Monday, 28 March 2011

இனப்படுகொலையின் ஆதாரங்களை முகத்தில் அறையும் ஆவணம்...


ஈழத் தமிழர்கள் படுகின்ற அல்லல், அவலங்களை நிழற்படங்கள் மூலம் உலகின் கவனத்தைக்கு கொண்டு வரும் ஆவணப் புத்தகம் தான் என்ன செய்யலாம் இதற்காக?


சனவரி 2011 இறுதியில் கைவரப் பெற்ற இப்புத்தகம் வாசிக்கும் யாரையும் கலவரப் படுத்தும். தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு என மூன்று மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.

புத்தக ஆசிரியர் ஜெ.பிரபாகரன் மேற்கொண்டுள்ள கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் அனைவரும் தெரிந்து கொள்ள முடிகிறது. இப்புத்தகம் ஈழத்தில் நிகழ்ந்த எல்லாவற்றையும் ஆவணப்படுத்துகின்றன.


 நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர், அமெரிக்க மருத்துவர் எலன் சாண்டர் எம்.டி., இலங்கை ஜெயசூர்யா, ஜெர்மனி பெரிமன் சர்வதேச மனித உரிமைகள் கழகத்தைச் சார்ந்த விராஜ் மென்டில் ஆகியோர் அணிந்துரைகள் வழங்கியுள்ளனர்.







20ஆம் பக்கத்திலிருந்து 174 பக்கங்கள் வரை வண்ணப் புகைப்படங்கள் தரப்பட்டுள்ளன.யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டது, கிஃபி (KFIR) விமானத் தாக்குதல்கள் (Shell Attack) எறிகணைத் தாக்குதல்கள், வலையத்தாக்குதல் முள்ளிவாய்க்கால், பொக்கணை, வட்டக்கச்சி தர்மபுரம், புதுக்குடியிருப்பு, வன்னிப் பகுதி, முல்லைத் தீவு ஆகிய இடங்களில் நடந்த தாக்குதல்கள் ஆகிய அனைத்தும் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன.


8.1.2011 அன்று மன்னார் மறை மாவட்ட திருச்சபையின் கத்தோலிலிக்க பங்குத் தந்தை மற்றும் இரு பாதிரியார்கள் The Lessons Learnt and Reconciliation Commission போரின் அவலங்களை ஆதாரங்களுடன், ஆலோசனைகளையும் இணைத்து பத்து பக்க அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.


இணையத்தில் இவ்வறிக்கையை முழுமையாக பதிவிறக்கம் செய்து வாசிக்கலாம்.ஈழம் குறித்து உலகப் பிரமுகர்களின் கருத்துக்கள் (பக்.175); தமிழினப் படுகொலைகள் (பக்.176-216); 1956 ஆம் ஆண்டு முதல் 2009 வரை காலத்தில் நடத்தப் பெற்ற பேச்சு வார்த்தைகள், ஒப்பந்தங்களின் பட்டியல் (பக்.207); ஈழத் தமிழர்களின் அறவழிப் போராட்டங்கள் (பக்.211); கி.மு. 500 லிருந்து கி.பி. 1948 வரையிலான இலங்கைத் தீவில் தமிழர்களின் பூர்வீகம் (பக்.212) என அட்டவணைகளாகத் தரப்பட்டுள்ளன.


இலங்கை அதிபரை சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்றவாளியாக அல்ல இன அழிப்புக் குற்றம் சாட்டி உலகறியச் செய்ய வேண்டும். போர்குற்றவாளி என்றால் தப்பித்துக் கொள்ள வழிகள் பல உண்டு. யூத இனப்படுகொலை, செர்பேனிக்கா படுகொலை, ருவாண்டா இனப்படுகொலை, குர்தீஷ் (ஈராக்) இனப்படுகொலை, என அணிவகுத்து வருகின்ற கொலைகளை விட ஈழத்தமிழினப் படுகொலை உலக அளவில் தாக்கங்களை ஏற்படுத்தும். அத்தாக்கத்தினை முன்வைக்கும் இந்த ஆவணம் வரலாற்றில் இடம் பெறும். சர்வதேச நீதிமன்றத்தில் இந்த ஆவணம் ஆதாரப்பூர்வமான மறுக்க இயலாத ஒன்றாகவும் திகழும்.


என்ன செய்யலாம் இதற்காக?
ஆசிரியர்: ஜெ.பிரபாகரன்
வெளியீடு:பென்னி குயிக் பதிப்பகம்
4/1411 செந்தில் நாதன் தெரு
தாசில்தார் நகர்
மதுரை-625020.
பக்கங்கள்: 216, விலை ரூ.500/- .


 குரு . ராதாகிருஷ்ணன்

நன்றி : வடக்கு வாசல் - மார்ச் 2011

Sunday, 6 March 2011

வெற்றி யாருக்கு ?


கமலக்கண்ணன் அவர் பிறந்த கிராமத்தின் முதல் பட்டதாரி . எழுத்தராக பணியில் சேர்ந்து கண்காணிப்பாளராக உயர்ந்தவர் . அவர் பணிபுரிந்த அலுவலகத்தில் இலஞ்சம் பெறாதவர் . கண்டிப்பானவர்.

அவர் பெறுகிற ஊதியம் தான் மனைவி லட்சுமி , மகன் ராகேஷ் , மகள் ரம்யா என நால்வரையும் காப்பாற்றுகிறது .

வெற்றி பெறும் ஒரு ஆணின் பின்னால் நிச்சயம் ஒரு பெண் இருப்பாள் என்பதற்கு அவர் மனைவி நல்ல உதாரணம் .

கல்லூரியில் பொருளாதாரம் மூன்றாம் வருடத்தில் மகனும் , உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பில் மகளும் படித்து வருகின்றனர்.

குடும்பப் பாரம்பரியம் , கெளரவம் பற்றி பிள்ளைகளுக்குச் சொல்லிச் சொல்லி வளர்த்தவர் கமலக்கண்ணன் தம்பதியர்.

'லட்சுமி ... லட்சுமி ... !' கணவனின் குரல் கேட்டு கூடத்துக்கு வந்தாள் மனைவி .

ராகேஷ் பத்தி பிரின்சிபல் என்னிடம் ஏதோ சொல்லணுமாம். வந்து நேரில் பார்க்க சொல்லி கடிதம் வந்திருக்கு .

படிப்பு இந்த வருடம் கடைசி இல்லையா ? ஏதாச்சும் சொல்லணும்னு அவருக்குத் தோணியிருக்கலாம் . ஆபீஸ் போறதுக்கு முன்னாடி போய் பார்த்துட்டுத் தான் போங்களேன் ..

தொலைபேசியில் அலுவலகத்துக்குத் தாமதமாக வர அனுமதி சொன்னார்.

'வாங்க ... கமலக்கண்ணன் ! உங்க பையன் ராகேஷ் கல்லூரிக்கு வந்து இருபது நாட்களுக்கு மேலாகிறது . இதோ வருகைப் பதிவேட்டைப் பாருங்க ... அவன் கவனமெல்லாம் வேறு பாதையில் போகிறது என் நினைக்கிறேன் . கூப்பிட்டு நேரில் கேட்டால் பல்வேறு காரணங்கள் . எதுவுமே நிஜமாக எனக்குத் தெரியவில்லை . பைனல் இயர் ... அதான் ... கவனியுங்க ! '

' நன்றி ஐயா ... அவசியம் கவனம் செலுத்துவேன். '

அலுவலகப் பணிகளில் அவரது நாட்டம் செல்லவில்லை . விடுப்புப் போட்டு விட்டு வீட்டில் போய் சும்மா இருக்கவும் அவர் மனது இடம் தரவில்லை . கல்லூரிக்கு போகும் பையனின் விருப்பம் என்னவாக இருக்கும் ? யோசிக்க யோசிக்க குழப்பம் தான் மிஞ்சியது .

வீடு சென்றவர் பணிமுடித்து பையனின் வருகைக்காக கூடத்திலே அமர்ந்திருந்தார்.

