Monday, 17 September 2012

ஒழுக்கமான வாழ்க்கை



ஒழுக்கம் மேன்மை தருவதால் அது உயிரை விட முக்கியம்.

ஒழுக்கக் குறைவால் ஏற்படும் தீமைகள் தெரிந்தவர்கள் ஒழுக்கம் தவற மாட்டார்கள்.

இவைகள் திருவள்ளுவரால் சொல்லப்பட்ட நியதிகள்.

ஒழுக்கமற்ற வாழ்க்கையை மேற்கொண்டவர்கள் இக்காலத்தில் சரியான தன்டனையை அனுபவிக்கின்றனர்

சட்டம் அவர்களைத் தண்டிக்கவில்லை. இயற்கையே அத்தகையோருக்கு தன்டனை வழங்குகிறது.

'எய்ட்ஸ்' ஆம்! இதுவே ஒழுக்க மற்றவர்களுக்கு வரும் உயிர் கொல்லி நோயாகும்.

போதை ஊசி உபயோகிப்பவர்கள், பால்வினை நோய் உள்ளவர்கள் எச்.ஐ.வி.யைப் பெற அதிக வாய்ப்புள்ளவர்கள்.

எய்ட்ஸ வந்தவுடன் இறந்து விடுகின்றனர் என்ற நிலை மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. எச்.ஐ.வி. தொற்றிய பிறகு பத்து, பன்னிரெண்டு வருடங்கள் வாழ்ந்து வருபவர்கள் இருக்கிறார்கள்.

பதினைந்து ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பின் இரண்டு புதிய எய்ட்ஸ மருந்துகளுக்கு ' ஐரோப்பிய ஆணையம்' விற்பனை அனுமதி வழங்கி இருக்கிறது. மெர்க் & கோ நிறுவனத்தின் 'க்ரிக்ஸிவான்' மற்றும் ரோஷ் ஹோல்டிங் ஏ.ஜி. நிறுவனத்தின் 'இன்விரேஸ்' ஆகியவை தான் அந்த இரண்டு புதிய மருந்துகள்.

இவை இரண்டும் எய்ட்ஸை எதிர்க்கப் புதிய வாய்ப்பினை அளித்துள்ளன என்கிறார் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஆணையத்தின் பிரதிநிதியான ஜோச்சென் குபோஷ்.

ஏற்கனவே அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டுள்ள இந்த மருந்துகள் ' ப்ரோடிய ஸ் இன்ஹிபிட்டர்' என்ற புதுரகத்தைச் சேர்ந்தவை. இவற்றை நியூக்ளியோசைட் ரிவர்ஸ் ட்ரான்ஸ்க்ரிப்டேஸ் இன்ஹிபிட்டர்ஸ் (NUCLEOSIDE REVERSE TRANSCRIPTASE INHIBITORS) என்ற ரக மருந்துகளுடன் சேர்ந்து உட்கொள்வார்கள்.

1997 ஆம் வருடம் மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரையிலான காலத்தில் 29,71,825 சாம்பிள்கள் பரிசோதிக்கப்பட்டன. அவைகளில் உறுதி செய்யப்பட்ட பாஸிட்டிவ் சாம்பிள்கள் 52,802; எய்ட்ஸ் நபர்கள் 3,386 என்று கண்டறியப்பட்டுள்ளன. ஹெச்.ஐ.வி.பாஸிட்டிவ் விகிதம் ஆயிரத்துக்கு 17.8 சதவீதம். தேசீய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பினால் (NACO) சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்கள் தான் இவை. இவைகள் இந்திய நிலவரம் மட்டுமே.

'எய்ட்ஸ்'ஐப் பற்றி இவ்வளவு தெரிந்தாலும் நம்மில் பலர் சபலங்களுக்கு ஆட்படுகின்றனர்.

