Friday 23 December 2011

மாற்றங்களுக்கு மாற வேண்டும்



வாழ்க்கை என்பது சீட்டு விளையாட்டைப் போன்றது . விளையாடுபவர்களின் கைகளில் சீட்டுகள் கலவையாக வந்து விழுகின்றன . தேவையான சீட்டுகள் வரவில்லையே என்று விசனப்படுவதில்லை .

கையிலுள்ள சீட்டுகளைப் போட்டும், எடுத்தும் விளையாடுவது மரபு . இறுதியில் ஒருவர் வெற்றி பெறுகிறார்.

தோல்வி பெற்றவர்கள் சோர்ந்து போவதில்லை . மீண்டும் சீட்டுகள் கலைக்கப்படுகின்றன . அடுத்து நடைபெறும் ஆட்டத்தில் வேறொருவர் வெற்றி பெறுகிறார். சென்ற ஆட்டத்தில் வெற்றி பெற்றவர் அடுத்த ஆட்டத்தில் தோல்வி பெறுகிறார்.

வெற்றியும் , தோல்வியும் மாறி மாறி வருகின்றன . திறமையாகச் சிந்திப்பவர்கள் வெற்றி பெறுவர். சோர்ந்து போகிறவர்கள் வாழ்க்கையில் தோல்விகளைச் சந்திக்கின்றனர்.

உளவியல் அறிஞர்கள் ஆராய்ந்து முடிவுகளை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நான்கு அடிப்படை இயல்புகள் இருக்கின்றன.
வாழும் துடிப்பு , வளரும் ஆசை , தெரிந்து கொள்ளும் ஆர்வம் . எல்லாத் திறமைகளையும் சாதகமாக்கிக் கொண்டு வாழும் முயற்சியே அவைகள்.

உலகின் மாறுதல்களுக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்வது அவசியம் என்பதை உணர வேண்டும் .

சிலர் எல்லாம் நம் விதிப்படி தான் நடக்கும் என்று சோம்பி இருந்து வருகின்றனர் . பொறுப்புகளையும் மற்றவர்களிடம் தள்ளிவிட முயற்சிப்பார்கள் . வாழ்க்கையில் இவர்கள் முன்னேறுவது கடினம் .

பாரம்பரியத்தின் பெருமை பேசிக் கொண்டே இருப்பார்கள் சிலர் . அவ்வழியே தன் வழி என பிடிவாதம் பிடிப்பார்கள் . விதியை நம்பும் சோம்பேறிகளோடு தான் இவர்களைச் சேர்க்க வேண்டும் .

டாக்டர் உதயமூர்த்தி அவர்கள் அடிக்கடி சொல்வதுண்டு . ' அப்பன் வெட்டிய கிணறு என்று உப்புத் தண்ணீரைக் குடிக்கும் மகனின்' மனப்போக்கு நிறையப் பேர்களிடம் இருக்கின்றன . பாரம்பரியப் பெருமையை இதை விட அழகாகக் கூற இயலாது .

பாரதத்தின் பிரதமர் பதவியை நேரு குடும்பத்தாரால் மட்டுமே அலங்கரிக்க இயலும் என்பதை மாற்றியவர்கள் உண்டு .

எங்கோ பிறந்த தேவகெளடா, குஜ்ரால் , வாஜ்பாய் போன்றவர்கள் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டார்கள் .

திறமைகளை வளர்த்துக் கொண்டு உயர்பதவிகளுக்கு தகுதிகளைப் பெற்றுத் தங்களை வெளிப்படுத்தியவர்களை எண்ணிப் பாருங்கள்.

வாழ்வில் எது முக்கியம் , இலக்கை அடையத்தடைகள் இவைகளைப் பற்றிய தெளிவும் அறிவும் தான் தேவை என்பதை உளவியல் அறிஞர்கள் கூறும் உண்மைகள்.