ராகேஷ் வந்தான்.

' என்ன ராகேஷ் ? நான் கேள்விப்படதெல்லாம் நிஜமா ? இருபது நாளா நீ காலேஜுக்குப் போகவில்லையாமே ? எங்க போற ? என்ன செய்யறே ?'

'யாராவது எதையாவது சொன்னதாலே என்னை நீங்க நிக்க வெச்சு விசாரணை நடத்துறீங்க ! உங்களுக்கு நான் பட்டதாரியா வரணும் . அது நடக்கும் . சும்மா கவலைப்படாதீங்கப்பா !'

ஆத்திரத்தை அடக்கிக் கொள்ள பார்த்தார் . இயலவில்லை . மீண்டும் ஏதோ சொல்ல முயன்றான் ராகேஷ் . எழுந்தார் . அவன் கன்னத்தில் மாற்றி மாற்றி அறைந்தார்.

' அப்பா ... ! என்ற அலறல் கேட்ட லட்சுமி கூடத்துக்கு வந்தாள்.

' ஏங்க ? பையனை அடிக்கிறீங்க ?

' ராகேஷ் உன் அறைக்குப் போ ... ' எனச் சொல்லி விட்டு கணவன் பக்கத்தில் வந்தாள் .

தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையைக் கைநீட்டி அடிப்பது சரியல்ல என் இங்கிதமாகச் சொன்னாள்.

'அவன்... என்ன பேசுறான் தெரியுமா ? பிரின்சிபாலின் வார்த்தைகள் கேட்டு இவனை விசாரித்தால் , திமிரா பதில் சொல்றான் !

லட்சுமி மெளனமானாள் .

விடிந்தது . ராகேஷ் அறைக் கதவு திறந்து கிடந்தது . படுக்கை காலியாக இருந்தது . மேசையின் மீது ஒரு கடிதம் . எடுத்தார் ... படித்தார் ...

' நான் வெளியேறுகிறேன் . என் வழியில் யார் குறுக்கிட்டாலும் எனக்குப் பிடிக்காது . தற்கொலை செய்து கொள்ள மாட்டேன் . ஆனால் வாழ்ந்து காட்டுவேன் . தேட வேண்டாம் ... இப்படிக்கு ராகேஷ்.'

***

மகனின் வெற்றிடம் லட்சுமியை படுக்கையில் போட்டு விட்டது . பரிசோதித்த மருத்துவர்கள் பக்கவாதம் எனச் சொல்லி மாத்திரைகள், கை, கால்களில் தேய்க்கத் தைலங்கள் என எழுதினார்கள் .

அவருக்கு மட்டும் அந்தக் கவலை இல்லையா ? மனத்தைத் திடப்படுத்திக் கொண்டார் . வீட்டு வேலைக்கெனத் தனி ஆள் போடப்பட்டது . ரம்யா தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு பள்ளிக்குச் சென்று வந்தாள் .

பணிமுடித்து வீடு வந்ததும் மனைவியின் அருகில் அமர்ந்து பேசுவார் கமலக்கண்ணன் . மகனைப் பற்றியே தான் உரையாடல் இருக்கும் . சமாதானம் சொல்வார் .

' நேர்மையும் , கண்டிப்பும் இக்காலத்துப் பிள்ளைகளுக்குக் கசக்கின்றன . அவன் திருந்தி வருவானா ? இல்லை ...'

எட்டு நாள்களுக்குப் பின் லட்சுமியின் உயிர் மருத்துவமனையிலேயே பிரிந்தது . மகள் ரம்யாவுக்கு ஆறுதல் சொல்ல அவரால் இயலவில்லை . அவளுக்கு அம்மா தான் எல்லாம் .

வேகமாகச் சடங்குகளும் முடிந்து விட்டன . மகனின் வருகை பற்றி எதிர்பார்த்த உறவும் , சுற்றமும் கமலக்கண்ணனையே கொள்ளி போட வைத்தது .

இருபது நாளைக்குப் பின் அடுத்த வீடு திரும்பியது . பிளஸ் டூ படிக்கும் ரம்யா பள்ளிக்கு ஒழுங்காகச் சென்று வந்தாள்.

நாற்பது வருடத் தாம்பத்யம் . விரைவாகப் பெற்று வளர்ந்த பிள்ளைகள் . தற்போதைய மனைவியின் வெற்றிடம் , கமலக்கண்ணன் முடங்கிப் போனார் .

இப்போதெல்லாம் அவருக்கு இரவில் தூக்கமில்லை ! ரத்தக் கொதிப்பும் , சர்க்கரை நோயும் அவரைப் பங்கு போட்டன . மருத்துவர் தந்த மாத்திரைப் பட்டியல் , ரத்தப் பரிசோதனை எனப் பற்பல சோதனைச் சீட்டுகள் கோப்பாக உருவெடுத்தன . இரவில் மாத்திரை போட்டால் தான் தூக்கம் வரும் நிலைக்கு வந்து விட்டார் அவர்.

கைவசம் நிறைய மாத்திரைகள் , மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார் .

***

கதவு தட்டப்படும் ஓசை . இரவு நேரத்தில் யார் தட்டுவது ? எழுந்து திறந்தார்.

முகம் நிறைய தாடியுடன் , ஜீன்ஸ் , டீ சர்ட் சகிதம் ஓடின . அவனுடன் நான்கு பேர் . அவர்களும் அதே போலத் தான் .

' என்னைத் தெரியலியா அரைகுறை அப்பா !' ராகேஷ் தான் , குரல் அடையாளம் காட்டியது .'

'அப்பா ... ! அம்மா ... தங்கையெல்லாம் எங்கே ?' குரல் கேட்டு ரம்யா தேம்பி தேம்பி வந்தாள் .

' அண்ணா ... அம்மா செத்துட்டாங்க ... ' என்றதும் ராகேஷின் கண்களில் நீர் தளும்பின .

' இவர்கள் என் நண்பர்கள் . நாங்க ஒரு புராஜெக்ட்டுக்காக வந்திருக்கோம் . இங்கே தான் அது நடக்கப் போகிறது . உங்களை எல்லாம் பார்க்கணும்னு தோணிச்சி .. அதான் வந்தேன் .'

இந்தியில் அவர்களிடம் ராகேஷ் ஏதோ சொன்னான் . கமலக்கண்ணனுக்கு புரியவில்லை . தளர்ந்து போன அவருக்கு எல்லாமே புதிராகவே தெரிந்தன .

அனைவரும் ராகேஷ் காண்பித்த அறைக்குச் சென்றனர் . அனைவரும் இரவு முழுவதுமாக நிறைய பேச்சுகள். வரைபடம் வைத்தும் தீவிரமாகப் பேசிக் கொண்டனர் . இந்தியிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறிக் கேட்டது . காலை , மதியம் , இரவு அவர்களுக்கு எல்லாமே உணவு விடுதியிலிருந்து வாங்கி வந்து தந்தான் ராகேஷ் .சன்னல் வழியாக கவனித்த கமலக்கண்ணன் மனத்தில் பிரின்சிபாலின் சொற்கள் திரைப்படம் போல odina .

முடிவுக்கு வந்தார் . ஏதோ தவறான ஒன்று நடக்கத் திட்டமிடப்படுகிறது . இதைத் தடுக்க என்ன செய்யலாம் ? நாளை இரவு தான் செயல்படுத்தப் போவதாக அவர் காதில் விழுந்தன அரைகுறை வார்த்தைகள் .

***
விடிந்தது. சுறுசுறுப்பானார் . அறைக்குச் சென்று தன்னிடமுள்ள மாத்திரைகளில் தூக்க மாத்திரைகளை மட்டும் எண்ணினார் . பால்காரனிடம் ஒன்றரை விட்டர் பால் வாங்கினார் . ரம்யாவிடம் அஞ்சறை பெட்டியிலிருக்கும் கசகசாவை அள்ளி மைப் போல அரைக்கச் சொன்னார் .

