Saturday 29 October 2011

சோதனைகள் தேவைதான்




ஒவ்வொருவரிடமும் பலம் பலவீனம் இருக்கின்றன . இரண்டையும் பாதுகாத்து வருபவர்களுக்கு இன்பம் கிடைக்கும் .

தங்களின் பலவீனங்களை மற்றவரிடம் தெரியப்படுத்துதல் கூடாது . அதே போல் தான் பலமும் . தன்னால் என்ன செய்ய இயலும் ; செல்வாக்கினால் எவற்றையெல்லாம் செய்து காட்ட முடியும் என்பதை வெளிப்படையாகச் சொல்வதைத் தவிர்க்க வேண்டும் . இவ்வித நிலைகள் நிறைய விரோதிகள் உருவாக்க வழிகோலும் .

நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு என்று சொல்வது ஒரு புறம் இருந்தாலும் பிறர் மீது நம்பிக்கையை ஒரளவு தான் வைக்க வேண்டும் . அதற்கும் ஒரு எல்லையை வகுத்தல் நல்லது .

பிறர் மீது நம்பிக்கையை வைக்குமுன் சில சோதனைகளைச் செய்ய வேண்டும்  சோதனைகளின் முடிவில் நமக்குத் தெளிவு கிடைக்கும் . அவரின் சில நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் .

ரகசியங்கள் பாதுகாக்க தவறியதால் இக்காலத்தில் எல்லா நிலைகளிலும் மோசடிகள் தலைதூக்கி விட்டன .

கேரளாவிலிருந்து வந்த என் நண்பர் ஒருவர் சிறிய அளவில் உணவு விடுதியை நடத்தி வந்தார்.

மாதச் சாப்பாடு போடுவதால் நிறையப் பேர் அந்த உணவு விடுதியில் பதிவுக் கணக்கை வைத்துக் கொண்டனர் .உணவு , பலகாரங்கள் எல்லாமே அவரது மனைவியின் கைப்பக்குவத்தால் பெயர் பெற்றன . வீட்டுச் சூழல் அவ்விடுதியில் உண்ணுபவர்களுக்குக் கிடைத்து வந்தன .

நண்பரிடம் அடிக்கடி சென்று பேசி விட்டு வருவது வழக்கம் எனக்கு . எங்கள் பேச்சு அரசியல் நாட்டு நடப்புகள் உலகக் கோப்பைக் கால்பந்து என எல்லாவற்றையும் தொட்டுத் திரும்பும் .

கல்லா மேசைக்கருகில் சாப்பிட்ட இளைஞர் பில்லுடன் புன்சிரிப்புக் காட்டி நின்றார் . பில்லைத் தந்தார் . என் நண்பர் கொடுத்த பாக்கிச் சில்லறையைப் பையில் போட்டுக் கொண்டு நடந்து சென்றார் .

நண்பரிடம் நான் கேட்டேன் . எட்டு ரூபாய் ஐம்பது காசு பில்லுக்கு இருபது ரூபாய் பெற்றீர்கள். பதிமூன்று ரூபாய் ஐம்பது காசு திருப்பித் தந்தீர்கள் . வாங்கிய நபரும் பேசாமல் போய்விட்டாரே . பேச்சுவாக்கில் தவறு செய்து விட்டீர்களே ..

நன்றாக அறிந்து தான் கூடுதலாகச் சில்லறையைத் தந்தேன். இங்கு பதிவில் சாப்பிடும் நண்பர் இவருக்கு நாளை முதல் சாப்பாடு போடச் சொன்னார் . பணம் கறாறாகத் தந்துவிடுவார் என்றும் சொன்னார். புதியவரின் நாணயத்தைச் சோதிக்கவே இவ்வாறு செய்தேன் என்றார் என் நண்பர் .

இரண்டு ரூபாய் சோதனை ஒருவரின் நாணயத்தைத் தெரிந்து கொள்ள முடிந்தது . இந்த நிகழ்வைப் பார்த்த நான் உணவு விடுதி உரிமையாளரின் திறமையை எண்ணி வியந்தேன் .