பிறன் மனைவியை விரும்பும் மடத்தனம் தேர்ந்த அறிவுள்ளவர்களிடம் இருக்காது என்பதை ' பிறன் பொருளால் பொட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம் பொருள் கண்டார் கண் இல்' என்ற குறள் மூலம் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் இதை மனதில் எண்ணி பிற பெண்களை அனுபவிப்பவர் சமூகத்துக்கும் , சமுதாயத்துக்கும் பெரும் தீங்கு இழைப்பவரே ஆவர்.

பிற பெண்களை நாடாதவன் நல்ல இல்வாழ்க்கை வாழ்பவனாகிறான்.

கம்பராமாயணம் படித்தவர்கள், கேட்டவர்கள் நிறைய உண்டு.

தசரதனுக்கு அறுபதினாயிரம் மனைவிகள். அவர் மகன் ராமனுக்கு ஒருத்தி தான் மனைவியானாள்.

கற்பனை செய்யும் போது தத்துவங்கள் பல புரியும்.

ஒருவனுக்கு ஒருத்தி என்பதையே இதிகாசங்களும், இலக்கியங்களும் போதிக்கின்றன. இவைகளை என்ணிப் பாராமல் பெண்களை சில நிமிட மகிழ்ச்சிக்காக உடலுறவு கொள்வது வெறுக்கத்தக்கது.

அவர்கள் எச்.ஐ.வி கிருமிகளைச் சுமந்து கொண்டு வந்து வீட்டில் மனைவிக்குத் தானமாக, சீதனமாகத் தருகின்றனர். அவர்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கும் இந்த உயிர்க் கொல்லி நோய் வருகிறது.

குடும்பமே அழியும் நிலை நேருகிறது. முன்பு கூறப்பட்டுள்ள மாத்திரைகள் மேலை நாடுகளிலிருந்து பெறுவதற்கு எவ்வளவு பணம் வேண்டும் ?

இவைகள் யோசிப்பவர்கள் ஒழுக்கம் தவற மாட்டார்கள்.

ஒழுக்க சீலர்களாக வாழ வேண்டும். நமது குடும்பம் தளைத்து வாழையடி வாழையாகப் பெருக வேண்டும் என்றால், பிற பெண்களின் சவகாசங்கள் தேவை இல்லை.

ஒழுக்கமான வாழ்க்கையைக் கொண்டிருப்பவர்கள் உயர்ந்தோர்கள்.


குரு ராதாகிருஷ்ணன்

Monday, 10 September 2012

மனைவியைப் போற்றுங்கள்



காதலித்து மணம் முடித்தவர்கள், பெரியவர்கள் ஏற்பாடு செய்த மணத்தின் மூலம் இணைந்தவர்கள், மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்குத் தான் இந்த ஆலோசனைகள்.

வாரிசுகளை உருவாக்கித் தருபவர்கள் அவர்கள். கணவனின் சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொண்டு, கட்டளைகளை சிரமேற்கொண்டு இல்லத்தை பரிபாலனம் செய்பவர்கள்.

வேலைக்குப் போகும் மனைவியும் சரி; இல்லத்தரசியாக பரிணமிக்கும் மனைவியும் சரி; இருவரும் குடும்ப பாரத்தைச் சமமாக உடனிருந்தே சுமந்து வருகின்றனர்.

மனைவியின் சமையல், அலங்காரம், வீட்டுப் பராமரிப்பு இவைகளைக் கண்டு களிக்கும் கணவர் பாராட்ட வேண்டும் என்று எண்ணுவது இயல்பு.

பாராட்டுங்கள். வாய்ப்புகள் கிடைக்கும்போது தாரளமாக. மனம் நிறைந்து பாராட்டுக்களை மனைவிக்கு தெரிவியுங்கள்.

மனைவி விரும்பும் காரியங்கள் அல்லது விருப்பங்களைப் பூர்த்தி செய்யுங்கள்.