' ராகேஷ் ... உனக்கும் நண்பர்களுக்கும் நான் இன்றிரவு பால் தரப்போகிறேன் . அவசியம் அவர்களும் , நீயும் சாப்பிட வேண்டும் .. '

'சரிப்பா...' ஐந்து டம்ளர்களில் முப்பது தூக்க மாத்திரைகளையும் , கசகசா விழுதையும் சரி பங்காகக் கலந்தார் . மகனின் அறைக்குச் சென்று எல்லோரிடமும் டம்ளர்களைத் தந்தார் . பால் டம்ளர்கள் கை மாறின . நிம்மதியாகப் படுக்கச் சென்றார் கமலக்கண்ணன் .

***
வீட்டுக்கு அருகிலுள்ள ஆற்றுப் பாலத்தின் மீது அதிவேக ரயில் தடதடத்துச் சென்ற ஒலி கேட்டு விழித்தார் . மகனின் அறைப்பக்கம் பார்த்தார். எல்லோரும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர் . ரயில் பாலத்தைத் தகர்க்க இருந்த தீவிரவாதியாக மாறிவிட்ட மகனையும் , இதர தீவிரவாதிகளையும் ஜெயித்து விட்டார் அவர் .

அடுத்தநாள் . செய்தித்தாள்களில் தலைப்பு செய்திகள் . நிகழவிருந்த ரயில் பாலம் தகர்ப்பு , பல பயணிகளின் சாவுகளைத் தடுத்த பெருமை கமலக்கண்னையையே சாரும் .

நன்றி : புதுகைத் தென்றல் - மே 2008

Friday, 4 March 2011

இசைக்குறிப்புகளை மொழி பெயர்த்தல்

“இசைக் குறிப்புகளை மொழி பெயர்த்தல்’’ எனும் தலைப்பைக் கொண்ட கவிதைத் தொகுப்பின் படைப்பாளி கவிஞர் வே. முத்துக்குமார்.

இவர் நெல்லை மண்ணுக்குச் சொந்தக்காரர். இவர் வடக்கு வாசல், கல்கி, மங்கையர் மலர், உயிர்மை, பரிசல், கதைமலர், உண்மை, கதை சொல்லி, சூர்யகாந்தி, விழிப்புணர்வு, குமுதம், நவீன விருட்சம், முத்துக்கமலம் மற்றும் இணைய இதழ்களான உயிரோசை, கீற்று, நட்பூ ஆகியவைகளில் 2002 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டு முடிய வெளிவந்துள்ள தன் கவிதைகளை தொகுத்துத் தந்துள்ளார். இத்தொகுதியில் 86 கவிதைகள் உண்டு.

இவரது கவிதைகளை அவ்வப்போது படித்தாலும், ஒரு சேர அத்துணைக் கவிதைகளையும் வாசகர்கள் படிக்க ஒரே தொகுப்பாக தந்துள்ளது சிறப்பு. 86ல் 26 கவிதைகளுக்குத் தலைப்புகளே தரப்படவில்லை. தலைப்பற்ற கவிதைகள் மனங்களை வருடிச் செல்லும், படிக்கும் வேளையில்.




“உயிர்மை’’ இதழில் வெளியான கவிதையே (பக் 86) முத்துக்குமாருக்கு 61 வரிகள், 4 பக்கம் (பக். 24-27) கவிதை மற்றும் நாலே வரிகளிலும் (பக் 50) கவிதைகளை படைக்கத் தெரியும் என்பதை நிதர்சனமாக்கி உள்ளன.


அம்மா, உறவுகள், கடவுள், பூர்வீக வீடு, பணம் இவையெல்லாம் தனிப்பட்ட மனித வெளிப்பாடுகளாகும். இவை சம்பந்தமான கவிதைகளை வாசிப்பவன் தன்னில் கடந்த, நிகழ்கால நிகழ்வுகளைப் பின்னோக்கி செல்ல வைக்கின்றன.


தொகுதியின் துவக்கத்திலேயே கவிஞர் முத்துக்குமார் கட்டியங்கூறி விடுகிறார் (பக் 3-4). வாசிப்பை நேசிப்பவர்கள் கவிஞரின் தன்னிலை விளக்கத்தைப் படித்தபின், கவிதைகளை வாசிக்க வேண்டும்.


தன் வாழ்வில் தனக்கு மட்டுமே வாய்த்த சில அபூர்வத் தருணங்களைத் தாமிர பரணியின் நதி நீராய் உள்ளங்கையில் தேக்கி தன் சக மனிதனுக்கு மாற்றுகிறார் என பதிப்பாளரின் கூற்று அருமையான வாசகமாகும்.


நல்ல இக்கவிதைத் தொகுப்பை வழமையான நேர்த்தி, கவனிப்புகளோடு சிறந்த வகையில் வெளியிட்டுள்ள ‘வம்சி புக்ஸ்’ பதிப்பகத்துக்குப் பாராட்டுகள். கவிதைகளை நேசிக்கும் மனம் படைத்தவர்கள் அவசியம் படிக்க வேண்டிய தொகுப்பு.


இசைக்குறிப்புகளை மொழி பெயர்த்தல் (கவிதைகள்)வே.முத்துக்குமார்வெளியீடு: வம்சி புக்ஸ்19 டி.எம். சாரோன், திருவண்ணாமலை.செல்: 9444867023விலை ரூ.90/-


குரு.ராதாகிருஷ்ணன்

நன்றி : வடக்கு வாசல் - பிப்ரவரி 2011

கிருஷியின் சிருஷ்டிகள்

மனிதர்களின் தோற்றம், சமூகம், கலாச்சார வளர்ச்சி மற்றும் குணங்களைப் பற்றிய அறிவியல் பிரிவு ‘ஆந்த்ரபாலிஜி' அல்லது மானிடவியல் என அழைக்கப்படுகிறது. இத்துறை கடந்த 40 லட்சம் ஆண்டுகளில் மனித இனம் சார்ந்த உயிரியல் பூர்வமான தகவல்களும் ஆராய்வில் எடுத்துக் கொண்டுள்ளன.
முதன் முதலில் மனித இனம் தோன்றிய காலங்களில் ஓசை (சப்தம்) மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொண்டனர் என மானிடவியலார் கண்டறிந்த உண்மை ஆகும். மனிதன் ஓசைகளைப் பிறப்பித்து பரிணாம வளர்ச்சியின் வழி பாட ஆரம்பித்திருக்கலாம். வர, வர அதுவே பாடல், கவிதை என உருமாறி வந்துள்ளன என்பதுவும் மானிடவியலாரின் கூற்று எனப்படுகிறது.


மகாகவி பாரதி ஓசை நயம், சந்தம் மிக்க பல கவிதைகளை நமக்கு வழங்கியிருக்கிறார். அவரிடமிருந்து பாவேந்தர் பாரதிதாசன் அவர் வழி கவிஞர்கள் என தொடருகின்ற நிலை நமக்குத் தெரிந்ததே.
பேனா பிடித்தவர் எல்லாம் பெர்னார்டுஷா ஆகிவிட முடியுமா! கவிஞர்களில் சிலர் ‘அத்தி பூத்தது போல்' என சொல்வார்களே, அப்படி சிலர் அவ்வப்போது நமக்குக் கிடைப்பது உண்டு. எனக்கு அப்படி கிடைத்தவர்தான் கவிஞர் கிருஷி.

பாரதி வாழ்ந்த வருடங்கள் 39 தான் (1882-1921). ஓசை நயமும், சந்தம் மிக்க பல்வகை கவிதைகளை நமக்குத் தந்து விட்டு சென்றவர்.