மாற்றங்களை வரவேற்பதிலும் , அதற்கு ஏற்றாற்போல நம்மை மாற்றிக் கொள்வதின் முலம் வாழ்வில் உயருவோம்.


குரு ராதாகிருஷ்ணன்

Saturday 17 December 2011

காலம் தவறாமை வேண்டும்



காலம் தவறாமையை வாழ்வில் கடைப்பிடித்தவர்கள் எல்லா நன்மைகளையும் கூடிப் பெறுவர்.

நண்பரை வீட்டுக்கு அழைத்துப் பேசி முடிவு செய்ய முதல் நாள் செய்தி சொல்லப்பட்டது . அவருக்காக காத்திருக்கிறார் . கால் மணி நேரம் கடந்து விட்டது
 அரை மணி நேரமும் சென்றது . நண்பர் வரவில்லை .
அவர் வரும் வழியில் ஏதாவது நடந்து விட்டதா ? சொன்ன நேரத்தில் வருபவராயிற்றே ! ஒரு வேளை உடல் நலக் குறைவு வந்திருக்குமோ ! காத்திருப்பவரின் மனதில் எண்ணங்கள் தொடராக வலம் வருகின்றன .

வரச் சொன்ன நண்பரிடம் முக்கிய விஷயத்தைப் பேசி முடிக்க வேண்டும் . பின் வேறு ஒரு நபரை அது விஷயமாகப் பார்க்க வேண்டும் என்ற திட்டம் நிறைவேறாது போகுமோ என் மனக்கிலேசம் வேறு .

காரணம் திருமணப் பேச்சு தான் . நண்பரது மகனுக்கு தன் மகளை மணம் முடிக்க எண்ணுபவருக்கு இவ்வாறு தானே மனம் குழம்பும் .

நமக்காகக் காத்திருப்பாரே . விரைவாகச் சென்று என்ன செய்தி என்பதை அறிய வேண்டாமோ . அரை மணி நேரம் கடந்து விட்டதால் , நான் போய் அவர் வெளியில் சென்று விட்டால் ஏமாற்றம் தானே மிஞ்சும் .

சரி , போய்த் தான் பார்ப்போம் . இருந்தால் வேறு வகையில் அவரைச் சமாதானம் சொல்லி விடுவோம் என எண்ணுகிற நண்பர் . இருவரையும் இடம் மாற்றிப் போட்டு எண்ணிப் பாருங்கள் .

முக்கியமான அல்லது சாதாரண விஷயமாக இருப்பினும் காலம் தவறாமல் செய்து பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

நாம் செய்யும் வேலைகளைத் திட்டமிட்டுச் செய்து பழகிக் கொண்டால் நன்மை பயக்கும் .

வேலைகளை முடிப்பதற்கு , போக வேண்டிய இடம் , பேருந்து அல்லது மின்சார ரயில் பயணம் , இவைகளுக்கென்று எவ்வளவு நேரம் செலவழியும் என்பதை திட்டமிட வேண்டும் . அப்போது தான் நாம் காணப்போகும் நண்பரைக் காலம் தவறாமல் சந்தித்துப் பேச முடியும் . நன்மையும் பெற முடியும் .

வேலைக்கான நேர்காணல் கடிதம் பெற்றவர் , வெளியூர் பயணத்துக்கான பயணசீட்டைப் பெற்றவர் , இதைப் போன்றவைகளுக்கு ஆட்பட்டவர்கள் காலம் தவறாமையைக் கடைப்பிடிக்காது போனால் என்ன ஆகும் . கற்பனை செய்து பாருங்கள் .

பல நல்ல விஷயங்கள் கை நழுவிப் போய் விடும் .

மற்றவர்களின் மதிப்பீடுகள் நம்மைத் தலைகுனியச் செய்து விடும் .

எல்லா காரியங்களையும் திட்டமிட்டுக் காலம் தவறாது செய்து பழக்கப்பட்டவர்கள் , எனக்கு நேரமே இல்லை என்ற பொய்யைக் கூற மாட்டார்கள்

தெரிந்தே பொய் சொல்பவர்கள் வாழ்க்கையில் உயர மாட்டார்கள் .


