Saturday, 29 October 2011

சோதனைகள் தேவைதான்




ஒவ்வொருவரிடமும் பலம் பலவீனம் இருக்கின்றன . இரண்டையும் பாதுகாத்து வருபவர்களுக்கு இன்பம் கிடைக்கும் .

தங்களின் பலவீனங்களை மற்றவரிடம் தெரியப்படுத்துதல் கூடாது . அதே போல் தான் பலமும் . தன்னால் என்ன செய்ய இயலும் ; செல்வாக்கினால் எவற்றையெல்லாம் செய்து காட்ட முடியும் என்பதை வெளிப்படையாகச் சொல்வதைத் தவிர்க்க வேண்டும் . இவ்வித நிலைகள் நிறைய விரோதிகள் உருவாக்க வழிகோலும் .

நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு என்று சொல்வது ஒரு புறம் இருந்தாலும் பிறர் மீது நம்பிக்கையை ஒரளவு தான் வைக்க வேண்டும் . அதற்கும் ஒரு எல்லையை வகுத்தல் நல்லது .

பிறர் மீது நம்பிக்கையை வைக்குமுன் சில சோதனைகளைச் செய்ய வேண்டும்  சோதனைகளின் முடிவில் நமக்குத் தெளிவு கிடைக்கும் . அவரின் சில நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் .

ரகசியங்கள் பாதுகாக்க தவறியதால் இக்காலத்தில் எல்லா நிலைகளிலும் மோசடிகள் தலைதூக்கி விட்டன .

கேரளாவிலிருந்து வந்த என் நண்பர் ஒருவர் சிறிய அளவில் உணவு விடுதியை நடத்தி வந்தார்.

மாதச் சாப்பாடு போடுவதால் நிறையப் பேர் அந்த உணவு விடுதியில் பதிவுக் கணக்கை வைத்துக் கொண்டனர் .உணவு , பலகாரங்கள் எல்லாமே அவரது மனைவியின் கைப்பக்குவத்தால் பெயர் பெற்றன . வீட்டுச் சூழல் அவ்விடுதியில் உண்ணுபவர்களுக்குக் கிடைத்து வந்தன .

நண்பரிடம் அடிக்கடி சென்று பேசி விட்டு வருவது வழக்கம் எனக்கு . எங்கள் பேச்சு அரசியல் நாட்டு நடப்புகள் உலகக் கோப்பைக் கால்பந்து என எல்லாவற்றையும் தொட்டுத் திரும்பும் .

கல்லா மேசைக்கருகில் சாப்பிட்ட இளைஞர் பில்லுடன் புன்சிரிப்புக் காட்டி நின்றார் . பில்லைத் தந்தார் . என் நண்பர் கொடுத்த பாக்கிச் சில்லறையைப் பையில் போட்டுக் கொண்டு நடந்து சென்றார் .

நண்பரிடம் நான் கேட்டேன் . எட்டு ரூபாய் ஐம்பது காசு பில்லுக்கு இருபது ரூபாய் பெற்றீர்கள். பதிமூன்று ரூபாய் ஐம்பது காசு திருப்பித் தந்தீர்கள் . வாங்கிய நபரும் பேசாமல் போய்விட்டாரே . பேச்சுவாக்கில் தவறு செய்து விட்டீர்களே ..

நன்றாக அறிந்து தான் கூடுதலாகச் சில்லறையைத் தந்தேன். இங்கு பதிவில் சாப்பிடும் நண்பர் இவருக்கு நாளை முதல் சாப்பாடு போடச் சொன்னார் . பணம் கறாறாகத் தந்துவிடுவார் என்றும் சொன்னார். புதியவரின் நாணயத்தைச் சோதிக்கவே இவ்வாறு செய்தேன் என்றார் என் நண்பர் .

இரண்டு ரூபாய் சோதனை ஒருவரின் நாணயத்தைத் தெரிந்து கொள்ள முடிந்தது . இந்த நிகழ்வைப் பார்த்த நான் உணவு விடுதி உரிமையாளரின் திறமையை எண்ணி வியந்தேன் .

நம்பிக்கை , நாணயம் , பலம் , பலவீனம் இவைகளை சோதனைகள் தான் தெளிவுபடுத்துகின்றன . இவைகளைக் கட்டி காத்து திறமையாக வாழ்வதில் தான் பெருமைகள் ஒருவருக்கு வந்து சேருகின்றன.


குரு ராதாகிருஷ்ணன் 

No comments:

Post a Comment