நெல்லைக் கவிஞர் ‘கிருஷி'யின் "மழை வரும் பாதையில்' எனும் கவிதைத் தொகுதியை வாசிக்கும் வாய்ப்பினை நான் பெற்றேன். இந்தத் தொகுதியில் மதம், மனித நேயம், இயற்கையின் நேசிப்பு, தீவிரவாதம், பெண்ணியம் இன்னும் இன்னும் பல கவிதைகளை 53 தலைப்புகளில் வழங்கியுள்ளார்.
மேலும் இத்தொகுதிக்கு ‘தீங்கின்றி நாடெல்லாம்' ஆய்வறிஞர் பேரா.தொ.பரமசிவன், ‘கல் சிலேட்டில் வானவில்' எனும் தலைப்பில் கவிஞர் கல்யாண்ஜியும் செழுமையும் அருமைகளும் நிறைந்த அணிந்துரைகளை வழங்கியுள்ளனர்.

இப்போது வெளிவரும் கவிதை, உரைநடை நூல்கள் எல்லாவற்றையும் இன்றைய வாசகன் இலகுவாக வாங்கி விடுவது இல்லை. நூலாசிரியர் பேர் பெற்றவரா, நூலின் அணிந்துரை, பக்க அளவு, முகப்பு பின் அட்டை வடிவமைப்பு இவையெல்லாம் வாசகருக்கு பிடித்தால் தான் விலை போகும். அதற்கு தேவை தரமானதாள், அச்சு நேர்த்தி, முழுமையான மெய்பு திருத்தம், கட்டமைப்பு இவைகள் தான் இன்றைய தேவைகள்.

இவைகளை எல்லாம் கருத்தில் கவனமிருந்தி மிகமிக நல்ல முறையில் கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ள திருவண்ணாமலை ‘வம்சி புக்ஸ்' பதிப்பகத்தாருக்கு என் பாராட்டுகள்.

‘இயற்கை'யை சிறக்கச் செய்யும் கவிஞரின் ‘மழை' வாசகனுக்கு சொல்கிற ரகசியம்: (பக்.17)

மலைமுகடுகளிலும்,விசும்புவெளியிலும்கார்மேகங்களால்மிதந்து தவழ்ந்ததும்நான் தான்தாழ்ந்த நிலம் நோக்கிசதா தாவிச் செல்வதும்பள்ளங்களை நிரப்பிப் பாய்வதும்என் சுபாவம்குளங்களில் ஏரிகளில்நிறைந்து தளும்புகிறதுஎன் மனம்

‘மதம்' பற்றிய கவிஞரின் எண்ணங்களை படிக்க வேண்டும் (பக்.71) அவசியமும், அவசரமும் தேவை என்பது என் எண்ணம்.
குண்டு வைத்தவனுக்கு / உண்டு மதம் / வெடிக்கும் குண்டுகளுக்கு / ஏது மதம்?

வெடித்துச் சிதறும் / மனிதப் பிண்டங்களுக்கு / என்ன மத அடையாளம் / ரத்தச் சிதறல் தவிர!

வான் கிழிக்கும் மரண ஓலம் / யாரை அழைக்கும் / அம்மா தவிர!
பற்றிப்படரும் / நெருப்புச் சுவாலையில் / சுற்றி வளைக்கும் கரும்புகையில் / எந்தக் கடவுள் தோன்றக்கூடும்!

கிளம்பி வரும் எந்த மதம் / ஆளப்போகிறது நாளை / பிணக்குவியல் மீது / சிம்மாசனம் போட்டு நிலம் பற்றி எரியும் / சடலக் குவியலில் - உன் சகோதரியின் / கிழிந்த மேனி / உன்னையும் அழைக்கக்கூடும்.

உன் நண்பனின் குழந்தை / கிடக்கக் கூடும் / கரிக்கட்டையாய் ஆம் சகோதரனே.

பாரதியார் "ஆசை முகம் மறந்து போச்சே'' என அவர் காலத்திய வட்டார வழக்கை சொன்னார்.

கவிஞர் கிருஷி சொல்கிறார்: "செத்த நேரம் / தலை சாய்த்துத் / தைப்பாற ஒரு / குட்டிச் சுவருமில்லை "அகாலத்தின் பௌர்ணமி'' எனும் கவிதையினுடே வருகிறது. (பக்.94) இவ்வரிகள்.

அருமை, எளிமை, சுருக்கம் கொண்ட கவிதைகளை யாத்துத் தந்த கவிஞர் ‘கிருஷி' அவர்களை பாராட்டுகிற வகையில் எனக்கு தகுதியில்லை தான். இருப்பினும் இது போன்ற பல தொகுதிகளை இவர் தர வேண்டும் தமிழ் உலகுக்கு என்ற விருப்பம் எனக்கு நிறைய உண்டு.


"போர் சொல்லும் கவிஞர்'' என வரும் காலங்களில் ‘கிருஷி' போற்றப்படுவார். என் முடிந்த முடிவாகும் இது.

"மழை வரும் பாதையில்'' - கவிதை - வெளியீடு: வம்சி புக்ஸ், 19 டி.என்.சாரோன், திருவண்ணாமலை. பக்கங்கள் 112, விலை 2 ரூ. 60/-


குரு.ராதாகிருஷ்ணன்

நன்றி : யமுனை இணைய இதழ் - பிப்ரவரி 16 - 28, 2011

Monday, 28 February 2011

பெயர்க்காரணம்


என் அப்பா , அம்மா வழி பூர்வீக கிராமம் கருப்புக்கட்டி . நெல்லையிலிருந்து களக்காடு போற ரோட்ல மூன்றடைப்புன்னு ஒரு ஊரு வரும் . அங்கிருந்து ஐந்து கல் தொலவுல உள்ளாற இருக்கிற குக்கிராமம் . தின்னேலிடேசனுலேர்ந்து இருபத்தஞ்சு கல்லு தூரம் செரியாக இருக்கும்ன்னு அப்பா சொல்லுவாரு.

ஆடிமாசம் பொறக்கும் . அம்மன் கொடைகள் எல்லாக் கிராமங்கள்ல நடக்கும் . கூலு ஊத்துவாங்க . படையல் போடுவாக . மெயின் ரோட்ல இருந்து ரெட்டை மாட்டு வண்டிப் பயணம் தான் எங்கூருக்கு , வருஷம் தவறாமக் கொடைக்கு கிராமம் கிராமம் கிராமம் எங்களோட எங்களோட கூப்புடுரீக கூப்புடுரீக கூப்புடுரீக கூப்புடுரீக கூப்புடுரீக கூப்புடுரீக கிராமம் போய் வருவோம் .

டவுண்ல இருக்கிற ஆளுக சந்தடி , சத்தம் சல்லைகள்ல வதங்கிப் போன நாங்க சொதந்தரமா கிராமத்துல களத்துமேடு , வாய்க்கா வரப்பு , மரங்கொடிக , பச்சப்பசேல் வயலுகள்ள திரியர சொதந்திரமிருக்கே அனுபவிச்சு பாத்தான் தெரியும். சொன்னாவே சொகமாயிருக்கும் .

கொடைக்கு போனா கிராமத்துப் பெருசுகிட்ட நெறய கதைக கெடக்கும் . அதுல சின்னப்பசங்க வயசாளிக கிட்டே தாத்தா ... கதை சொல்லுங்கோன்னு கேட்டுட்டாப் போதும் ...

அவுகளுக்கு , வெள்ளச்சோறு மேல காரமா ஆட்டுக் கறிக் கொலம்பு ஊத்தி சுடச்சுட சாப்புட்ட மாதிரி மொகத்துல கொம்மாளமும் , சிரிப்பு தான் தெரியும் .

எனக்கு அந்த கதக்கேக்கும் அனுபவம் கெடச்சது . கிராம பெரிசு செருமிகிட்டு கதைய ஆரம்பிச்சது . தூரத்துல எனக்கு மாமா மொற வேணும் . ரெங்கசாமி வந்தாரு . எங்களப்பாத்து தான் வந்தாரு போல ...

பேராண்டி ... அந்தா ... வாராறே ரெங்கசாமி அவரு பேரு என்ன தெரியுமா ? தலய பக்க வாட்டில அசச்சேன் .

பேயாண்டி ... எனக்கு சிரிப்பாணி வந்துச்சு .