குரு
ராதாகிருஷ்ணன்

Wednesday 7 December 2011

உள் மனம் சொல்கிறது


தன்னிச்சையாக இயங்கும் உள் மனம் எல்லோருக்கும் உண்டு .

அதன் போக்கில் செல்பவருக்கு வாழ்க்கையில் நன்மை பல நடக்கும் .

வாய்ப்புகள் ஒவ்வொருவரிடமும் வந்து போகின்றன . அதை வரவேற்றுப் பயன்படுத்திக் கொள்பவர் சிலரே.

வாய்ப்புகளைத் தவற விடுபவர்கள் வாழ்க்கையில் உயருவது இல்லை .
அதைத் தேடி அலைபவர்களுக்கு நிறைய நன்மைகளைத் தருகின்றன . காசு பணம் ஏதும் செலவழிக்க வேண்டியது இல்லை .

இனிய முகத்துடன் மற்றவர்களோடு அன்பாகப் பேசிப் பாருங்கள் . அவர்களில் ஒருவர் உங்களுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவார்.

இவ்வாறு பேசும் சூழலில் , உள் மனம் குரல் கொடுக்கும் . மற்றவர்கள் தெரிவு செய்யும் பாதையில் போக வேண்டாம் என்றும் துணிந்து செல்லலாம் என்று தைரியம் கொடுப்பது உள் மனம் தான் .

உள் மன உணர்வுகளுக்கு மதிப்புத் தந்து நடந்து கொள்பவர்களுக்கு வாழ்க்கையில் உயர்வுகள் அதுவாகவே வந்து சேரும்.

மனதுக்குள் நடக்கின்ற மகத்தான சக்திகளுள் இதுவும் ஒன்று என்பது மனோதத்துவ வல்லுநர்களின் ஆராய்ந்த முடிவுகளாகும்.

நான் நிறையப் படித்திருக்கின்றேன் . விளையாட்டுகளில் பெற்ற பரிசுகள் அநேகம்.  பேச்சுப் போட்டிகளில் முதற் பரிசுகள் பெறுவதே வாடிக்கை . கர்வத்தைக் கொடுக்கும் இந்த எண்ணங்கள் சரியல்ல . வாய்ப்புகள் நம்மைத் தேடி வரட்டும் என்ற மிதப்புடன் இவர்கள் செயல்படுவார்கள் .

இவர்களுக்கும் வாய்ப்புகளுக்கும் உள்ள இடைவெளி அதிகமாக இருக்கும் .

கர்வம் கொண்டவர்களிடம் பணிவு இருக்காது . மற்றவர்களை உதாசீனப்படுத்துவார்கள் . நம்மை விட இவர் திறமை குறைவானவர் என்ற எண்ணம் எப்போதும் மனதில் குடி கொண்டிருக்கும் .

ஆகவே இவர்களுக்கு நண்பர்கள் குறைவு . மற்றவர்களோடு சமமாகப் பழகிப் பேசுபவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும் . காரணம் நண்பனின் திறமையை மற்றவர்களிடம் சொல்லி வாய்ப்பு கேட்பவர்கள் நிறைய உண்டு . நட்பின் இலக்கணம் உணர்ந்தவர்கள் அவர்கள் .

உள் மனம் , வரும் வாய்ப்பை ஏற்றுக் கொள்ள ஆலோசனைகளை நிச்சயம் வழங்கும் .

அதைக் கேட்டுப் பயன் பெறுங்கள். விழிப்புணர்வோடு திறமைசாலிகளோ, சாதாரண நிலையில் உள்ளவரோ மற்றவர்களுடன் பழகி வாய்ப்புகளை ஏற்று வாழ்க்கையில் உயருங்கள்.