கணவனின் குறிப்பறிந்து பேசுவதும், பரிவு காட்டுவதும் இயல்பாகவே அமைந்துவிடும், சில மனைவிகளுக்கு.

வேறு சூழல், பழக்க வழக்கங்களைக் கொண்டவர்களுக்கு கணவர் வீட்டில், அந்த சூழலில் தன்னை ஆட்படுத்த சில காலங்கள் ஆகலாம்.

அவ்வாறான இடைவெளியில் எரிந்து விழாதீர்கள் . நமக்காக எதுவும் செய்கின்ற வேலைக்காரியாக மனைவியை எண்ணாதீர்கள்.

தனிக்குடித்தனமாக இருந்தாலும், கூட்டுக் குடும்பங்களில் வாழ்ந்தாலும் மனைவியானவள் அனுசரித்து நடந்து கொள்வார். இதை மனதில் எண்ணிக் கொள்வது முக்கியம்.

குடும்ப நபர்களின் குதர்க்கப் பேச்சுகள், ஏகடியங்களைத் தாங்கிக் கொண்டு, கணவனிடம் புறங்கூறாது வாழும் மனைவியரை இன்றும் கூட்டுக் குடும்பங்களில் காண முடியும்.

பெண்களுக்கு உரிமை தரப்பட வேண்டும். அவர்களைச் சமமாகப் பாவிக்க வேண்டும் என்ற பேச்சு வேண்டாம். செயலில் காண்வியுங்கள்.

பெண்களைத் தாயாகப் போற்றிய ராமகிருஷ்ணர், விவேகானந்தரின் எண்ணங்களைச் சிந்தித்துப் பாருங்கள்.

பெண்ணுக்குப் பெருமை சேர்க்கும் கலாச்சாரம் நம்முடையது என்று நிமிர்ந்து நில்லுங்கள்.
செய்யும் பண்டங்களில் சில குறைபாடுகள் இருப்பின் வசை பாடாதீர்கள்.

குழந்தைகளுக்கு அப்பாவை அடையாளம் காட்டுபவள் மனைவி. ஒவ்வொரு சாதனையாளருக்குப் பின் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வார்கள். நம் வாழ்வின் இறுதி வரை நம்முடன் வரும் மனைவியைத் தான் அது குறிக்கிறது. அன்பும், பரிவும் காட்டுங்கள். பாராட்டுங்கள் உங்கள் மனைவியை. வாழ்வில் நிச்சயம் உயருவீர்கள்.


குரு ராதாகிருஷ்ணன்


Monday, 3 September 2012

வாயால் பந்தல் போடுபவர்கள்


'எம்.டி.வேதாசலம் எனக்கு மிகவும் வேண்டியவர். உங்களுக்கு ஏதாவது காரியம் அவரிடம் நடக்கும் நிலை ஏற்பட்டால், என்னிடம் சொல்லுங்கள். செய்து தருகிறேன்' என்பார் ஒருவரிடம்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தானே ! எனக்கு வேண்டியவர் என்ன ... சொந்தக்காரர் என்று சொல்லும்படியாக காரியங்களை நடத்தி முடிக்கிறேன், என்பார் மற்றொருவரிடம்.

இவர் சாதாரணமாக எதையுமே சொல்ல விரும்புவதில்லை. எல்லாமே தெரிந்தவர் என்று மற்றவர்கள் தன்னை எண்ண வேண்டும் என்ற குறிக்கோளை உடையவர்.

இவரது சவடால் பேச்சுகள் எடுபடாது போகும். கேட்டுக் கேட்டு எல்லாமே வெத்து வேட்டுகளே என்று நினைத்து பலர் இவரிடம் பேசவே அஞ்சுவர்.

இவர்களைப் போன்றவர்கள் உண்மை பேசினாலும் மற்றவர்களிடம் பொய்யானதாகவே காட்சி தரும். ஏற்கனவே முத்திரைக் குத்தப்பட்ட மிகைப்பேச்சுகளில் இதுவும் என எண்ணி விடுவதை தவிர்க்க முடியாது.