தாத்தா ... அவரு பேரு ரெங்கசாமி . ஊர்ல ஏன் அவரு பேர மாத்தி கூப்புடுரிக ?

பேராண்டி ... அது ஒரு பெரிய கதைன்னாரு அதுக்குள்ள ரெங்கசாமி மாமாவும் எங்களோட கத கேக்க ஒக்காந்தாரு .

இவரு நெறய நெலம் வச்சிருக்காரு . பக்கத்துல பெரிய கெணரும் இருந்தது . கோடமழை பேஞ்சதும் ஆத்துல நெறயத் தண்ணீ வந்தது . நெலத்துக்காரங்க கெணறுகள்ல நீரு பெருகிடுச்சி . ஊர் சனங்க எல்லாம ஜாடா வயல்ல ஒழவு வேலய ஆரம்பிச்சாங்க .


ஒரு நா ரெங்கசாமி பக்கத்து வீட்டு பரமுவோட தூக்கம் வராம ராத்திரி ரொம்ப நேரம் ஒழவையும் , மத்ததையும் பேசினாரு. பின்ன படுக்கப் போயிட்டாக .

வெடிக்காலம் வர்றதுக்கு முந்தியே , மாடுக , நோக்காவோடு ( நுகத்தடி ) கெணத்துக்கு போயி கமலை கட்டி பரமுவைத் தண்ணி பாச்ச கேட்டுக்கிட்டாரு ரெங்கசாமி .

செரி ... மாமோய் ... கமலை சால் கயிறு கெணத்து மேட்ல தானே போட்டிருக்கீக ...

ஆமாண்டா அதுல்லா தயாராயிருக்கு , நீ தண்ணி பாச்சு ஒதவணும்னாரு

பரமு சம்மதிச்சான் .

வெள்ளன ரெங்கசாமி எழுந்துருச்சாரு . கொல்லைல போயி செங்கலை தூளாக்கி பல் தேச்சாரு . பொஞ்சாதி தாயாரு கையில தந்த நீச்ச தண்ணி ஒரு சொம்பு குடிச்சாரு . சட்ட போடாம , மம்மட்டியை எடுத்துக்கிட்டு தோள்ல துண்டோடு கெளம்பிட்டாரு . பரமு இந்நேரம் போயிருப்பான் . அவன் கமலை கெட்றதுக்கு முன்னால நாநிக்கோணும்ற நெனப்போட கால்களை எட்டிப்போட்டாரு .

கெணத்தடியில் மாடுகள் கீழே , மேல போய்வர சத்தம் கேட்குது . வெரசா வரப்புல ஏறி மம்பட்டியால முகப்புல வெட்டுனாரு . தண்ணி மளமளனு பாஞ்சு வருது .

கெணத்துத் தண்ணி மதகுத் தண்ணி மாதிரி இத்தன வேகமா வருது . ரெங்கசாமி குனிஞ்சு தண்ணியப் பாத்துட்டே ...

ஏலேய் ... பரமு ... மொள்ளடா ... அவசரப்படாத ...

மாமோய் ... ஒங்க வேலயப் பாருங்க ... நிமிராம ... தண்ணி பாச்சுங்க ... புறத்தாலே பேசுக்குவோம் பாஞ்சு வர்ற எக்கச்சக்க தண்ணீயப் பாத்ததும் ரெங்கசாமிக்கு தெகப்பூட்டிச்சி . கெணத்து பக்கம் பாத்தாரு . மாடுக ரெண்டும் முன்ன , பின்ன தன்னால போயி வருது . பரமு, கமலைக்கல்லுல ஒக்காந்து பெரிய சுருட்டைப் பிடிக்கான் . பரமுக்கு இந்தப் பழக்கம் இல்லயே. புதிசா இருக்கே . திரும்பவும் உன்னிப்பா பாத்தாரு ... ரெங்கசாமிக்கு கை , கால் ஒதற ஆரம்பிச்சது .

இது பரமு இல்ல ... அப்பால யாரு ... ? இது காத்து கருப்பு வேலத ... மேல ஆகாசத்தைப் பாத்தாரு . விடிய நெறய பொழுது இருக்கும் போல ... யோசன வந்தது . அப்பத்தான் , அவருக்கு.

மொள்ள ... மம்மட்டியை வரப்பு மேல வெச்சு , மேல் துண்ட தலப்பாகட்டி , சாம்புல சுத்துனாரு . இடுப்பு வேட்டிய இறுக்கக் கட்டிகிட்டு , வயலு தண்ணில குப்புற படுத்து நகந்தாரு . வரப்பு , களத்துமேடு , அப்பால வண்டித்தடம்னு வரிசையா ஊர்ற போது தெரியுது . அப்படியே தம் கட்டி வெறியோட ஊர்றாரு ரெங்கசாமி .வீட்டுத் தெரு வந்தது . எந்திருச்சாரு . ஒரே ஓட்டம் , வீட்டுக்கதவை தட்னாரு . பொஞ்சாதி தெறந்தாக . மேல் மூச்சு , கீழ் மூச்சு வாங்க சன்கதியைச் சொன்னாரு .

அம்மா ... ! கன்னியம்ம ... எம்புருசனக் காப்பாத்திட்டியே ... என் தாலிய காப்பாத்திட்ட அம்மா என அழுதாள் தாயாரு .

வெடிஞ்சது . கிராமப் பெரியவங்களைப் பாத்து நடந்ததைச் சொன்னாரு . உடம்பு முழுதும் ரத்தவிளாறாக இருந்த கோடுகளுக்கு நல்லெண்ன தடவிகிட்டாரு.

கூட்டமா எல்லோரும் கெணத்தடிக்குப் போனாக . அங்கே ... இரண்டு மாடுகளும் இறந்து நோக்கா மரம் , மம்மட்டியெல்லாம் தூள் தூளாக ஒடஞ்சி கெடக்குது .

பரமுவும் நடந்ததைக் கேள்விப்பட்டு நடுங்கிப் போனான் . நல்ல வேள நா தப்பிச்சேன் என மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டான் .

இது பேயோட வேலதா ... கோபம வந்து தான் இப்படி செஞ்சிட்டது . ரெங்கசாமி பேயோட மல்லுகட்டாம சாதிரியமாத் தப்பிச்சு வந்துட்டாரில்ல .

அதுனால வரு எங்களுக்கெல்லாம் பேயாண்டி என முடிச்சார்.

நான் ரெங்கசாமி மாமா மொகத்தைப் பாத்தேன் . சின்னதா சிரிப்பு மட்டும் தெரிஞ்சது .

கிராமங்கள்ல பட்ட பெயருக்கு பின்னால நெறய கதைக்க இருக்கும் போல . விறுவிறுப்பான பேய்க்கதை எனக்குக் கெடச்சது .

திக்குதிக்குன்னு அடிச்சிகிடுது மனசு எனக்கு . ஏன்னா சின்னப்பயதானே நானு .


நன்றி : கதை சொல்லி காலாண்டிதழ் - செப்டம்பர் - நவம்பர் 2007

Sunday, 20 February 2011

சிற்றிதழ்



தமிழ் எழுத்துலகில் சிற்றிதழ்கள் வரவும் , வாசிப்பும் அபரிதமானது . சிற்றிதழ்களில் படைப்பாளர்களின் பங்கும் அளப்பரியது . அவர்களின் அறம் சார்ந்த , ஆய்வு நோக்கில் மொழி வளம் பற்றிய கட்டுரைகள் சுதந்திரமாக வெளிவருகின்றன . சிற்றிதழ்களின் ஆசிரியப் பெருமக்களின் துணிந்த முடிவுகள் தான் இவைகளுக்குத் தளங்கள் அமைத்துத் தருகின்றன எனலாம் . மேலும் இதற்கென தீவிர வாசகப் பெருமக்கள் தமிழ்நாட்டில் நிறைய இருக்கின்றனர் . அவர்களின் நல் ஆதரவு சிற்றிதழ்களின் பெருக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் காரணமாக அமைந்து விடுகின்றன .


