Friday, 27 July 2012

உண்மை தான் ...

( 27-07-2012 தினமணி நாளிதழில் வெளியான  கடிதம் )

'வரலாற்று  இரவு' கட்டுரை படித்தேன் . தடயங்களும் , ஆவணங்களும் இருந்தும் கூட நூறு  அல்லது இருநூறு ஆண்டுகளுக்கு முன் சில இடங்களில் நடந்த சம்பவங்களைச்  சரியான முறையில் பதிவு செய்யாத,  செய்ய விரும்பாதவர்கள் செய்த வரலாற்றுப் பிழைகள் இருப்பது உண்மை தான்.






இதெல்லாம்  சரிசெய்யும் அளவில் ஈரோடு  ' மக்கள் சிந்தனை பேரவை'யின் தலைவர் எழுத்தாளர் ஸ்டாலின்  குணசேகரன்  தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டின்  பட்டிதொட்டிகளிலுள்ள பாரத விடுதலைப் போர் தியாகிகளின் வரலாற்றை அரும்பாடுபட்டுத் திரட்டி , ' சுதந்திரப் போர் ' எனும் பெரிய நூலை எழுதியுள்ளார் . இதற்கான தரவுகளை, ஆவணங்களை , நிழற்படங்களைச்   சேகரிக்க அவர் பட்டபாடுகள்  அதிகம்.இந்நூலை  கட்டுரையாளர் வாசித்திருப்பின் அவரது நிலை வேறாகியிருக்கும் .



குரு ராதாகிருஷ்ணன் 

நன்றி : தினமணி நாளிதழ்  27-07-2012

Friday, 20 July 2012

தாழ்ச்சி, உயர்ச்சி பார்க்க வேண்டாம்



மகாகவி பாரதியார் பாப்பாக்களுக்குப் பாடியுள்ளார். உதாரணத்துக்கு –


சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் !
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்


பாப்பாக்களுக்கானது என எண்ணாதீர்கள். பெரியவர்களும் இப்பாடலை படித்துப் பயன் பெறுதல் அவசியம்.


சாதிகள் வருணாசிரம் தர்மத்தை வைத்து உண்டானது என்பர் சான்றோர்கள்.


சமுதாயத்தின் மொத்தத் தேவையே நான்கு வகைத் தொழில்களுக்குள் அடங்கி விட்டன.


நாட்டில் ஒழுக்கத்தையும், தர்மத்தையும், கட்டுப்பாட்டையும் கல்வியையும் வளர்ப்பது ;


போர் புரிந்து நாட்டைப் பகைவர்களிடமிருந்து காப்பது ;


வாணிகம், தொழில் நடத்தி நாட்டின் பொருளாதாரத்தை வளர்ப்பது ;


உடல் உழைப்பை மேற்கொண்டு குடியிருப்புகள், சாலைகள், தொழிற்கூடங்கள், உலைக்கூடங்கள் முதலியவைகளை அமைத்து மேற்கூறிய மூன்று வகையினருக்கும் உதவுவது.


இவ்வாறு வரையறுக்கப்பட்ட நியதிகளைப் பிற்காலத்தவர்கள் வேறுவிதத்தில் நினைக்கத் தலைப்பட்டனர்.


இதனால் வலிந்து தேடிக் கொண்ட வினைகள் ஏராளம். அவைகளை ஆராயப் புகுவதை நிறுத்துவது எல்லோருக்கும் நல்லது.


சமயம்,சாதி,இனம்,குலம் என்று பாராது எல்லோரிடமும் அன்பாகப் பழகுங்கள்.

நமக்கென்று நல்லவர்கள் பலர் கூடுவர். ஆபத்து காலங்களில் உதவுபவர்களில் பலர் முன்பின் அறியாதவர்களாகத் தான் அப்போது தெரிவர். அத்தகையோரிடம் மனிதாபிமானம் நிறைந்திருக்கும்.

பிறர் வீட்டு விசேடங்களில் கலந்து கொள்பவர்கள் பத்தோடு, பதினொன்றவதாக இருக்க முயலாதீர்கள்.


திருமண வீட்டிற்குச் சென்றால், நம்மால் முடியும் சிறிய வேலைகளைச் செய்ய வேண்டும்.