இன்னொரு வகையினரும் உண்டு. மற்றவர்களின் குறைகளை குறிவைத்து 'இட்டுக்கட்டி' மிகையாகப் பேசுவார்கள்.

எல்லோரையும் தரிந்து வைப்பது போல் பேசி மயக்குவான். ஆனால் ஒருவரையும் தெரியாது. அவனால் எந்தக் காரியமும் நடக்காது.வெட்டிப் பேச்சு பேசுகிறவன் என்று மற்றவரைப் பேசும் இயல்பினர்.

அவன் மனைவியின் நடத்தை சரியில்லை. மகனோ பெண்களின் பின்னால் சுற்றுபவன். இவனுக்கு என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது. பொரிக்கிப்பயல் இப்படியும் பேசுவார்.
நீங்க அடிக்கடி பேசுபவரின் நடத்தை சரியில்லை. அவரை நம்பிக் கொண்டு பணம் தந்து விடாதீர்கள். கொடுத்தால் ' அம்போ' தான் . உங்களைத் திரும்பிக் கூட பார்க்க மாட்டான். அப்புறம் கோர்ட்; கச்சேரி என்று அலைய வேண்டும்.

இருவகையினரும் சமுதாயத்தில் ஒதுக்கித் தள்ளப்பட வேண்டியவர்கள் தான்.

மிகைப் பேச்சுக்களும், மற்றவர்களின் குறைகளையே சுட்டுகிறவர்கள் மனம் பேதலித்தவர்களே.

இறுதிவரை தங்கள் உடன்பிறந்த குணங்களை மாற்றிக் கொள்ளாத நிலையில் மன நோயாளிகளாக மாறிவிடுவது நிச்சயம்.

இருபிரிவினரும் வாயால் பந்தல் போடும் நபர்களே. இவர்களால் யாருக்குமே பயன்கள் விளையாது போகும்.


குரு ராதாகிருஷ்ணன்

Thursday, 23 August 2012

மனநிறைவு தேவை


'செய்யும் தொழிலே தெய்வம். அதில் திறமை தான் நமது செல்வம்'. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் இந்தப் பாடல் வரிகள் எல்லாக் காலத்திலும் நினைவில் கொள்ளத்தக்கவை.

திறமைக்கேற்ற பதவி அநேகருக்குக் கிடைப்பது இல்லை.

திறமைகள் எல்லோரிடமும் இருக்கின்றன. வெளிப்படுத்துவதில் தான் வேறுபாடுகள் இருக்கின்றன.

தனியார் நிறுவனங்களிலும், அரசுப் பணிகளிலும் பணியாற்றுபவர்கள், தங்கள் பணிகளைச் செம்மையாகச் செய்தல் வேண்டும்.

அதைவிட்டு நம் திறமை என்ன ? பாழாய்ப் போன இந்த வேலையில் வந்து மாட்டிக் கொண்டேனே ! என்று மனம் புழுங்குகிறவர்கள் தான் நிறைய இருக்கின்றனர்.

வேலை கிடைக்கும் முன் அவர் பட்டபாட்டை விரைவில் மறந்து போவார்.

வருகின்ற பேரூந்தில் நிற்பதற்கு இடம் கிடைத்தால் போதும். கிடைக்குமா ? இது ஆரம்ப நினைப்பு.

நிற்க இடம் கிடைத்து விட்டது. உட்கார் இடம் கிடைக்காதா? என அலைபாயும் மனதின் இடை நினைப்பு.

உட்காரவும் இடம் கிடைத்துவிட்டது. சன்னல் அருகில் காற்றாட உட்கார்ந்தால் நல்லது என நினைக்கும் இறுதி நினைப்பு.