'கடவுள் அதிகாரமும் வல்லமையும் கொண்டவர்களை விட தன் படைப்புகளிலேயே எளிமையானவற்றோடு தான் அதிகம் காணப்படுகிறார் என்பதை நான் அறிவேன் . அதனால் தான் எளியவனாக இருக்கப் போராடிக் கொண்டிருக்கின்றேன் . எளியவர்களுக்குச் சேவை செய்யாமல் என்னால் அந்த நிலையை அடைய முடியாது . ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் பணியாற்றுவதில் எனக்குப் பெரும் விருப்பம் இருக்க இதுதான் காரணம் . அரசியலுக்கு வராமல் அவர்களுக்கு நான் பணியாற்ற முடியாது 'இச்செய்தியை காந்தி தனது ஆங்கில வாரச் சிற்றிதழான ' யங் இந்தியா ' வில் தனது அரசியல் வாழ்க்கைக்கான காரணத்தை இந்திய இளைஞர்களுக்குச் செய்தியாக விடுத்தார் . இச்சிற்றிதழின் தாக்கம் இந்திய விடுதலைக்கு 23 ஆண்டுகளுக்கு முன்னரே வெளியானது ( 1924 )



தமிழில் சிற்றிதழ்களில் மைல் கல்களாக நினைவு கூறப்படுவது அமரர் சி.சு.செல்லப்பாவின் ' எழுத்து ' , அமரர் வ.ரா, புதுமைப்பித்தன் , சிதம்பர ரகுநாதன் , ந.பிச்சமூர்த்தி ஆகியோர் நடத்திய ' மணிக்கொடி ' , திரு.விஜயபாஸ்கரனின் ' சரஸ்வதி ' ஆகியவை அடங்கும் . புதுக்கவிதை , கட்டுரை , சிறுகதை என ஒளிர்ந்தவை ஏராளம் . இவை வலம் வந்த வருடங்கள் 7 முதல் 12 வரை என இதழ் ஆய்வர்கள் கூறுவதுண்டு .

அதே போல மகாகவி பாரதி நடத்திய ' இந்தியா ' , பாரதிதாசன் நடத்திய ' குயில் ' எனும் சிற்றிதழ்களின் தாக்கத்தை இதழ்களின் முன்னோடிகள் சொல்கின்றனர்.

தமிழ்நாட்டில் வெளியான சிற்றிதழ்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது . சிற்றிதழாக உருப்பெற்று நீட்சியாக வெகுஜன இலக்கியமாக மாறியதாக சமீபத்தில் கவிப்பேரரசு வார இதழ் பேட்டியில் சொல்லியிருக்கிறார் . சிலவற்றை இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் .

' சிற்றிதழ் என்பது தலைக்காவிரி மாதிரி . அங்கிருந்து தான் வெகுஜன இலக்கியம் தொடங்குகிறது . தலைக்காவிரி தொடங்குகிற இடத்தில் ஒரு ஆடு தாண்டிக் குதித்துவிடும் என்பார்கள் . இதுதான் பிரவாகம் எடுத்து கரைகளை ஊடறுத்துக் கொண்டு அருவிகளாய் , வெள்ளமாய் ,வயல் வெளிகளில் பாய்கிற ஒரு நதியாக வருகிரது . அதனால் தலைக்காவிரியில் எப்படி ஊற்று சிறிய அளவில் தொடங்கி பெரிய வெள்ளமாய்ப் பாய்கிறதோ அதே போல் தான் வெகுஜன இலக்கியம் கூட சிற்றிலக்கியம் என்ற தலைகாவிரியில் தான் தொடங்குகிறது '.

இன்றைய சூழலில் வெளிவருகின்ற சிற்றிதழ்கள் சிலவற்றைப் பார்ப்போம் . சென்னையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ' புதுகைத் தென்றல் ' ஏழாண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது .




இவ்விதழ்களின் மூத்த படைப்பாளர்கள் , முன்னணி எழுத்தாளர்கள் , கவிஞர்கள் மற்றும் வளரும் தலைமுறையின் இளம் எழுத்தாளர்கள் , கவிஞர்கள் ஆகியோரின் பங்களிப்பு போற்றத்தக்கதாகும் . இவர்களால் சங்கத்தமிழ் இலக்கியம் , பெண்ணியச் சிறப்பு , தமிழில் கலைச் சொற்கள் , தேசீய தலைவர்களைப் பற்றிய சிறப்புகள் என வாசகர்களின் தேடல்களுக்குச் சரியான விடைகளைத் தருகின்றன . இதழாசிரியர் புதுகை.மு.தருமராசன் தமிழ்ப்பற்றாளர் . அவரது சீரிய கண்காணிப்பில் இவ்விதழ் வெளிவருகிறது .

அடுத்து பட்டுக்கோட்டையிலிருந்து வெளிவரும் ' இலக்கியச் சிறகு ' . இவ்விதழ் எண் வழிச்சுற்று சிற்றிதழாகும் . சற்றொப்ப 10 வருடங்களாக வெளிவருகிறது . இதழாசிரியர் திரு.மு.இராமலிங்கம் தமிழ்ப் பற்றாளர் . இவரே ' Shine ' என்னும் ஆங்கில சிற்றிதழ் ஒன்றையும் நடத்தி வருகிறார் . இந்த ஆங்கிலச் சிற்றிதழையும் 12 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் . இவ்விரண்டு சிற்றிதழ்களுக்கு நிறைய வாசகர்கள் உண்டு . விளம்பரங்கள் கிடையாது . இருப்பினும் சிற்றிதழ்களுக்கும் பல சிரமங்களை இதழாசிரியர் ஏற்றாலும் தொடர்ச்சியாக நடத்தி வருவது பாராட்டப்பட வேண்டிய நற்செயலாகும் . திருவாளார்கள் வே.சபாநாயகம் , காதம்பரி , எஸ்ஸார்சி , பாவலர் எழுஞாயிறு , சுப்ரபாரதிமணியன் , இளசை அருணா, தீபம் எஸ்.திருமலை , வளவ.துரையன் , குரு.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்களின் சீர்மிகு படைப்புகளால் இலக்கியச்சிறகு இதழுக்கு வளம் சேர்க்கின்றனர்.

புதுவையில் வாழ்ந்து வரும் , நாட்டுப்புற இயலின் பிதாமகர் அறிஞர் கி.ராஜநாராயணன் நடத்தும் ' கதை சொல்லி ' சிற்றிதழைக் குறிப்பிட வேண்டும் . இதழின் பொறுப்பை கவிஞர் கழனியூரனிடம் ஒப்படைத்து விட்டார்.பின் , தற்போது சென்னை வழக்கறிஞர் திரு.கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பொறுப்பாசிரியராக இருந்து நடத்தி வருகிறார் . இந்த இதழும் 2 ஆண்டுகளாக வெளிவருகிறது . நாட்டுப்புறக்கதைகள் , பாரம்பரிய பழக்க வழக்கங்கள் , மறைந்து போன தமிழர்களின் சொல்லாடல்களை விரும்பிப் படிக்கும் வாசகர்களிடையே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சிற்றிதழ் ' கதை சொல்லி '.


இந்தியத் தலைநரிலிருந்து தமிழ் மாதச் சிற்றிதழ் ' வடக்கு வாசல் ' . நான்கு ஆண்டுகளை முடித்து ஐந்தாம் ஆண்டுக்குள் நுழையும் சிற்றிதழ் இது . தமிழகப் படைப்பாளர்கள் , கவிஞர்கள் பங்கேற்று சிறப்பித்து வரும் இதழாகும் , நடுவணரசு செயலகத்தில் மேல்நிலை அலுவலராகப் பணியாற்றி , விருப்ப ஒய்வு பெற்ற திரு.கி.பென்னேஸ்வரன் தான் நிறுவனர் மற்றும் ஆசிரியராக இருக்கிறார் . கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் . பிள்ளைகளின் கல்வி , அரசுப்பணி நிமித்தம் டெல்லி வாழ் தமிழராகிப் போனவர் . ' யதார்த்தா ' எனும் நாடக குழுவை நிறுவி டெல்லித் தமிழர்களுக்கு பல நாடகங்களைத் தந்தவர் . தமிழ்ப் பற்றாளர் . பென்னேஸவரன் விருப்ப ஒய்வின் பேரில் கிடைத்த பணத்தை முழுமையாக வடக்கு வாசலுக்கு அர்ப்பணித்து நடத்தி வருகிறார் . தமிழக வாசகர்களிடையே பரவி செல்வாக்கைத் தேடிக் கொண்ட சிற்றிதழ் ' வடக்கு வாசல் ' .


