Thursday, 2 February 2012

ஒரு கப் காபியும் ரசனையான பேச்சும் !



கடந்த செப்-10ந்தேதி ( 2004 ) புதுவையில் மாலை எழுத்தாளர் கி.ரா.வின் 82 வது பிறந்த தின விழா, 50-வது திருமண விழா, கரிசல்கட்டளை விருது வழங்கும் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா அவரது இல்லத்திலேயே நடந்தது . அங்கே கி.ரா ஆற்றிய ஏற்புரையிலிருந்து .

திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தர் எனது நான்கு கதைகளுக்குத் திரைப்பட உரிமைக்கோரி அட்வான்ஸ் கொடுத்த பணம் , ஒளிஒவியர் தங்கர்பச்சான் மூலம் இசைஞானி இளையராஜா கொடுத்து அனுப்பிய அன்பளிப்பு பணம், எனக்குப் பரிசாகக் கிடைத்த பணம், யாவற்றையும் சேர்த்துத் தான் கரிசல்கட்டளை என்ற விருதுத் திட்டத்தை ஆரம்பித்தேன். அந்தப் பணத்திற்கு வங்கியில் கிடைக்கும் வட்டிப் பணத்தைக் கொண்டு தான் ' கரிசல்கட்டளை' என்ற விருதினை ஆண்டுதோறும் என் பிறந்த நாள் அன்று ஏதேனும் ஒரு சிறு பத்திரிக்கைக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்குகிறேன். இந்த ஆண்டு கரிசல் கட்டளை விருதினை ' புதிய கோடாங்கி' என்ற சிற்றிதழுக்கு வழங்குகிறோம் .

நான் நடத்திக் கொண்டிருக்கும் 'கதைசொல்லி' என்னும் எண்வழிச் சிற்றிதழை நிறுத்திவிடலாம் என்று எண்ணுகிறேன். பத்திரிக்கை நடத்துவது பெரிய அல்லல். நான் ஒத்தப்பேரில் என்னால் தொடர்ந்து இந்த இதழைக் கொண்டு வரமுடியவில்லை.



நான் இலக்கியவாதியில்லை. ஆனால் என் எழுத்து பலரையும் கவர்ந்திருக்கிறது . முதலில் நான் அரசியல்காரன். அடுத்து சங்கீதக்காரான். இசை என்னை ஆனந்தப்படுத்துகிறது . எழுத்து என் உயிரைக் குடிக்கிறது . பிரசவ வேதனை போல சண்டிவலி எடுத்து என்னை வதைக்கிறது என்றாலும் இந்த எழுத்துத் தான் எனக்குப் பேர் வாங்கிக் கொடுத்திருக்கிறது .

என்னைப் பற்றி வருகிற விமர்சனங்களையும் நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன். பாராட்டைப் போல விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்கிற நிலைக்கு வந்துவிட்டேன்.

மனிதர்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை . இங்கு ஒரு பேராசிரியர் இருக்கிறார். என்னோடு நன்றாகப் பழகிக் கொண்டிருந்தார். அவர் வீட்டு விழாக்களுக்கு எல்லாம் தவறாமல் போவேன் . ஒரே ஒருமுறை மட்டும் என்னால் அவர் வீட்டு விழாவிற்குப் போக முடியவில்லை. மனுஷன் அன்றிலிருந்து என்னோடு பேச மாட்டார்.

கிராமத்தில் ஒரு பிரயோகம் கூறுவார்கள். ' வேதநாயகம் பிள்ளை சடைக்கிற மாதிரி' என்று. அது மாதிரி காரணமில்லாமல் சடைத்துக் கொள்கிறவர்களைப் பற்றி நான் கவலைப்படுவதே இல்லை .

இந்த மாதிரி மனிதர்களை நான் கிராமங்களில் பார்த்திருக்கிறேன்.
என் உயிர்மூச்சே பேச்சு தான் . பேச்சு தான் நம் தமிழர் மரபு. பேசிக் கழிக்கத் தான் பழந்தமிழர்கள் தன் வீட்டில் தின்ணை வைத்துக் கட்டினார்கள். பேச்சு மூலமே நமக்குப் பல ஞானச் செல்வங்கள் கிடைத்திருக்கின்றன.