குரு ராதாகிருஷ்ணன்

Wednesday 23 November 2011

நல்ல அபிப்பிராயம் ஏற்பட வேண்டுமா



மற்றவர்களின் அன்பைப் பெறவும் , நம் மீது அவர்கள் நல்ல அபிப்பிராயம் கொள்ள நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

நண்பரின் வீட்டுக்குப் போகின்ற வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது . நண்பருக்கு நிறைய குழந்தைகள் . இவைகளைத் தெரிந்து கொண்டு, குழந்தைகளுக்குப் பிரியமான பழங்கள், பிஸ்கட்டுகள் வாங்கிப் போவது நல்லது .

இனிப்புப் பதார்த்தங்களில் நாள்கள் பல சென்றவை , மிட்டாய் வகைகளில் தேங்கிப் போனவைகளை வாங்கிச் செல்வதை தவிர்க்க வேண்டும் . அவைகள் சிறு குழந்தைகளின் உடல் நலங்களுக்குக் குந்தகம் விளைவிக்கும் .

மனைவி சிநேகிதியின் வீட்டுக்குச் செல்ல விரும்புகிறார். அவரைப் போகவிடுங்கள்அந்த வீட்டில் நிறையப் பெண் பிள்ளைகள் இருப்பதாக அறிகிறீர்கள் . மனைவியிடம் போகும் போது வீட்டுக்குத் தேவைப்படும் காய்கறிகளை வாங்கி அனுப்பி வையுங்கள் .

பிறர் வீட்டுக்குச் செல்வதில் நிறையப் பணம் தேவை என்று நினைத்து வாய்ப்பைத் தவற விடாதீர்கள் . நம் சக்திக்குத் தகுந்தாற் போல் திண்பண்டங்கள் , பூ, பழங்கள் முதலியவற்றை வாங்கிச் செல்லலாம் .

இதனால் என்ன லாபம் கிடைக்கும் என்று கணக்குப் பார்க்காதீர்கள் . ஏனெனில் நம் குடும்பத்துக்கு மற்றவர்களின் நட்பும் , பரிவும் நிச்சயம் கிடைக்கும் .
கணக்குப் பார்த்து மற்றவர்களிடம் பழகினால் நம் மீது தவறான அபிப்பிராயங்கள் தான் ஏற்படும் .

செலவில்லாத வகையில் மற்றவர்களின் பழக்கம் தேவை என நினைத்தால் வெறுமை தான் மிஞ்சும் .

ஒரு கிராமத்தில் பெரிய தனக்காரர் இருந்தார் . கிராம மக்கள் அவருக்கு மரியாதையை அளவுக்கு மீறி தருவது உண்டு. காரணம் அவரிடம் பணம் பெறாதவர்கள் அக்கிராமத்தில் இல்லை . தருமமாக அல்ல வட்டிக்குத் தான் பணம் கொடுப்பது அவர் வழக்கம் .

மற்றவர்கள் வீட்டில் நடக்கும் சுப மற்றும் அகப காரியங்களுக்கு தன் கைத்தடியை ஆள் மூலம் அவ்வீட்டுக்கு அனுப்பி , எல்லோரது பார்வையில் படும்படியான இடத்தில் வைக்கச் சொல்வார்கள் .

பெரிய தனக்காரர் மரணம் எய்தி விட்டார் . கிராம மக்களுக்குச் செய்தி அறிவிக்கப்பட்டது . துக்கத்தில் கலந்து கொள்ள கிராம மக்கள் ஒருவருமே செல்லவில்லை .

ஆனால் கைத்தடிகள், குடைகள் , துண்டுகளே வீட்டின் தாழ்வாரத்தில் வைக்கப்பட்டு காட்சிப் பொருளாக இருந்தன .

கதையானாலும் , முக்கிய விஷயத்தை வலியுறுத்துகிறது .

மற்றவர்களிடம் மனம் விட்டுப் பழகுவோம் . நல்ல அபிப்பிராயங்கள் நம் மீது வந்து விழும் .

