்லை. நம் சமூகம் பெண்ணுக்கு எதிராக பல காலமாக நிகழ்த்தி வரும் கொடுமைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று போராடுவதில் தவறு கிடையாது அதே நேரத்தில் பெண், மகளாகத் தோன்றி, மனைவியாக வாழ்ந்து, தாயாகத் தொண்டு செய்து தெய்வமாகக் காட்சி தருபவள் என்று பெண்ணின் பெருமை நூலில் திரு.வி.க. வலியுறுத்துகிறார்.

பெண்ணின் பிறவிநோக்கம் ஆணுக்கு எதிராகப் போராடுவது அல்ல. ஒரு பாதியல் நிற்கும் பெண் மறுபாதி ஆணுடன் இணைந்து வாழ்வில் இன்பத்தைப் பெருக்கி உலகை உய்விப்பதுதான் அவள் நெஞ்சத்தில் நேர்ந்து கொள்ள வேண்டிய நேர்ச்சியாகும். ஆணுடன் இணைந்து பெண் அன்பு செய்தல் வேண்டும்.

பெண் ஆணோடு உரிமை பூண்டு வாழ வகுக்கப்பட்டதுதான் இல்லறம்' நன்றி கூறி பேச்சை முடித்தான் அரவிந்தன். முதற் பரிசும் அவனுக்கே.

அரவிந்தனின் பேச்சு பேராசிரியை பிருந்தாவின் மனதை சலனப்படுத்தியது.

விரைவாக திருமணம் செய்துகொள்ள அவரது மனம் விழைந்தது.
    

குரு. ராதாகிருஷ்ணன்

நன்றி : இலக்கிய சிறகு சிற்றிதழ்