ராமகிருஷ்ண பரமஹம்சரின் பேச்சுகளைத் தொகுத்துப் பிற்காலத்தில் எழுத்தில் பதிவு செய்தது தான்' ராமகிருஷ்ண விஜயம்' . ஏசுநாதரின் பேச்சுக்கள் பின்னாளில், அவரின் சீடர்களால் தொகுத்துப் பதிவு செய்யப்பட்டது .

முகம்மது நபிக்கு எழுதப் படிக்கத் தெரியாது . அவரை ' உம்மி நபி ' என்று தான் அழைப்பார்கள். ' உம்மி ' என்றால் படிப்பறிவற்றவர் என்று பொருள் . ஆனால் அவர் ஒரு ஞானியாக இருந்தார். அவரின் பேச்சுகள் எல்லாம் , பிற்காலத்தில் அவரின் சீடர்களால் தொகுக்கப்பட்டது . அதைத் தான் 'ஹதீஸ்'கள் எனக் கூறுகிறார்கள்.

நம்ம ரசிகமணி டி.கே.சி தன் வீடு தேடி, தமிழ்க் கேட்க வருகிறவர்களுக்கெல்லாம் இலக்கிய இன்பத்தை வாரி, வாரி வழங்கினார்கள்.

இங்கு என்னைத் தேடி வருகிறவர்களுக்கு என் அனுபவங்களை, நான் ரசனையோடு கூறுகிறேன். என் வீடு தேடி வருகிறவர்களுக்கு, நான் என் இலக்கிய ரசனையை, வாழ்வியல் அனுபவங்களைக் கூறக் காத்திருக்கிறேன்.

நான் ஆன்மீகச் சாமியார் இல்லை. என்னிடம் திருநீறு கிடையாது. நான் குங்குமம் கொடுப்பதில்லை. என்னிடம் மாய, மந்திரம் ஏதும் இல்லை . என்னிடம் இருப்பதெல்லாம் தமிழும் , அனுபவங்களும் தான். யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் என் வீட்டிற்கு வாருங்கள் . உங்களுக்குக் கொடுக்க ஒரு கப் காபியும் எனது ரசனையான பேச்சும் காத்திருக்கிறது .

என்னை எழுது எழுது என்று நண்பர்கள் உற்சாகப்படுத்துகிறார்கள். நான் எதை எழுத வேண்டும் என்று குறிப்பு கூட எடுத்து வைத்துக் கொள்வதில்லை. நினைத்த போதெல்லாம் என்னால எழுத முடியாது.

மலை முகட்டில் அவிழ்த்து விடப்பட்ட , மஞ்சு ( மேகம் ) வந்து மலைமேல் கவிழ்வதைப் போல, எப்போதாவது சில சிந்தனைகள் என் மேல் விழுந்து என்னைப் பரவசப்படுத்தும். அதைத்தான் நான் எழுதுகிறேன்.


குறிப்பு : செய்தி தொகுத்தவர் நாடோடி இலக்கிய எழுத்தாளர் கழனியூரன்

வாசித்து வலையேற்றம் செய்தது : குரு ராதாகிருஷ்ணன்

Monday, 23 January 2012

தெளிவாகச் சொல்லுங்கள்

பட்டதாரி மகனுக்கு வேலை தேடி அலையும் ஒருவர் உங்களிடம் வருகிறார். நிலையை விவரித்து தன் மகனுக்கு வேலை பார்த்துத் தர வேண்டுகிறார். நம்பிக்கையுடன் வந்து அணுகுவதாகவும் சொல்லி விட்டார். உங்கள் மறுமொழிக்குக் காத்திருக்கிறார்.

என்ன சொல்வீர்கள் ?

விஷயத்தை என்னிடம் விட்டுவிடுங்கள் . உங்கள் பையனுக்கு வேலை கிடைத்துவிட்டது என்று நினையுங்கள். அடுத்த ஏழாவது நாள் என்னை வந்து பாருங்கள் . நல்ல செய்தியைப் பெறுவீர்கள் என்று சொல்லி விட்டீர்கள்.

அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி . இவரல்லவோ பெரியவர். இவர் குடும்பம் நன்றாக இருக்கட்டும் என்று வாழ்த்திக் கொண்டே விடைபெறுகிறார்.