அத்தோடு நின்று விடாது. தொடரும் நினைப்புகள், இதற்கு விடிவே இல்லை.
எந்தப் பணி என்றாலும் மன நிறைவோடும் ஈடுபாடுடன் செய்து பழகுங்கள்.

எந்த நிலையிலும் தான் பார்க்கும் பணி மோசமானது என்ற தவறான எண்ணத்தை விலக்குங்கள்.

வேலை தேடித் தரும் அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காகக் காத்திருப்பவர்கலை எண்ணிப் பாருங்கள்.

உடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் அன்போடு பழகுங்கள். உங்களின் பணியை முடித்து விட்டு மற்றவர்களுக்கு உதவுங்கள்.

மற்றவர்கள் மீது கரிசனம் காட்டும் போது அவர்களின் அன்பு கேட்காமலேயே நமக்குக் கிடைத்து விடும்.

பணியில் ஈடுபாடு அதிகமானால் திறமை வெளிப்படும். இனங்கண்டு மற்றவர்களால் நம் திறமை பாராட்டுக்கு உட்படும் போது மகிழ்ச்சி கரை புரண்டு ஒடும்.

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற முதுமொழியை எண்ணிப் பார்ப்போம்.


குரு ராதாகிருஷ்ணன்

Wednesday, 15 August 2012

சரி செய்து கொள்ளுங்கள்


அறிகுறிகளை அறிவித்துக் கொண்டு தான் நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. கூர்மதியினால் அவைகளைத் தெரிந்து கொண்டவர்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்று முன்பே அறியும் ஆற்றல் ஏற்படும்.

சிலர் எல்லாமே நம் வினைப்படிதான் நடக்கும். தடுக்க யாராலும் முடியாது. நம் விதியின் பயனே என்றவாறே இருந்து விடுவர்.

இவர்களை 'சோற்றால் அடித்த பிண்டம்' என்று தான் அழைக்க வேண்டும். இவரைப் போன்றவர்கள் வீட்டுக்கும், நாட்டுக்கும் உதவ இயலாதவர்கள் என்று ஒதுக்கி விடுவர்.

ஒரு செயல் நல்லதோ, கெட்டதோ, பயன்பாட்டின் போது நல்லவைகளுக்கு அறுகுறிகளிலும் கெட்டவைகளுக்கு தடயங்களும் கிடைப்பது தான் நியதி.

நற்செயல்களின் கர்த்தாக்களுக்கு அறிகுறிகளின் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

கொடுஞ்செயல் புரிபவர்களை கைது செய்ய தடயங்கள் உதவியதாகக் காவல்துறையினர் வாக்குமூலங்களின் வாயிலாகத் தெரிய வருகின்றன.

இப்படி நடக்குமென்று எதிர்பார்க்கவில்லை. அறிந்தால் வேறு விதமாகச் செயல்பட்டு வெற்றி பெற்றிருக்கலாமே என எண்ணுவது சிலரின் வழக்கம்.

சுயசிந்தனை அற்றவர்கள் தான் இவ்வாறு நினைக்கின்றனர்.

தன் அறிவுக்கு வேலை தந்திருப்பார் எனில் இவ்வாறு எண்ணுவதை விலக்குவார்கள். நிகழ்வுகளும் வேறு விதமாக நடந்திருக்கும்.

இன்பமும் துன்பமும் கலந்தது தான் வாழ்வியல். இரண்டையும் ஏற்றுக் கொண்டு சரி செய்து கொண்டால் நாம் வளம் பெற முடியும்.
சுயசிந்தனை, அறிவாற்றல், ஈடுபாடு, தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள் வெற்றி நடை போடுவார்கள்.

நடப்பதை யார் தடுக்க இயலும். எல்லாமே விதிப்படி தான் நடக்கும் என்று வேதாந்தம் பேசி, நத்தைபோல் சுருங்கி முடங்கிப் போகிறவர்கள் தோல்விகளையே கேட்டுப் பெறுபவர்கள் ஆவர்.