 குரு ராதாகிருஷ்ணன்

Monday 14 November 2011

செய்தியைத் தெரிவிப்பதில் கவனம்



இன்பம் தரும் செய்திகளை எந்த நிலையிலும் சமயங்களிலும் தெரிவிக்கலாம் . இதற்கு எவ்வித கவனமும் இங்கிதமும் தேவைப்படுவதில்லை .

மாறாகத் துன்பம் தரும் செய்திகளை தெரிவிப்பதில் கவனம் மிகவும் அவசியம் . நிதானத்தைக் கூடவே கடைபிடிப்பது மிகவும் நன்மை பயக்கும் . சம்பந்தபட்டவர்களிடம் துன்பச் செய்திகள் சேரும் போது ஏற்படுத்துகின்ற பாதிப்புகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் .

அவசரம் காட்டுபவர்கள் அவலங்களை ஏற்படுத்தும் நபர்களாகத் தோன்றுவார்கள்.
 
கோடிக்கணக்கில் ஏற்றுமதி செய்யும் தொழிலதிபருக்கு துன்பம் தரும் செய்தி எதுவாக இருக்கும் ? தொழிலில் நட்டம் . ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் வெளிநாட்டின் துறைமுகத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளன . இச்செய்தி தொழிலதிபருக்கு நிச்சயம் துன்பம் தரக்கூடியதே .

பெற்று வளர்த்துச் சீராட்டிய தாயின் மரணம் , தன் மகளின் எதிர்காலத் திட்டத்தை வகுக்கும் தகப்பனின் திடீர் மரணம் , இவைகள் சம்பந்தபட்டவர்களைத் துயரத்தில் ஆழ்த்தக் கூடியவைகளே .

இவ்வகைச் சோகச் செய்திகளைத் தெரிவிக்கும் பொறுப்பு நம்மிடம் ஒப்படைக்கப்படுகின்றன .

இந்நிலையில் செய்ய வேண்டியதைப் பார்ப்போம் .

துன்பச் செய்திகளைத் தெரிவிப்பவரே பாதிக்கப்பட்டிருப்பினும் வெளியில் காட்டிக் கொள்ளுதல் தவிர்க்க வேண்டும் . மெதுவாகவும் , பக்குவமாகவும் , சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு செய்தியைத் தெரிவிக்க வேண்டும் .

அவசரத்துடன் அப்பட்டமாகவே சொல்லுதல் கூடாது . பின் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதைக் கற்பனை செய்து கொள்ளுங்கள் . தீவிரம் உணர முடியும் .

நிதானமாக பீடிகை போடுவது போல் விஷயத்தை சம்பந்தபட்டவர்களிடம் சொல்லி முடிக்க வேண்டும்

பாதிக்கப்பட்டவரின் மனதில் ஏற்படும் வருத்தங்களைக் களைவது போல் ஆறுதலாகப் பேச வேண்டும் . சிலர் இந்த சமயத்தில் சம்பந்தமில்லாதவைகளைப் பேசி துக்கத்தை அதிகப்படுத்துவர் . இது மிகவும் கொடுமையானது .

வருத்தமடைபவர்களை ஆற்றுப்படுத்தும் வகையில் ஆறுதலாக சுருக்கமான வார்த்தைகளைக் கூறினாலே போதும் .

துன்பச் செய்திகளைக் கேட்டவர்கள் துவண்டு போகாமல் தங்களைத் தேற்றிக் கொண்டு மேற்கொண்டு காரியங்களைச் செய்து முடிக்கத் துணிவார்கள் .

குரு ராதாகிருஷ்ணன் 

Friday 11 November 2011

சாதனைகளுக்குள் வேதனை



நிகழ்வுகளில் அனுபவம் பெற்றவர்கள் பலர் சாதனையாளர்களாக திகழ்ந்திருப்பதை வரலாறுகள் நமக்குத் தெரிவிக்கின்றன .

வேதனை தரும் விஷயங்கள் என்றாலும் அவைகளை எண்ணித் துவண்டு போனதில்லை .