துக்க காரியம் நடந்த வீட்டிலும் அப்படியே செய்யுங்கள்.


இரு வீட்டாரிடமும் உங்களின் மதிப்பு உயரும். நாம் கேட்டுக் கொள்ளாமலேயே இவர் நம்முடைய வேலைகளைச் செய்கிறாரே ! உண்மையிலேயே நல்ல மனிதர் தான் என்று எண்ணுவார்கள்.


நாம் பிறர் மீது காட்டும் அன்பு நம்மிடம் திரும்ப வரும் போது கிடைக்கும் இன்பத்துக்கு இணை ஏதுமில்லை. அன்பு எல்லோருக்கும் பொதுவானது . அதை செலவின்றி கொடுக்கவும் பெறவும் முடியும்.



குரு ராதாகிருஷ்ணன்


Sunday, 8 July 2012

காலத்தின் குரல் - தி.க.சி


தோழர் தி.க.சி சற்றொப்ப அறுபது ஆண்டுகளாகப் படைப்பாளி, பத்திரிக்கையாளர் (தாமரை ), திறனாய்வாளர், கட்டுரையாளர், கதாசிரியர் என பன்முகத் தன்மையுடன் 89 ஆண்டுகள் அகவையிலும் இயங்கி வருகிறார். மட்டுமல்ல இன்று வரை 'தினமணி' செய்தித்தாளில் வாசகர் கடிதங்களாகத் தன் எண்ணங்களை, கொள்கைகளையும் தவறாது பதிவு செய்தும் வருகிறார்.

1998 ஜுன் 24 ஆம் தேதி புதன்கிழமை காலையில் பெரியவர் வல்லிக்கண்ணனும் , நானும் செல்லப்பா அவர்களை சென்னையில் அவரது வீட்டில் சந்தித்து 11 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை, 2 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

அப்போது செல்லப்பா சொன்னார். 'வ.ரா'.வின் வாழ்க்கை வரலாற்றை சிட்டியும் , நானும் சேர்ந்து எழுதுவதாக இருந்தது. சிட்டி ஒரளவு எழுதினார். இப்போது உடல்நலக் குறைவால் தொடர்ந்து எழுத முடியவில்லையென்று என்னிடம் கொடுத்தார். ஆனால் என்னாலும் எழுத முடியவில்லை. பலமுறை ஆஸபத்திரிக்குப் போய் வந்துவிட்டேன். பல்லாயிரம் ரூபாய் கரைந்து விட்டது. இன்னும் அச்சேற வேண்டிய நூல்கள் பல உள்ளன ( பக்கம் 10-11 )

கடைசி காலத்தில் நன்கு உணர்ந்திருந்த செல்லப்பா ஒர் அற்புதமான - இதுவரை எந்தத் தமிழ் சிறுகதை எழுத்தாளரும் செய்யாத ஒர் அரிய இலக்கியப் பணியைச் செய்திருக்கிறார்.

'என் சிறுகதைப் பாணி' என்னும் நூலை விளக்கு வெளியீடாக 1995 செப்டம்பரில் நமக்கு வழங்கிவிட்டுச் சென்றிருக்கிறார். 288 பக்கங்கள் கொண்ட சி.சு.செல்லப்பாவின் 'சிறுகதைப் பாணி' என்னும் சிறந்த நூல், அவரது 108 கதைகளின் கதையாகும். அது மட்டுமன்றி அவரது சுயசரிதையின் முக்கிய பகுதியும் ஆகும் ( பக்கம் - 14 )




'மணிக்கொடி' சிறுகதை எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் தனித்தன்மை படைத்தவர்கள், தனி ஆற்றல் வாய்ந்தவர்கள், தரமான சிறுகதைகளை வழ்ங்கியவர்கள். மறுமலர்ச்சி இலக்கியத்திற்குத் தொண்டாற்றியவர்கள். அவர்களுக்கு உரிய மதிப்பை நடுநிலையில் நின்று மன்ப்பூர்வமாக நாம் அளிக்க வேண்டும். எனினும் மணிக்கொடி எழுத்தாளர்களில் சிகரத்தில் நிற்பவர் ( என் கருத்தில் ) புதுமைப்பித்தனே !