வாழ்க்கையைச் சரி செய்து கொண்டு செல்ல முயலுங்கள்.


குரு ராதாகிருஷ்ணன்

Monday, 6 August 2012

பரிகாரங்கள் தேவை


கிராமங்களில் இனப்பகை, குடும்பப் பகை இன்றும் இருக்கின்றன. பகை முற்றிக் கலவரங்கள் ஏற்பட்டு வருகின்றன. பொதுச் சொத்துக்கள் ஏராளமாக நட்டமாக்கப்படுகின்றன.

இவைகள் வேறு உருவங்களில் நகரங்களை நோக்கி வந்துவிட்டன.

அரசியல் பகை, அலுவலகப் பகை, பணம் ஈட்டுவதில் பகை என பல வழிகளில் உருவாக்கப்பட்டுவிட்டன.

அவசரகதியின் காரணமாக இவைகளில் தங்களை நுழைத்துக் கொண்டு அவதிப்படுபவர்கள் நிறைய உண்டு.

பிறர்மீது ஆத்திரப்பட்டுப் பகை தேடிக் கொண்டவர் இறுதியில் தோல்வியே கண்டடைவர்.

மேலே கூறப்பட்ட பகைகள் சாசுவதமானவைகள் என்று நினைக்காதீர்கள்.

கால மாற்றத்தினால் அவைகள் காணாது போய்விடும்.

அரசியலில் கட்சிகளுக்கிடையே வளரும் பகை தொண்டர்களைப் பலி வாங்கும். அபூர்வமாகக் கட்சித் தலைவர் மரணமடைவதுண்டு, சில சமயங்களில்.

நிரந்தர கட்சி அரசியலில் இன்றைக்குத் தேவைப்படாமல் போனது எல்லோரும் அறிந்த உண்மை.

ஆளுங்கட்சி செல்வாக்கு, அடுத்த கட்சி ஆட்சிக்கு வரும்போது அடிபட்டுப் போகும்.
அலுவலகப் பதவியால் நற்பெயரும், செல்வாக்கும் பெறுபவர்கள் மீது உடன் பணியாற்றுபவர்கள் சிலர் பகைமை பாராட்டுவது உண்டு. இதனால் அலுவலகப் பணிகளில் சங்கடங்கள் ஏற்படும். பாதிக்கப்படுவது மக்களே என்பதை உணர மாட்டார்கள்.

மாறுதலில் அத்தகையோர் சென்று விட்டால் அலுவலகப் பகை மறந்து போகும்.

சொல்திறன், சந்தை விற்பனையில் கவனம்; தடங்கல்களிலிருந்து சமாளித்தல், வாடிக்கைகாரர்களிடம் பழகும் பண்பு இவைகளே ஒருவரின் பொருள் ஈட்டலில் முக்கியமானதாகும்.

இவைகளை அறிந்து கொள்ளாமல் வியாபாரத்தில் பகையை வளர்ப்பதுண்டு.

இவர்களுக்குப் பணம் சேர்க்க இயலாது. திறமைகள் ஒவ்வொருவரிடமும் பல்வேறு வகைகளில் குடி கொண்டிருக்கும்.

அவனுக்கு நான் இளைத்தவனா என்ற மனப்பான்மை நீண்ட நாள் இருக்காது.

பணம் காற்றில் பறக்கும் தூசியைப் போன்றது. காற்று பலமாகச் சுழன்றடிக்கும் போது உயரமான இடங்களில் போய் அமரும். அடுத்து அடிக்கும் காற்று அதைக் குப்பை மேட்டில் சேர்த்து விடும்.

தத்துவமல்ல நிதர்சனம்.

பகைகளைக் களைய காலத்தின் கையில் ஒப்படைத்து விடுவது தான் சாலச் சிறந்தது.

அதுவே சரியான பரிகாரமாகும்.