பாரத நாட்டின் விடுதலைக்குப் போராடிய தியாகிகள் அநேகம் . அவர்களில் பண்டித மதன் மோகன மாளவியாவும் ஒருவர்.

காசி இந்துப் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் . நிதி வசூல் செய்ய இந்திய நாட்டின் எல்லா பாகங்களுக்கும் சென்றவர் . ஹைதராபாத்தின் நிஜாமை சந்தித்துப் பேசினார் . இந்துப் பல்கலைக்கழகம் அமைக்க எம்மிடமா பணம் கேட்கிறாய் எனக் கோபத்தில் தன் கால் செருப்பைக் கழற்றி மாளவியா மீது எறிந்தார்.

தன் மீது விழுந்த செருப்பை புன்சிரிப்போடு எடுத்துக் கொண்டு நிஜாமிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தார்.

நகரின் மையப்பகுதிக்கு வந்து மாளவியா பேசினார் . மக்கள் கூடினர். நிஜாமின் அரண்மனையில் நடந்த நிகழ்வுகளை விவரித்தார். நிஜாமின் ஒற்றைச் செருப்பை ஏலம் விடப் போவதாக அறிவித்தார்.

விஷயம் நிஜாமின் காதுக்குப் போனது . அரண்மனைச் சேவகரிடம் நிறையப் பணத்தைக் கொடுத்து செருப்பை ஏலம் எடுக்கப் பணித்தார்.

மாளவியாவுக்கு ஏலத்தில் நிறையப் பணம் கிடைத்தன . வேதனையான நிகழ்வாக இருந்தாலும் அதை சாதனையாக மாற்றிய பெருமை மதன் மோகன மாளவியவுக்குக் கிடைத்தது .

சர்.தாமஸ் ஆல்வா எடிசனை உலகம் மறக்காது . ஏனெனில் எல்லோருக்கும் ஒளி கொடுத்தவர் அல்லவா !

ஆரம்பத்தில் சிறுவன் எடிசன் ஒடும் ரெயிலில் செய்தித்தாட்களை விற்பனை செய்து வந்தார் . ரெயிலின் கடைசிப் பெட்டியில் அடிக்கடி பயணம் செய்வது வழக்கம் .

அப்பெட்டியில் ஒருமுறை தீப்பிடித்துக் கொண்ட து . ரயில் நிலையப் பணியாளர் சிறுவன் எடிசன் தான் இதற்குக் காரணம் என நினைத்தார் . அவரைக் கூப்பிட்டு கன்னத்தில் ஒங்கி அறைந்தார் . செவிப்பறைப் பாதிக்கப்பட்டு கேட்கும் தன்மையை இழந்தார் எடிசன் .

ஆனாலும் தன் ஆராய்ச்சி பணிகளில் கவனத்துடன் செயல்பட்டார்.

தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார பல்பைக் கண்டுபிடிக்க 1923 தடவைகள் முயற்சி செய்து முடிவில் வெற்றி பெற்றார் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர் .

காது கேட்கும் தன்மையை இழந்து விட்ட எடிசன் வாழ்வில் துவண்டு போய் முடங்கிவிடவில்லை .

சாதனைகளைப் படைத்தவர்கள் எல்லாமே வேதனைகளுக்கு உட்பட்டவர்கள் தான் என்பது அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்தி  ஆகும் .

குரு ராதாகிருஷ்ணன் 

Saturday 29 October 2011

சோதனைகள் தேவைதான்




ஒவ்வொருவரிடமும் பலம் பலவீனம் இருக்கின்றன . இரண்டையும் பாதுகாத்து வருபவர்களுக்கு இன்பம் கிடைக்கும் .