இதுவே 1957 ல் ' சரஸ்வதி'யில் நான் எழுதிய இரு கட்டுரைகளின் மையக்கருத்து . இக்கட்டுரைகள் செல்லப்பா, சிதம்பர சுப்ரமணியன், சிட்டி, பிச்சமூர்த்தி முதலிய மணிக்கொடி எழுத்தாளர்களால் வரவேற்கப்பட்டன. ஆனால் ஆர்.கே.கண்ணன் போன்ற என் மதிப்பிற்குரிய தோழர்களுக்கு எரிச்சலையூட்டின என்பதும் உண்மை ( பக்கம் - 15 )

17-04-1912 கேரளத்தின் நெற்களஞ்சியமான ஆலப்புழை மாவட்டத்திலுள்ள குட்டநாட்டின் தகழி கிராமத்தில் பிறந்த சிவசங்கர பிள்ளை, 1999 ஏப்ரல் 10 ல், தமது 87 ஆம் ஆண்டு நிறைவுக்கு சில நாட்களுக்கு முன்பு தமது கிராமத்தில் மறைந்தார். இந்திய இலக்கிய வானின் ஒரு விண்மீன் விழ்ந்தது.

தமது 60 ஆண்டுக்கு மேற்பட்ட எழுத்து வாழ்க்கையில் 39 நாவல்கள், 10 குறுநாவல்கள், 21 சிறுகதைத் தொகுப்புகள் ஆக மொத்தம் 77 படைப்புகளை வழங்கியுள்ளார் தகழி. சுந்தர ராமசாமி, நீல.பத்மநாபன், ஆ.மாதவன் ஆகியோர் தகழியுடன் நெருங்கிப் பழகிப் பேறு பெற்றவர்கள் என்பதும், ஒர் அண்ணனைப் போல, இவர்களுடன் தகழி அன்புடன் பழகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது ( பக்கம் 22 - 23 )

1965-72 ஆம் ஆண்டுகளின் போது 'தாமரை' இதழின் பொறுப்பாசிரியனாக நான் இருந்த வேளை, சர்மாவின் புகைப்படத்தை அட்டையிலும், உள்ளே பாராட்டுகளையும் வெளியிட்டுத் தோழர் ஜீவாவின் 'தாமரை' வெ.சாமிநாதசர்மாவை கெளரவித்தது என்பதும் 1965 ல் தோன்றிய ' தீபம்' இதழும், அதன் ஆசிரியர் நா.பா. அவர்களும் , சர்மா அவர்களைத் தமது துருவ நட்சத்திரமாகக் கொண்டு இயங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது ( பக்கம் 30 )

கோவையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வெள்ளி விழா மாநாட்டில் பங்கேற்ற ( மே14,15,16 ) வல்லிக்கண்ணன், தொ.மு.சி.ரகுநாதன், கு.சின்னப்பபாரதி, டி.செல்வராஜ்,சு.சமுத்திரம், கலை, இலக்கிய பெருமன்றத் தோழர் பழனிசாமி ஆகியோருடன் நானும் சேர்ந்து மே 16 காலையில் சின்னப்பபாரதியின் வேனில் பொள்ளாச்சி புறப்பட்டு 10.30 மணியளவில் கே.சி.எஸ். இல்லம் அடைந்தோம்.

அந்த ஞாயிறு காலைப்பொழுதில் தூய உடையுடன், தாடி மீசையுடன் படுக்கையில் இருந்த கவிஞர் கே.சி.எஸ் - க் கண்டதும், துயரத்தால் சில நிமிடங்கள் உறைந்து போனோம் (பக்கம்32)

1965 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் 'தீபம்' மாத இதழின் சார்பாகப் பேராசிரியர் டி.எ ஸ்.சொக்கலிங்கத்தை நான் பேட்டி கண்டேன். அடுத்தடுத்து இரு நாட்கள் சுமார் 5 மணி நேரம் அவருடன் உரையாடினேன். அப்போது 'தீபம்' ஆசிரியர் நா.பா.வும் உடன் இருந்தார்.