குரு ராதாகிருஷ்ணன்

Monday, 30 July 2012

தவறு செய்யாது இருக்க



குழந்தைகள் பிறக்கும் போது நல்லவர்களாகத் தான் இருக்கின்றனர்.

அவர்களின் வளர்ப்பின் ஊடாகத் தான் நல்லவர் தீயவர் ஆக்கப்படுகின்றனர்.

அனைத்து பெற்றோர்களும் பிள்ளைகளை ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக வளர்ப்பதில் அக்கறை மிக்கவர்கள் தான்.

பின்னாளில் பிள்ளைகள் வளர்ந்ததும், தடம் மாறிப் போவது சாதாரண விஷயமாகிப் போனது.

மேலைநாட்டு நாகரீக மோகம், மாஸ்மீடியா எனப்படும் டெலிவிஷன், வீடியோ காசட்டுகள் தான் அவைகளுக்குக் காரணமாகிவிட்டன.

தடம் மாறும் இளைஞர்கள், பெண் பிள்ளைகளும் தான் கவனிக்க வேண்டியது ஒன்று உண்டு.

நமது நடவடிக்கைகள் யாரோ ஒருவரால் கவனிக்கப்பட்டு விடும். செய்தி தங்கள் பெற்றோரிடம் போய்ச் சேர்ந்து விடும் என்ற எண்ணம் மனதில் எழ வேண்டும், எப்போதும்.

உணர்வுபூர்வமாக எண்ண வேண்டும். அதுவே குற்றங்களைச் செய்வதை தடுத்துவிடும்.

போதைப் பொருளுக்கு அடிமையாகும் கல்லூரி மாணவ மானவிகளின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே போகின்றன.

அப்பா பிள்ளையை சபையில் முன் வைத்து உதவ வேண்டும்.

தன்பிள்ளை கலெக்டர், டாக்டர், இன்ஜினியர், சாஃப்ட்வேர் இன்ஜினியர் என உருவாகப் போகிறான். தரம் மிகுந்த எதிர்பார்புகளே இவைகள்.

மகன் அறிஞன் என்பதைக் கேட்ட தாய் அவனைப் பெற்றெடுத்த காலத்தை விட அதிக சந்தோஷப்படுவாள் என்ற குறளுக்குப் பெருமை சேர்க்கும் பிள்ளைகள் இருந்தால் அதன் மகிழ்ச்சிக்கு எல்லை உண்டா ! எதிர்பார்ப்புகளும் தோற்றுப் போவதில்லை.

போதைப் பொருளின் மீதான் விழிப்புணர்வைப் பெறுங்கள். நாளைய உலகம் நன்றியுடன் உங்களை கரம் கூப்பி வரவேற்கும். சமூக விரோதிகளை விட்டு விலகுங்கள்.

பெரியவர்களை எண்ணிக் கொண்டாலே போதும் இளைய தலைமுறையினர் குற்றம் செய்ய மாட்டார்கள்.

சிறைக் கைதிகளிடம் உரையாடியவர்கள் தெரிவிக்கும் முடிவுகளைப் பார்ப்போம். பெரும்பாலான கொலைகள் உணர்ச்சிக் கொந்தளிப்பினால் நிகழ்ந்தவைகள்.

‘தலைல, லேசா தான் தட்டினேன். பொட்டுன்னு போய்ட்டா’ என்று மனைவியின் சாவை நியாயப்படுத்தும் கணவன் சிறையில் தனிமையில் சிந்திக்கிறான். தெளிவு பிறக்கிறது.

குடும்பம்,குழந்தைகள் சிதைந்து போனதை எண்ணி வாடுகிறான். குற்றம் செய்வதற்கு முன் யோசித்து இருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்குமோ ?

தவறுகள் நிகழாதிருக்க நல்ல வழிகளைச் சிந்தித்து எல்லோரும் கடைப்பிடிப்போம்.


குரு ராதாகிருஷ்ணன்