அடுத்து மும்பையிலிருந்து வெளியிடப்படும் மாத தமிழ்ச் சிற்றிதழ் ' தமிழ் லெமூரியா '.இவ்விதழின் முதன்மை ஆசிரியர் சு.குமணராசன் தமிழ்ப்பற்றாளர் மட்டுமன்றி புலமையுடனும் திகழ்பவர் .மராட்டிய மாநிலத்தின் தமிழர்களுக்காக நடத்தப்படுகிற சிற்றிதழ் . ஆய்வறிஞர் தொ.பரமசிவன் , டாக்டர் சுதா சேஷய்யன் , முனைவர் சாரதா நம்பி ஆரூரன் , மருத்துவர் நடராசன் ஆகியோர்களின் படைப்புகளின் மூலம் மராட்டியம் மற்றும் தமிழக வாசகர்களி தன் வசமாக்கிய தமிழ்ச் சிற்றிதழ் இதுவாகும் .

இன்றைய சூழலில் வெளிவரும் குறிப்பிட்ட சில தமிழ்ச் சிற்றிதழ்களில் மட்டும் இக்கட்டுரையில் சுட்டியிருக்கின்றேன். மேலும் நிறைய இதழ்கள் வெளிவருகின்றன . துவக்கப்பட்ட சில மாதங்களிலேயே நின்று போனவை அநேகம் . அச்சு மை விலை ஏற்றம் , தாள்கள் , மெய்ப்பு திருத்தும் பணி மற்றும் நிதி ஆதாரம் ஆகியவைகளே இதழ்களின் மறைவிற்கு மூல காரணங்கள் .

சிற்றிதழ்கள் சேகரிப்பாளர் ஒருவர் தமிழ்நாடின் கிராமம் ஒன்றில் வாழ்ந்து வருகிறார் . வெளியாகும் சிற்றிதழ் முதல் இதழ் முதல் , அவ்விதழின் அடுது வரும் இதழ்களையும் சேகரிப்பவர் . சேகரித்த இதழ்கள் மற்றும் தமிழ் நூல்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார் . 2009 நவம்பர் மாதம் 15 தேதிவரை ' இணையத்தில் ஏற்றிய சிற்றிதழ்கள் 1100 ஆகும் . தமிழ் நூல்கள் 4000 ஐ எட்டும் . பல வருடங்களுக்கு முன் வெளிவந்த நின்று போன சிற்றிதழ்கள் விவரங்களை இணையம் வைத்திருப்பவர்கள் கீழிறக்கிப் பார்க்கலாம் . தவிர சம்பந்தப்பட்ட சிற்றிதழை மீண்டும் சொடுக்கியும் படிக்கலாம் . இவர் செய்து வரும் இப்பணி வருங்கால சந்ததியர் படித்துணர வேண்டுமென்பதே, இவரது தலையாய நோக்கமும் கூட . போற்றுதலுக்குரிய அன்புப் பணி இது .

இணையத்தில் ' www,thamizham.net. ' நாளொரு நூல் 888 ' ( nal oru nool 888 ) எனும் முகவரியில் உள்ளீடு செய்து கீழிறக்கிப் படிக்கலாம் .

இத்தகைய நற்பணிகளை பலன் கருதாது வேள்வியாகச் செய்து வருபவர் சிதம்பரத்தில் பிறந்து தற்பொழுது பொள்ளாச்சி அருகே சூளேசுவரன் பட்டியில் வாழ்ந்து வரும் நடேசன் எனும் பொள்ளாச்சி நசன் தான் மேலே குறிப்பிடப்பட்டவைகளின் நாயகனாவார் . என் கெழுநகை நண்பர் . மேலும் அதிக விபரங்கள் வேண்டுவோர் , அவரது முகவரிக்கு தொடர்பு கொண்டால் கிடைக்கும்.
திரு.பொளாச்சி நசன் ,
1 , சம்பத் நகர் ,
சூளேசுவரன் பட்டி ,
பொள்ளாச்சி
தொ.பே.04259-221278.

இவரைப் போன்ற நற்சிந்தனை கொண்டவர்களால் தான் சிற்றிதழ்கள் வளர்ந்து வருவதுடன் , தமிழ் வாசகர்களின் வாசிப்புகளுக்கும் வழி வகுக்கப்படுகின்றன என்பதை சொல்ல வேண்டியதை என் கடமையாகக் கருதுகிறேன் . மேலும் சிற்றிதழ் வாசகர்கள் , இதழாசிரியர்களை ஊக்குவிக்கும் முகத்தான் தங்களால் ஆன் உதவிகளைச் செய்தல் வேண்டும் . தொடர்ந்து சந்தா செலுத்தி சிற்றிதழ்களை வளர்க்க , நண்பர்களையும் கட்டாயப்படுத்தி வாங்கிப் படிக்கச் செய்ய வேண்டும் என்பதும் இக்கட்டுரையின் நோக்கம் .

சிற்றிதழ்கடலில் மூழ்கி சில முத்துக்களை கையில் கிடைத்தவை மட்டும் வாசகர்களுக்கு தந்துள்ளேன் .

நன்றி : புதுகைத் தென்றல் இதழ் -- ஜனவரி 2010

Saturday, 19 February 2011

நினைவுச் சரங்கள்

எனக்கு தஞ்சை பிரகாஷ் அவர்களின் அறிமுகமும் இலக்கிய கருத்தோட்டங்களைப் பகிர்ந்து கொள்ளவும் செய்தது இறைவனின் அருள் . நான் தொழில் வணிகத் துறையில் பணிபுரிந்து கொண்டிருந்த திருச்சியிலிருந்து தஞ்சைக்கு மாற்றம் கிடைத்தது . அரசு ஊழியம் பார்ப்பவர்களுக்கு போடப்படுகின்ற மாறுதல் ஆணைகளை நிறைவேற்றுவது தான் சம்பிரதாயம் . மீறினால் என்ன நிகழும் என்பதை மாநில அரசுப் பணியாளர்கள் அறிவர்.

தஞ்சையில் தொழிற்பேட்டையிலுள்ள நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டேன் . பின் தஞ்சை அரண்மணையில் இடம் பெற்றிருந்த தொழில் வணிகத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு ஆய்வாளராக மாற்றப்பட்டேன் . அப்போது பூம்புகார் கைவினைத் தொழில்கள் முன்னேற்ற வாரியம் சரஸ்வதி மகாலில் ' கயிறு கருத்தரங்கம் ' ஒன்றை நடத்தியது . நானும் , சக பணியாளர்களும் கயிறு தொழில்களுக்கான உதவி இயக்குநரின் வழிகாட்டுதல்களின் மீது கருத்தரங்கிற்கான பணிகளைச் செய்து சிறப்பாக்கியது இன்றும் என் நினைவில் இருக்கிறது . வாரிய மேலாண்மை இயக்குநருக்கு கருத்தரங்க ஏற்பாடுகள் மனநிறைவை அளித்தமையால் எல்லோரையும் அழைத்து நன்றி தெரிவித்தார் . எங்களில் விருப்பமுள்ளவர்களை வாரியத்துக்குப் பணிபுரிய கேட்டுக் கொண்டார் . நான் ஒப்புதலளித்தேன் .