நம்பிக்கை , நாணயம் , பலம் , பலவீனம் இவைகளை சோதனைகள் தான் தெளிவுபடுத்துகின்றன . இவைகளைக் கட்டி காத்து திறமையாக வாழ்வதில் தான் பெருமைகள் ஒருவருக்கு வந்து சேருகின்றன.


குரு ராதாகிருஷ்ணன் 

Wednesday 26 October 2011

மன அமைதி வேண்டுமா ...


மன அமைதியை வேண்டாம் என்று கூறுபவர்களை யாரும் பார்த்ததில்லை .

மன அமைதியைத் தேடி மலைச் சாரல்களுக்கும் , நதி தீரங்களுக்கும் போக வேண்டாம் . நாம் இருக்கும் இடத்திலேயே அதைப் பெற முடியும்.
பிரச்சினைகள் தோன்றாத இடம் இல்லை . அலுவலகம் , வீடு , தொழிற்சாலை, பள்ளிக்கூடம், ஆலயங்கள் எல்லா இடங்களும் அதற்குத் தாராளமாக இடங்கள் உண்டு .

பிரச்சினைகளை அணுகி எதிர் கொள்வதில் நிறைய வேறுபாடுகள் உண்டு . விளைவுகள் பூதாகரமாக எழும் போது தான் அதன் தீவிரம் உணரப்படுகிறது .
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது முதுமொழி . தீமையும் நன்மையும் பிறர் நமக்குத் தருவதில்லை . இரண்டுக்கும் முழு முதற் காரணம் நாமே என்பதை உணர்ந்து கொள்ளல் அவசியம்

வீடுகளில் பிச்சை எடுத்து உண்டு , பாதையோரங்களில் படுத்துறங்கும் ஒருவனுடைய நிலை
ஏராளமான பணம் , வசதியான வாழ்க்கை எல்லாம் செய்து தரும் ஏவலர்கள் என சகல வசதிகளைக் கொண்ட செல்வந்தரின் நிலை
இவ்விருவருக்கும் மனநிலைகள் வேறுபாடுகள் கொண்டவைகளாகத் தான் இருக்கும்
எந்தச் பிரச்சினையையும் அமைதியாக அணுகுதல் தான் முறை . அரக்கப்பரக்க காரியங்களைச் செய்து விட்டுப் பின் விளைவுகள் விசுவரூபம் எடுக்கும் போது மன அமைதி இல்லை
குட்டக்குட்ட குனிபவனும் நிமிர்ந்து நிற்பான் என்பதை நம்மில் பலர் மறந்து போகிறோம் .
கற்பனைகளை வளர்த்துக் கொண்டு நடைமுறைக்கு ஒவ்வாத விஷயங்களில் தன்னை நுழைத்துக் கொள்பவர்கள் உண்டு . கற்பனைகள் மாறாதது என்று கூற முடியாது. மாற்றங்களினால் தோல்வி கண்டதும் துவண்டு போவதுண்டு . இவர்களுக்கு மன அமைதி கிடைப்பது அரிது
எடுத்துக் கொண்ட காரியத்தை முடிக்க நம்மால் இயலும் என்று யோசனை செய்ய வேண்டும் . முடியாது என்று முடிவுக்கு வந்து விட்டு விடுவது சாலச் சிறந்தது
பிறர் நம்மை மெச்ச வேண்டும் என்ற மாயையால் முடியாத காரியத்தில் நுழைவது சரியல்ல . மன அமைதி இல்லாதவர்களுக்கு இதய நோய் , இரத்தக் கொதிப்பு , சர்க்கரை முதலிய நோய்கள் இணைபிரியாத தோழர்களாக இறுதி வரை உடலை வாட்டும்.
எந்த ஒரு காரியத்தையும் அல்லது பிரச்சினைகளையும் அணுகும் போது நன்றாக ஒரு தடவைக்கும் மேலாக யோசித்துச் செயல்பட வேண்டும் . யோசனை செய்பவர்கள் நிச்சயம் திட்டமிடுபவர்களாகத் திகழ்வார்கள்.
இவர்களிடம் மன அமைதி எப்போதும் நிறைந்து காணும் .

குரு ராதாகிருஷ்ணன்