'காந்தி', 'தினமணி','தினசரி' ஆகிய ஏடுகளின் ஆசிரியர் தென்காசி ச.சொக்கலிங்கத்தின் தோற்றம் 3.5.1899, மறைவு 9.1.1966. அவரது ஆயுட்காலம் 67 ஆண்டுகள். தீபத்திற்காக நான் பேட்டி கண்ட சில வாரங்களுக்குள் ( பேட்டி அச்சேறு முன்னர் ) டி.எஸ்.சொக்கலிங்கம் மறைந்து விட்டார் என்பது, எனக்கும் , நா.பா.வுக்கும் மிகவும் துயர் அளித்த நிகழ்ச்சியாகும்       ( பக்கம் 38-39 )

தொ.மு.சி.ரகுநாதன், வல்லிக்கண்ணன், அகிலன், மு.வரதராசன், இலங்கை எழுத்தாளர் செ.கணேசலிங்கன், சி.என்.அண்ணாதுரை, மு.கருணாநிதி மற்றும் பல படைப்பாளிகளைக் காண்டேகரின் படைப்பாற்றலும் , கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் தமிழாக்கமும் ஒரு கால கட்டத்தில் ஈர்த்தன என்பதற்குச் சான்றுகள் உள்ளன. இதற்குக் காரணம் என்ன ?

“சமூக அமைப்பு முறையிலே மிகப்பெரிய புரட்சிகரமான மாறுதல் வேண்டும் என்பதற்கான போர் முரசு காண்டேகரின் கதைகள்-இது அறிஞர் அண்ணாவின் மதிப்பீடு.

“கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் மொழிபயர்ப்புகளால் எனக்குத் தற்கால இலக்கியத்தில் ஆர்வம் ஏற்பட்டது - இது கலைஞர் கருணாநிதியின் வாக்குமூலம். காண்டேகரின் நூல்களை மராத்தியிலிருந்து மொழிபெயர்த்தத்துடன், கா.ஸ்ரீ.ஸ்ரீ நின்றுவிடவில்லை.

காண்டேகர் பிராமண வகுப்பைச் சேர்ந்த போதும் சாதி, மதப்பிரிவுகளை எதிர்த்தார். அவரது மூன்றாவது பெண் சாதி விட்டுக் காதலித்தார்.திருமணத்திற்குக் குடும்பத்தில் எதிர்ப்பு வந்தது. 'இத்திருமணத்தை ஏற்றுக் கொள்பவர் மட்டும் வரட்டும். மற்றவர் பற்றிக் கவலையில்லை' என்றார் காண்டேகர். எழுத்தில் மட்டுமன்றித் தமது சொந்த வாழ்விலும் சமூகப் புரட்சியாளராகத் திகழ்ந்தவர் காண்டேகர். எனவே தான் இத்தகைய காண்டேகரைத் தமிழ் வாசகர்களுக்குத் துணிவுடன் அறிமுகம் செய்த கா.ஸ்ரீ.ஸ்ரீ யைத் தமிழ்ச் சமுதாயம் போற்றுகிறது. அவரது நினைவுக்குத் தலைதாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது ( பக்கம் 45 )

கடந்த பத்தாண்டுகளில் இத்தகைய வரவேற்கத்தக்க ஆரோக்கியமான இதழ்களைப் பற்றி எண்ணும் போது கோமல் சுவாமிநாதனின் ' சுபமங்களா'வின் அற்புதமான இலக்கியப் பணியை என்னால் என்றுமே மறக்க இயலாது . 'சிற்றேடுகளுக்கும்', 'பொழுதுபோக்கு ஏடு'களுக்கும் இடையேயான நடுவாந்திர ஏடு 'சுபமங்களா'. தரமான புதுமையான தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், கருத்துப் பரிமாற்றங்களுக்கும் மட்டுமன்றி, நாடகம், திரைப்படம் முதலிய கலைகளின் முன்னேற்றத்திற்கும், ஆக்கபூர்வமாகப் பணியாற்றிய அருமையான இலக்கிய இதழ் 'சுபமங்களா'. கோமலின் மறைவுடன் அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது. இது தமிழ் கலை இலக்கியத்துறைக்கு ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும்.