தங்களின் பலவீனங்களை மற்றவரிடம் தெரியப்படுத்துதல் கூடாது . அதே போல் தான் பலமும் . தன்னால் என்ன செய்ய இயலும் ; செல்வாக்கினால் எவற்றையெல்லாம் செய்து காட்ட முடியும் என்பதை வெளிப்படையாகச் சொல்வதைத் தவிர்க்க வேண்டும் . இவ்வித நிலைகள் நிறைய விரோதிகள் உருவாக்க வழிகோலும் .

நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு என்று சொல்வது ஒரு புறம் இருந்தாலும் பிறர் மீது நம்பிக்கையை ஒரளவு தான் வைக்க வேண்டும் . அதற்கும் ஒரு எல்லையை வகுத்தல் நல்லது .

பிறர் மீது நம்பிக்கையை வைக்குமுன் சில சோதனைகளைச் செய்ய வேண்டும்  சோதனைகளின் முடிவில் நமக்குத் தெளிவு கிடைக்கும் . அவரின் சில நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் .

ரகசியங்கள் பாதுகாக்க தவறியதால் இக்காலத்தில் எல்லா நிலைகளிலும் மோசடிகள் தலைதூக்கி விட்டன .

கேரளாவிலிருந்து வந்த என் நண்பர் ஒருவர் சிறிய அளவில் உணவு விடுதியை நடத்தி வந்தார்.

மாதச் சாப்பாடு போடுவதால் நிறையப் பேர் அந்த உணவு விடுதியில் பதிவுக் கணக்கை வைத்துக் கொண்டனர் .உணவு , பலகாரங்கள் எல்லாமே அவரது மனைவியின் கைப்பக்குவத்தால் பெயர் பெற்றன . வீட்டுச் சூழல் அவ்விடுதியில் உண்ணுபவர்களுக்குக் கிடைத்து வந்தன .

நண்பரிடம் அடிக்கடி சென்று பேசி விட்டு வருவது வழக்கம் எனக்கு . எங்கள் பேச்சு அரசியல் நாட்டு நடப்புகள் உலகக் கோப்பைக் கால்பந்து என எல்லாவற்றையும் தொட்டுத் திரும்பும் .

கல்லா மேசைக்கருகில் சாப்பிட்ட இளைஞர் பில்லுடன் புன்சிரிப்புக் காட்டி நின்றார் . பில்லைத் தந்தார் . என் நண்பர் கொடுத்த பாக்கிச் சில்லறையைப் பையில் போட்டுக் கொண்டு நடந்து சென்றார் .

நண்பரிடம் நான் கேட்டேன் . எட்டு ரூபாய் ஐம்பது காசு பில்லுக்கு இருபது ரூபாய் பெற்றீர்கள். பதிமூன்று ரூபாய் ஐம்பது காசு திருப்பித் தந்தீர்கள் . வாங்கிய நபரும் பேசாமல் போய்விட்டாரே . பேச்சுவாக்கில் தவறு செய்து விட்டீர்களே ..

நன்றாக அறிந்து தான் கூடுதலாகச் சில்லறையைத் தந்தேன். இங்கு பதிவில் சாப்பிடும் நண்பர் இவருக்கு நாளை முதல் சாப்பாடு போடச் சொன்னார் . பணம் கறாறாகத் தந்துவிடுவார் என்றும் சொன்னார். புதியவரின் நாணயத்தைச் சோதிக்கவே இவ்வாறு செய்தேன் என்றார் என் நண்பர் .

இரண்டு ரூபாய் சோதனை ஒருவரின் நாணயத்தைத் தெரிந்து கொள்ள முடிந்தது . இந்த நிகழ்வைப் பார்த்த நான் உணவு விடுதி உரிமையாளரின் திறமையை எண்ணி வியந்தேன் .

நம்பிக்கை , நாணயம் , பலம் , பலவீனம் இவைகளை சோதனைகள் தான் தெளிவுபடுத்துகின்றன . இவைகளைக் கட்டி காத்து திறமையாக வாழ்வதில் தான் பெருமைகள் ஒருவருக்கு வந்து சேருகின்றன.


குரு ராதாகிருஷ்ணன்