தன்னை மற்றவர்கள் உயர்வாக நினைக்க வேண்டும், மதிக்க வேண்டும் என்ற பேராசையால் முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசுபவர்களின் ரகத்தைச் சேர்ந்தவர் நீங்கள் .

இதை அடுத்த ஏழாவது நாளில் தானே உங்கள் நண்பர் பார்க்கப் போகிறார்.

இது ஒரு வகை.

உங்கள் பையனைப் போல் நிறையப் பட்டதாரிகள் வேலை கிடைக்காமல் அலைவது உங்களுக்குத் தெரியும் . என் நண்பர் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாண்மை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். அவரைப் பார்த்து விவரம் கேட்டு அறியலாம் . அதுவரை அவகாசம் தாருங்கள். உங்கள் பையனின் பயோடேட்டாவைத் தந்து விட்டுச் செல்லுங்கள் . நான் முயற்சி செய்து பார்க்கிறேன்.

இது இரண்டாவது வகை.

இவர்களால் காரியம் நடக்காவிட்டாலும் மரியாதை குறையாது . பொய்யான வாக்குறுதியை தராத இத்தகையோரின் செல்வாக்கு குறையாது .

முதல் வகையினரால் இத்தகைய மதிப்பும் மரியாதையும் மற்றவர்களிடமிருந்து பெற முடியாது. நம்பிக்கையைத் தகர்த்து விட்டார் என்ற ஆதங்கம் நிலைத்து விடும் .

வேலை கோரிக்கை மட்டுமல்ல , எவ்வகை விஷயமானாலும் நம்மிடம் வருபவர்களுக்கு யோசித்து நிதானமாக வாக்குறுதி கொடுங்கள்.
நம்பிக்கை தரும் வகையில் பதில் சொல்வதில், தயக்கம் காடுவதில், தவறு இல்லை.

நண்பர் சொல்கிற காரியத்தை நம்மால் செய்து தர முடியும் என்ற வாய்ப்பு இருந்தால் மட்டுமே சொல்லுங்கள்.

முடியாதென்றால் தெளிவாகச் சொல்லுங்கள் . அதற்கான சூழலை விளங்க வைத்தால் ஒத்துக் கொள்வார்கள்.

கூடியவரை மற்றவர்களுக்குத் தெளிவாக எதையுமே சொல்வதற்குப் பழகுங்கள் . உங்கள் மதிப்பும் மரியாதையும் மற்றவர்களிடம் கூடும்.


குரு ராதாகிருஷ்ணன்

Tuesday, 17 January 2012

குறிக்கோளுடன் செயல்பட வேண்டும்



உயர்கல்வி, மற்றவர்களோடு பழகிப் பெற்ற அனுபவம் , சாதுரியம் இவைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள் . அதாவது இவைகளை எண்ணிப் பாருங்கள்.

பொறியாளராக , மருத்துவராக, பேராசிரியராக , வழக்குரைஞராக ஆக வேண்டுமென்ற குறிக்கோளையும் வரித்துக் கொள்ளுங்கள் .

நிச்சயம் நீங்கள் விரும்பியவாறே ஆவீர்கள்.

எதையுமே எண்ணாமல், குறிக்கோளும் இல்லாது புறப்படுகிறவன் எதையுமே கண்டடைவதில்லை .

இன்ன ஊருக்கு போக வேண்டும் என் நிச்சயம் செய்யும் ஒருவன் , ரயிலடிக்குச் சென்று, பயணச்சீட்டு பெற்றால் தான் , நினைத்த ஊருக்கு போக முடியும் . இதுதான் நியதி .

வாழ்க்கையில் அடைய வேண்டிய இலக்கு எது என்பதை சரியாக கணிக்க முடியாது தவிக்கும் இளைஞர்கள் ஏராளம்.