கோமல் ஒரு மக்கள் கலைஞர், மக்கள் எழுத்தாளர், உலகக் கலை இலக்கியச் சிகரங்களைத் தமிழின் எட்டிப் பிடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் பணியாற்றிய சீரிய படைப்பாளி + பத்திரிக்கை ஆசிரியர். அவர் சென்ற அளவுக்கு இன்றைய ஜனரஞ்சகப் பத்திரிக்கை ஆசிரியர்கள் செய்வார்களா என்பது சந்தேகம் ! ( பக்கம் 62 )

இதுவரை முந்தைய பத்திகளில் நீங்கள் படித்தவை ' காலத்தின் குரல் - தி.க.சி' நூலில் தரப்பட்டுள்ள கருத்துரைகளில் சிலது தான். ஆனால் நிறைய தரவுகள், தகவல்கள் நிறைந்த பலவற்றை இலக்கிய ஆர்வலர்கள் அவசியம் படிப்பது நன்மை பயக்கும்.

இந்நூலின் தொகுப்பாசிரியர் வே.முத்துக்குமார். தொகுப்பிற்கான கட்டுரைகளை சேகரிக்க அவரின் அனுபவத்தை முன்னுரையாகத் தந்துள்ளார். இவரது ' ஆவாரம்பூ' பதிப்பகத்தின் முதல் வெளியீடு என அறிந்தேன். எந்த வயதினரும் படிக்கக்கூடிய எழுத்துருக்கள், உயர்ரக தாள், வடிவமைப்பு, அச்சாக்கம், குறிப்பாக பிழைகள் காணாத 'மெய்பு' திருத்தம் என அருமையான நூலாக வெளியிட்டுள்ளார்.

மூத்தோர் சொற்கள் முந்திய வரலாற்றில் பயணிக்கும் வாய்ப்பை உண்டாக்கித் தருகிறது. மூத்தோர் சொல் வழியே போய், அவர் காட்டும் நூல்களை, வரலாறுகளைக் கற்பதும், இத்தேடல்கள் மூலம் நம்மை உருவாக்கிக் கொள்வதும் ஒரு தொடர் ஒட்டமாகும். ஒரு ஒட்டமல்ல. ஒரு ஒட்டத்திலிருந்து மற்றொரு ஒட்டம். ஒரு தகவலிலிருந்து மற்றொரு தகவல் - ஒன்றிலிருந்து மற்றொரு தேடல் என வாசிப்பவரை உயர்த்திக் கொண்டே போகிறது, தி.க.சி.யின் இந்தக் காலத்தின் குரல் “ என எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் தனது அணிந்துரையில் கூறியுள்ளார்.

இவையனைத்தும் உண்மை என்பதை இந்நூலைப் படிக்கும் வாசகர்கள் அனைவரும் தப்பாது உய்த்து உணர முடியும்.


குரு ராதாகிருஷ்ணன் 

நன்றி : கணையாழி ஜூலை 2012

Tuesday, 26 June 2012

பிறரைக் கணிப்பது எப்படி


உலகில் சீனர்கள் தற்சார்பு கொண்டவர்கள். ஜப்பானியர்கள் தேசப்பற்று மிக்கவர்கள். தொழிலில் சுறுசுறுப்பும், கவனமும் உடையவர்கள் தென் கொரியர்கள். போட்டி மனப்பான்மையை வளர்ப்பவர்கள் அமெரிக்கர்கள். ஒழுக்கத்தையும், நேரந்தவறாமையையும் ஆங்கிலேயர்களிடம் காணலாம்.
பணிவும், உண்மையாக நடந்து கொள்ளும் மனப்பாங்கினைப் பெற்றவர்கள் இந்தியர்கள்.

மேலை நாட்டில் தனியார் நிறுவனங்களின் கணிப்புகளின் மூலம் கண்டறியப்படவைகள் தான் மேலே கூறப்பட்டுள்ளன.

மற்றவர்கள் பேசுவதை முழுமையாகக் கவனிப்பவர்கள். காது கொடுத்துக் கேட்பவர்கள் நம்மிடையே குறைவு.