பூம்புகார் கைவினைத் தொழில் முன்னேற்ற வாரியத்தின் கீழ் இயங்கி வந்த சுவாமிமலை ஐம்பொன் சிலைகள் செய்யும் பயிற்சி நிலையத்தில் கணக்கராக நியமனம் செய்யப்பட்டேன் . அங்கிருந்து தஞ்சையில் இயங்கி வந்த பூம்புகார் விற்பனை நிலையத்திற்கு கணக்கராக மாற்றம் கிடைத்தது .

தஞ்சை மாவட்டத்தில் , கிராமப்புறங்களில் ' அமுதம் சிறப்பங்காடி ' களைத் திறந்து மக்களுக்கு குடிமைப் பொருட்கள் வழங்க ஏற்பாடுகள் நடந்தன . அங்காடிகளுக்குத் தேவைப்படும் எழுத்தர் மேசை , நாற்காலி மற்ற இதர மரச்சாமான்கள் செய்து வழங்குமாறு தஞ்சை பூம்புகார் விற்பனை நிலையத்துக்கு அரசால் ஆணைகள் வழங்கப்பட்டன .

இவைகளுக்கு ஒப்பந்தப் புள்ளிகளைக் கேட்டு உள்ளூரில் விளம்பரங்கள் செய்யப்பட்டன .அதன் பேரில் ஒப்பந்த புள்ளியைக் கொடுத்து அறிமுகமானவர் ஜி.எம்.எல்.பிரகாஷ் என்பவர் . தஞ்சை கீழவீதியில் ஜி.எம்.எல். பிரிண்டர்ஸ் எனும் அச்சகத்தையும் நடத்தி வந்தார்.

பூம்புகார் விற்பனை நிலைய மேலாளரின் வழிகாட்டுதல்களின் பேரில் ஒப்பந்த புள்ளியில் கண்டுள்ளபடி மிகவும் சிறப்பாக மரத்தளவாடங்களை சம்பந்தப்பட்ட கிராம ' அமுத அங்காடிக்கு ' செய்து வழங்கினார் . மரத்தளவாடங்களைப் பெற்றுக் கொண்ட ஒப்புதல் சீட்டுடன் விற்பனை நிலையத்தில் தருவார் . ஒப்பந்தக்காரான ஜி.எம்.எல்.பிரகாஷுக்கு காசோசை வழங்கப்பெறும் .

ஒப்பந்தக்காராக எனக்கு அறிமுகமான ஜி.எம்.எல்.பிரகாஷ் தான் இலக்கியவாதியாக திகழ்ந்த தஞ்சை ப்ரகாஷ் என்பதை என்னுடனான விவாதங்களின் போது அறிந்து கொண்டேன் . தொழில் முறை நட்பைத் தாண்டி எங்களது நட்பு பல பரிமாணங்களை அடைந்தன .

விடுமுறை தினங்களில் பிரஸ்ஸில் ப்ரகாஷைத் தேடிப் போகும் போது அந்த இளைஞன் தான் , ப்ரகாஷின் அசைவைப் பற்றி எனக்கு சொல்வதுண்டு .

ஒருநாள் அச்சகத்தில் ப்ரகாஷிடம் பேசும் வேளையில் ' ஜி.ஜி..ஆர் - இவர் யார் தெரியுமா ? ' எனக் கேட்டார் . ' தெரியாது ' என்றேன் நான் .

இவர் தான் அமரர் கு.பா.ரா.வின் மகன் பாண்டுரங்கம் என்றார் ப்ரகாஷ் . திடுக்கிட்டேன் . மணிக்கொடி எழுத்தாளரான கு.பா.ராஜகோபாலனுக்கு ப்ரகாஷ் நன்றி செலுத்தும் முறையை எண்ணிப் பார்த்தேன் . சமீபத்தில் தமிழ்நாடு அரசு கு.பா.ரா.வின் நூல்களை நாட்டுடமையாக்கி கணிசமான தொகையை அவரின் வாரிசாக பாண்டுரங்கத்திடம் கலைஞர் வழங்கினார் . அப்போது பழைய நிகழ்வுகளை என் மனம் நினைத்தது . தஞ்சை ப்ரகாஷ் இந்ந்ிகழ்வின் போது இருந்திருந்தால் எவ்வளவு மகிழ்ச்சி கொண்டிருப்பார்.

நாட்கள் செல்லச்செல்ல அமரர்கள் கரிச்சான்குஞ்சு , எம்.வி.வெங்கட்ராமன் ஆகியோருடனான பழக்கங்களைப் பற்றி ப்ரகாஷ் சொல்லச்சொல்ல தெரிந்து மகிழ்ந்தேன் . ' பாலம் ' எனும் இலக்கிய இதழ் நடத்தி அதன் மூலம் நிறைய இலக்கியவாதிகளுடான நட்புகளையும் நான் அறிய முடிந்தது . இவைகளை ப்ரகாஷின் நட்பு தான் எனக்கு அளித்தது .

காசோலை பெற ஒரு தடவை ப்ரகாஷ் அலுவலகத்திற்கு வந்திருந்தார் . அப்போது அரசு அலுவலகங்களின் சிகப்பு நாடா முறையைப் பற்றி சிறுகதை ஒன்றை எழுதுங்களேன் என்றார் . அசோகமித்திரன் இதை லேசு பாசாகத்தான் எழுதியிருக்கிறார் . கூட்டுக்குடும்பம் , ஒண்டிக் குடித்தன வாழ்க்கையைப் பற்றி மிக அருமையாக அசோகமித்திரன் எழுதியுள்ளார் . நீங்கள் அலுவலக நடைமுறைகளை ,சிவப்பு நாடா முறைகளைப் பற்றியும் சிறுகதை எழுதினால் நல்லது என்றார் . நினைவில் வைத்திருந்தேன் .

தஞ்சை ப்ரகாஷ் தனக்கு வழங்கப்பட்ட மரத் தளவாடப் பணிகளைச் செம்மையாக முடித்து விட்டார் .அவருக்கு தரப்படவேண்டிய பணக்காசோலைகள் சிறிது தாமதங்களுக்குப் பின் வழங்கப்பட்டன . ஆனாலும் சிறிதும் வெறுப்பு கொள்ளாது நடந்து கொண்ட அவரின் பொறுமையை எண்ணி , எண்ணி இன்றும் வியக்கிறேன் .

சென்னையில் நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் தஞ்சை ப்ரகாஷை சந்தித்தேன் இறுதியாக . முகத்தில் கருகருவென்று வளர்க்கப்பட்ட தாடி , மெலிந்து போன உடம்பு , இவைகளைப் பார்த்து என் மனம் படாதபாடு பட்டது . நலம் விசாரிப்பது எப்படி என திணறிப் போனேன் .

தனது சிறுநீரகக் கோளாறினால் மருத்துவமனையில் சேர்ந்து வெளியில் வந்துள்ளேன் என்றார் . என்னுடன் மிகவும் பரிவோடும் , அன்போடு பேசியது எனக்கு நிறைவு அளித்தாலும் மனதில் கவலையை சுமந்து கொண்டு விழாவிலிருந்து திரும்பினேன் .

சிற்றிதழ்களின் மூலம் தஞ்சை ப்ரகாஷ் அமரத்வம் பெற்றுவிட்டார் என்பதை நான் அறிந்த போது அடைந்த நிலையை வெறும் வார்த்தைகளால் சொல்ல இயலவில்லை .

முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால் ( 1974 - 77 ) நான்கு வருடம் தஞ்சை ப்ரகாஷுடன் ஆன நட்பு இன்றும் என் நினைவுச்சரங்களில் நிலையாக இருக்கின்றன . அவர் மறைந்தாலும் ஆகிருதியுடன் கூடிய அவரது உருவம் இன்னும் என் நினைவில் நிழலாடுகிறது .

பெரும் இலக்கியவாதியான தஞ்சை ப்ரகாஷின் இழப்பு வேறு எவராலும் ஈடு செய்ய முடியாது . இலக்கிய கர்ணன் அவர் .

நன்றி : மல்லிகைப் பந்தல் சிறப்பு மலர் - 2010