காரணம் சலனம் தான் . அப்பா இருக்கிறார் நமக்கு . அவரது வழிகாட்டுதலில் நமக்கு நல்ல கல்வி கிடைக்கும் . இவ்வித நம்பிக்கைகளை வளர்த்துக் கொள்ளும் சிலர் ;

தொழில் கல்விக்கு கேட்கப்படும் பணத்தை அள்ளிவிட்டால் நமக்கு விருப்பமான பிரிவு கிடைக்கும் . அப்பா பணத்தைச் செலவு செய்ய தயங்க மாட்டார் என்றும் சிலர் ;

இரண்டும் நல்லவிதமாக அமைந்து விடும் என்று சொல்லிவிட முடியாது .
நம் குடும்பத்தில் நீ டாக்டராக வேண்டும் என்று வழிகாட்டும் அப்பாவின் எண்ணம்  மகனின் விருப்பத்துக்கு மாறாக இருந்தால் ;

தொழிற்கல்வி கற்பிக்கும், கல்லூரி கேட்கும் பணம் கொடுக்க இயலாது போனால் அல்லது தேவைப்படும் பணம் சேகரிக்குமுன் இடம் நிரம்பிவிட்டால் ;

இரண்டும் வழிகளும் அடைக்கப்பட்டுவிட்டன .

வாழ்க்கையை நன்றாக அமைத்துக் கொள்ள லட்சியங்கள் அல்லது குறிக்கோள்கள் அவசியம் தேவை . முதலில் இவைகளை தீர்மானம் செய்து கொண்டு அதை நோக்கி அடியெடுத்து வையுங்கள் .

வழியில் தென்படும் தடைகளைத் தன் அறிவுத் திறன் கொண்டு நீக்குங்கள் . பெரியவர்களின் ஆலோசனைகள் இவ்விஷயத்தில் கை கொடுத்துதவும்.

குறிக்கோளில் மனம் ஒன்றிப் போகிறவர்களுக்கு களைப்பே தெரியாது . ஆகவே வாழ்க்கையில் இலகுவாக வெற்றி பெறுவது நிச்சயம் .

குறிக்கோளுடன் செயல்படுவோம் . வெற்றி பெறுவோம் .


குரு ராதாகிருஷ்ணன்

“இவனே” என்கிற மனிதன்





'இவனே என்கிற மனிதன்' என்கிற சிறுகதைகள் தொகுதி எனக்கு வாசிக்கக் கிடைத்தது. இருபத்தைந்து சிறுகதைகளடக்கிய இத்தொகுதியின் முதல் சிறுகதையே நூலின் தலைப்பாக அமைந்து போனது சிறப்பு.

வித்தியாசமான அணுகுமுறையோடு சித்தரிக்கப்பட்ட கதை.

மகாகவி, சிகரம், இனிய நந்தவனம், முங்காரி, செங்கரும்பு, வெல்லும் தூய தமிழ், புதிய உறவு ஆகிய சிற்றிதழ்களில் வெளிவந்துள்ள சிறுகதைகளை ஒருசேர வாசிக்கும் வாய்ப்பினை நூலாசிரியர் சந்திரா மனோகரன் தந்துள்ளார்.

இதழாளர், கவிஞர், எழுத்தாளரான இவரது நான்காவது சிறுகதைத் தொகுதியாகும். மேலும் சற்றொப்ப 15 நூல்களை புதினம், குறுங்கதை, புதுக்கவிதை, குறள்வழிக் கதைகள், நாட்டுப்புறக் கவிதை, தன்முனைப்பு, சிறுகதைகள், சிறுவர் கதைகள் என பரந்துபட்ட பன்முக அனுபவங்களைக் கொண்ட நூலாசிரியர் நூலை வெளியிட்டிருக்கிறார் என்பது சிறப்பு செய்தி.

எல்லா சிறுகதைகளின் அடிநாதமாக அன்பின் ஆழங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. மறக்கமுடியாதவர்கள், தொலைந்து போனவள், நான் கவிஞனுமில்லை, தரித்திரம் ஆகிய சிறு கதைகளில் தத்துவ விசாரங்களைக் கலந்து தந்துள்ளார் நூலாசிரியர்.

இந்த தொகுதிக்கு வதிலைபிரபா, ஸ்டாலின் குணசேகரன், காஞ்சி வி. தங்கராஜ் ஆகியோர் மிக அருமையாக அணிந்துரைகளை வழங்கியுள்ளனர்.