இடைமறித்துப் பேசி, கருத்துக்களை கூற வந்தவரை , நிலை தடுமாறச் செய்வதை நம்மில் பலர் வழக்கமாகிக் கொண்டுள்ளோம்.

இந்தச் செய்கை சொல்பவரின் எண்ணங்கள் என்ன என்பது அறியப்படாது போகின்றன.

நல்லவைகளை, நாம் பெறாது போகும் நிலை ஏற்படுகிறது.

மற்றவர்கள் என்ன சொல்ல, நம்மிடம் உரையாட்டுகின்றனர் என்பதைக் கவனிக்க வேண்டும்.

முழுவைதையும் பேச அவரை அனுமதியுங்கள். அவரைப் பற்றி, அப்போது தான் முடிவுக்கு வர நம்மால் முடியும்.

அவர் சொல்வதை, முழுவதையும் கேட்க வேண்டும். பேச்சு முடியும் வரை அமைதி காக்க வேண்டும். வேறு வேலைகளைச் செய்து கொண்டிருந்தாலும் நிறுத்தி விடுங்கள்.

கேட்கும் பேச்சை உள் வாங்கிக் கொண்டால் தான் பிறரைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.

வெளிநாட்டில் வாழுகின்ற தமிழர்களிடையே இவ்வழக்கம் உண்டு என்பதை பயண இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றன.

கேட்பவருடைய மதிப்பும் உயருகிறது. தம்முடைய எண்ணங்களை முழுமையாகச் சொல்லி முடித்து விட்ட மனத்திருப்தி சொல்பவருக்குக் கிடைக்கிறது.

பேச வந்தவரின் எண்ணங்களைச் சொல்ல அனுமதிப்போம். இடைமறித்துப் பேசுவதை தவிர்ப்போம்.

முடிவுகள் நல்லவிதமாக இருவருக்கும் அமைந்து விடும். சோதித்து தான் பாருங்களேன்.


குரு  ராதாகிருஷ்ணன்

Monday, 18 June 2012

நல்ல குழந்தைகளை உருவாக்குவோம்



குழந்தைகளுக்கு பொய், புரட்டுகள் தெரியாது. அவைகளைக் கற்பிப்பது பெரியவர்களே.

கேட்பதை எல்லாம் வாங்கித் தர நம்மிடம் பணம் கிடையாது. எதையாவது சொல்லி சமாளிக்கலாம் என்று தகப்பனார் நினைக்கிறார்.

அவர் சொல்வது நிஜம் என்று நம்புகிறது. நிறையப் பொய்களைக் கேட்டு இறுதியில்ஏம்பா ! பொய் சொல்ற !” என்று அவரையே திரும்பிக் கேட்கும்.

கேட்கும் பொருளை முடிந்தால் வாங்கித் தாருங்கள்.

இல்லையெனில் நாளைக்கு வாங்கித் தருகிறேன் என்று சொல்ல வேண்டாம்.
பிஞ்சு மனங்களில் எதிர்பார்ப்புகளை வளர்க்க வேண்டாம்.

நன்றாகப் படித்து, நிறைய மதிப்பெண்களை எடு. மேல் வகுப்புக்குச் செல்லும் போது விரும்பியதை வாங்கித் தருகிறேன் என்று சொல்லிப் பாருங்கள்.

இதனால் நமக்குக் கிடைக்கும் கால அவகாசம், பணம் சேகரிக்க உதவும்.

குழந்தைகளின் கவனம் படிப்பில் திரும்பி விடும்.

பிஞ்சு மனங்களில் ஊன்றப்படும் விதைகள் தான் பின்னாளில் விருட்சமாக வளரும் என்ற சிந்தனை வேண்டும்.

பள்ளிக்குப் போனால் உனக்குபைவ் ஸ்டார்வாங்கித் தருவேன் என்பதும்;

மேசை மீது வைக்கப்பட்ட கண் கண்ணாடியை எடுத்துவா காசு தருகிறேன் என்பதும்;

கடைக்குப் போய் இதை வாங்கி வா - இந்தா பத்து காசு என தருவதும் நல்லதல்ல.

குழந்தைகள் பெரியவர்களானதும் பணம் வாங்கிக் கொண்டு தான் எதையும் செய்ய வேண்டுமென்ற மனவோட்டம் நிறைந்திருக்கும்.

நண்பர் வீட்டுக்குப் போகும் போது வாங்கிச் செல்லும் பண்டங்களை, பெரியவர்களின் உத்தரவு நோக்கிப் பெறுகின்ற குழந்தைகளும் இருக்கின்றனர். வளர்ப்பு அப்படி.

இயன்றவற்றை முடியும் என்றும், இயலாததை முடியாது என்றும் தீர்மானித்து பக்குவமாக கூறுங்கள்.

குழந்தைகளின் மனங்கள் பவித்ரமானவை. அவைகளைப் பொன்போல் பாதுகாத்துப் போற்றினால் புகழ்மிக்க சான்றோர்களாக மிளிரக் கூடும்.

இன்றைய குழந்தைகள் நாளைய நல்ல குடிமக்களாகின்றனர். நாடு வளம் பெற நல்ல குடிமக்கள் அவசியம் தேவை.


குரு ராதாகிருஷ்ணன்

Friday, 8 June 2012

உதவுபவர்களை மதிக்க வேண்டும்



மனிதரில் நல்லவர்களே இல்லை என்று தப்புக் கணக்குப் போட்டு வாழ்க்கையை வீணடித்துக் கொண்டவர் பலர். தீயவர்களும் கலந்து இருப்பதால், அத்தகையோரைப் பார்த்து முடிவுக்கு சிலர் வருகின்றனர்.

அத்தகைய நிலைப்பாடுகளே உலகத்தில் நன்மை, தீமை, நல்லது, கெட்டது எனத் தாம் பிரித்து பார்க்க நமக்கு உதவி செய்துள்ளன.

எனக்குத் தெரிந்த நண்பர் நிறைய சம்பாதித்து நல்ல நிலையில் இருப்பவர். தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு எல்லாப் பணத்தையும் செலவழித்தல் கூடாது என நினைத்தார். வருமானத்தில் பெரும் பகுதியை வங்கியில் வைப்புத் தொகையாகப் போட்டு விட்டார்.

அவருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தன் குடும்ப நபர்களிடம்            'என்னை டாக்டரிடம் கூட்டிப் போங்கள் ; நான் உங்களுக்கு எவ்வளவு செய்திருக்கிறேன்' என புலம்ப ஆரம்பித்து விட்டார்.

அவரின் மகன்கள், தங்கை, மனைவி, மைத்துனர் ஒருவருமே உதவ முன் வரவில்லை. வங்கியிலிருந்து பணம் எடுத்துத் தந்தால் தான் டாக்டரிடம் அழைத்துச் செல்வோம் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தன.

எனக்குச் செய்தி சொல்லப்பட்டது. அவரைச் சந்தித்தேன். அவரின் நடவடிக்கைகள் பேச்சுக்கள் தான் குடும்ப நபர்களின் உதாசீனத்துக்குக் காரணம் . இதை அவரிடம் பக்குவமாகத் தெரிவித்தேன்.

குடும்ப நபர்களின் உதவிகள் தேவை எனில் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினேன்.

மாறினார். சில நாட்களில் அவருக்குக் குடும்பத்தில் அளவற்ற உபசாரங்கள் கிடைத்தன.

உதவி செய்பவர்களிடம் ஆதரவாகப் பேச வேண்டும் என்பதை சரியாகப் புரிந்து கொண்டார்.

'என்னால் தான் உங்களுக்கு இத்தகைய சிரமம். இதற்கெல்லாம் என்ன கைமாறு செய்யப் போகிறேன்' என்று சொல்லியே உடல் தேறுகிற வரையில் உதவிகளைப் பெற்றார்.

நமக்கு உதவி செய்பவர், சும்மாவா செய்கிறார். என் பணம் தானே தண்ணீராக செலவழிகிறது. இவ்வாறு எண்ணிக் கொண்டு இது வேண்டும். அதைச் செய் என்று பாடாய்ப்படுத்துவது நன்மை பயக்காது.