கதைகளிடையே ஒரு மனிதரைப் பார்த்ததும் அவர் உருவம் அப்படியே ஈர சிமெண்டில் பதிந்த கை மாதிரி அமர்ந்தது. (பக். 56)

மருதமுத்து வாத்தியாரைப் பற்றிய நடத்தைகளைச் சொல்லி, அரசியல்வாதிகளுக்கு 'கையூட்டு' கொடுத்து நல்லாசிரியர் விருது பெற்றது - சுவைபட சொல்லுகிறார். (பக்.77)

காலத்தின் கோலம் எனும் சொலவடையை - 'காலம் எப்படி வேண்டுமானாலும் கோலம் போடுமே! அதன் உரிமையை யார் தடுக்க முடியும்' என தனது மொழியில் உருவகமாக்கியுள்ளார். (பக். 81)

இதுபோன்ற இலகுவான உத்திகளை கதைகளில் படித்து ரசிக்க முடிகிறது.

பொதுவாக ஒரு நூலை கையில் எடுத்ததுமே தரத்தை அறிந்துகொள்ள தீவிர வாசகனால் கண்டடைய இயலும். காரணம் அட்டைப்படம், அச்சு, தரமான தாள்கள், வடிவமைப்பு, படிப்பவரை கண்கள் உறுத்தாத வகையிலான எழுத்துருக்கள் ஆகியன சிறப்பாக இருக்க வேண்டும்.

முக்கியமாக வாசிப்பின்போது தடையேற்படுத்தும் அச்சுப் பிழைகள், சரியான 'மெய்ப்பு' திருத்தத்தால் சாத்தியப்படும். இவையெல்லாம் துல்லியமாக கணித்து, கவனத்துடன் நூலை வெளியிடுவது இக் காலத்தில் துர்பலம்.

கட்டமைப்பும்,ஒரு நூலின் சிறப்புக்கு உறுதுணை. ஆனால் முன் சொல்லப்பட்ட அனைத்தும் கரிசனத்துடன் செயலாக்கப் பட்டுள்ளது. நூல் வெளியீட்டாளர் 'ஓவியா பதிப்பகம்' மிகுந்த பாராட்டுக்கு உரியவர்கள்.

இது போன்ற வித்தியாசமான உத்திகளோடு கூடிய சிறுகதைகள் வெளிவரவேண்டும். மொழி சிறக்க, உலக தரத்துக்கு எட்ட தமிழ் சிறுகதைகள் சந்திரா மனோகரன் போன்றவர்களால் இயலும் என்பது என் முடிவு.

பெரிய இடைவெளிக்குப் பின் நல்ல சிறுகதைகளை தமிழில் படிக்க வாய்ப்பு கிடைத்தது நான் பெற்ற பேறுகளில் ஒன்றாகும்.

நூலாசிரியர் சந்திரா மனோகரன், பதிப்பாளர் வதிலைபிரபா இருவரும் பாராட்டுக்குரியவர்கள் என்பதை இந்நூலைப் படிப்பவர்கள் அறிய முடியும். அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் மட்டுமல்ல பாதுகாக்கப்பட வேண்டிய நூலாகும்.
ஆசிரியர்: சந்திரா மனோகரன்

பதிப்பு: 2010

விலை: ரூ.65/-

பக்கங்கள்: 144

பிரிவு: சிறுகதைத் தொகுதி

பதிப்பகம்:ஓவியா பதிப்பகம்

முகவரி:அய்யம்பெருமாள் இல்லம்,17-16-5A, கே. கே. நகர், வத்தலகுண்டு - 624 202,திண்டுக்கல் மாவட்டம்.

 குரு. ராதாகிருஷ்ணன்

http://www.muthukamalam.com/bookreview/p76.html

Saturday, 7 January 2012

தவறான கருத்து



எழுபது விழுக்காடுகள் கிராமங்களைக் கொண்டுள்ள நாடு நமது இந்தியா. பெரிய நகரங்களும் இருக்கின்றன . நகரங்களின் அசுர வளர்ச்சி , கிராம முன்னேற்றம் பற்றிய வளர்ச்சி கண்ணுக்குத் தெரியாமல் போகின்றன .

கிராமங்களும் மக்களும் ஐந்தாண்டுத் திட்டங்களின் பயன்பாடுகளைப் பெற்று முன்னேறியிருப்பதை யாரும் மறுக்க இயலாது.

கல்லூரிப் பட்டங்கள் பெற்றோருக்குத் தான் பெரிய வேலைகள், வசதியான வாழ்க்கைகள் கிடைக்கின்றன . வசதியும், வாய்ப்பும் நகர்ப்புற இளைஞர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றன .