உதவி செய்பவர்களின் எண்ணங்களைப் புரிந்து உற்சாகப்படுத்தி, அன்புடன் சொற்களைப் பயன்படுத்திப் பாருங்கள். எல்லாமே உங்கள் வசமாகும்.


குரு ராதாகிருஷ்ணன்

Sunday, 27 May 2012

கெளரவம் பார்க்க வேண்டாம்

  

தம்மைப் பற்றி உயர்வாக எண்ணிக் கொண்டு , நாம் ஏன் அவரைப் பார்க்க அல்லது சந்திக்க வேண்டும் என்று பலர் கெளரவம் பார்க்கின்றனர்.

சிறிய விஷயங்களில் கெளரவம் பார்த்து பெரிய விஷயங்களைக் கோட்டை விட்டவர் அநேகர்.

நம் மனசாட்சியின் வாயிலாகக் கலந்து உணர்வுகளின் கூட்டுக் கலவையாக வெளிப்படுவது கெளரவம்.

இதை எல்லா விஷயங்களிலும் கடைப்பிடித்து நல்ல வாய்ப்புகளைத் தவற விட்டவர்கள் அதிகம்.

ரோஜாச் செடியில் முள் இருக்கிறதே என்று குறை கூறாதே. முள் செடியில் ரோஜா பூக்கிறதே என மகிழ்ச்சி கொள் என்ற ஆங்கில அறிஞனின் எண்ணத்தை அறிந்து கொள்ளுங்கள்.

கெளரவம் பாராது, விஷயங்களை விட்டுக் கொடுத்துப் பெருந்தன்மையுடன் நடப்பவர்களுக்கு பெரிய நன்மைகளை எதிர்பாராமலேயே பெறுகின்ற வாய்ப்புகள் அமைகின்றன.

நெடுஞ்சாலையில் மாலை வேளைகளில் நிறைய நபர்கள் உலாவுவது உண்டு. சாலையின் நடுவில் லாடம் கிடக்கிறது. நிறையப் பேருந்துகள் வந்து போய் கொண்டிருக்கின்றன. நடந்து செல்பவர்களின் கண்களில் அந்த லாடம் கிடப்பது தெரியத் தான் செய்கிறது. ஒருவர் மட்டுமே அதைக் குனிந்து எடுத்து ஒரமாகப் போட்டு விட்டுச் செல்கிறார். ஆயிரக்கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள பேருந்து டயர்களில் லாடம் அடித்து விட்டால் நட்டம் யாருக்கு ? முதலாளிக்கும், பயணிகளுக்கும் என இரு சாராருக்கும் தான்.

மீண்டும் டயரை சரி செய்ய வேண்டும். அதற்கு செலவு வேறு. பயணிகளுக்கு நேரத்திற்குள் சென்றடையாவிடில் சங்கடங்கள்.

இவையெல்லாம் ஒருவரின் நல்ல சிந்தனையாலே விளைகின்றன.

ஒவ்வொருவரிடமும் ஆற்றல்கள் மிகுந்து உள்ளன. வெளிப்படுத்துவதில் தான் வேறுபாடுகள் தெரிகின்றன.

சிடுசிடுவென காட்சியளித்து, சிரிப்பதில் சிக்கனம் காண்பித்து , கண்டிப்புகளை செயல்படுத்தி எல்லாவற்றிலும் கெளரவம் பார்ப்பவர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைவது கடினம் தான்.

மனம் விட்டுச் சிரியுங்கள். எல்லோரிடமும் அன்போடு பழகுங்கள். கெளரவம் பாராது பெருந்தன்மையோடு நடந்து கொள்ளுங்கள்.

ஒரு ரோஜாப்பூ தன்னுடைய அழகையும் வாசத்தையும் மற்றவர்கள் உயர்வாக எண்ண வேண்டும் என்று நினைப்பதில்லை. யார் பார்வையும் படாத பாடு கரடுமுரடான புதர்களிலும் கூட பூக்கள் ஜோராகவே மலர்கின்றன. ஆனால் நாம் ?

சொன்னவர் சுவாமி தயானந்த சரஸ்வதி . இவ்வாறான சிந்தனைகள் நம்மை வளப்படுத்தட்டும்.


குரு ராதாகிருஷ்ணன்