கிராமப்புற இளைஞர்களுக்கு இவ்வித வாய்ப்புகள் குறைவு . உழவுத் தொழில் தான் நமக்குப் போடப்பட்டுள்ள நுகத்தடி . நெடுங்காலமாக நடந்து வருகின்ற இவ்வித முரண்பாடுகள் களைவது எவ்வாறு ?

இருவேறு கருத்துக்கள் எல்லா இடங்களிலும் நிலவி வருகின்றதைப் பார்க்கிறோம்.

வசதி நிறைந்த வாழ்க்கை, கல்லூரிப் பட்டங்கள் தாம் லட்சியம் என்று நினைப்பவர்களில் எத்தனை பேர் சாதனையாளர்களாக இனங்கண்டுள்ளனர் என்பதை எண்ணிப் பாருங்கள்.

இன்றையச் சூழலில் மேல்பட்டப் படிப்பு தேர்வு பெற்று பட்டம் வாங்குவது சுலபம் . கிராமப்புற இளைஞர்களில் பலர் திறந்த வெளிப்பல்கலைக் கழகங்கள் , தொலைதூர அஞ்சல் கல்விப் பல்கலைக்கழகங்கள் மூலம் நிறையப் பட்டங்களைப் பெற்று வருகின்றனர் .

உழவியல் முறைகள், பயிர் பராமரிப்பு , விதை நேர்த்தி, நீர் மேலாண்மை முதலியவைகளைச் செய்து உழவுத் தொழிலில் கூடுதலாக விளைச்சலைக் காண்பிக்கும் சாதனையாளர்கள் நிறைய உண்டு .

வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஈடாக விளைச்சலைக் அதிகப்படுத்தும் சாதனையாளர்கள் வணங்கத்தக்கவர்கள்.

அவர்கள் நமக்கு உண்டி கொடுத்து உயிர் கொடுப்பவர்களே என்பதை மறந்து விடாதீர்கள்.

மெத்தப் படிப்பு இல்லாதவருக்குக் கட்டாயம் தோல்வி தான் . பட்டதாரிகளுக்கு வெற்றி நிச்சயம் .

இவ்வாறான கருத்துக்கள் தவறானவைகள் .

உண்ண உணவின்றி , உடுத்த ஆடையின்றி , வசிக்க இடமின்றி வாழ்ந்த பல ஏழைகள் தன் எழுத்துத் திறமையால் மாபெரும் இலக்கியங்களைப் படைத்திருக்கின்றனர். இவர்கள் சுமாரான அளவான கல்வித் திறம் படைத்தவர்கள் . இவரது இலக்கியம் படித்துப் பட்டம் பெற்ற அறிஞர்களால் போற்றப்பட்டிருக்கின்றன . மேலை நாடுகளின் இலக்கிய கர்த்தாக்களின் வரலாறுகளைப் படித்தவர்களுக்குத் தான் இவைகள் தெரியும் .

உழைப்பு , அறிவு, திறமை மூன்றுமே வாழ்க்கையில் இணைந்து விட்டால் சாதனையாளராக மாறுவது சுலபம் .

தவறான கருத்துக்களைத் தயவு செய்து மனதிலிருந்து நீக்குங்கள்.


குரு ராதாகிருஷ்ணன்

Friday, 23 December 2011

மாற்றங்களுக்கு மாற வேண்டும்



வாழ்க்கை என்பது சீட்டு விளையாட்டைப் போன்றது . விளையாடுபவர்களின் கைகளில் சீட்டுகள் கலவையாக வந்து விழுகின்றன . தேவையான சீட்டுகள் வரவில்லையே என்று விசனப்படுவதில்லை .

கையிலுள்ள சீட்டுகளைப் போட்டும், எடுத்தும் விளையாடுவது மரபு . இறுதியில் ஒருவர் வெற்றி பெறுகிறார்.

தோல்வி பெற்றவர்கள் சோர்ந்து போவதில்லை . மீண்டும் சீட்டுகள் கலைக்கப்படுகின்றன . அடுத்து நடைபெறும் ஆட்டத்தில் வேறொருவர் வெற்றி பெறுகிறார். சென்ற ஆட்டத்தில் வெற்றி பெற்றவர் அடுத்த ஆட்டத்தில் தோல்வி பெறுகிறார்.

வெற்றியும் , தோல்வியும் மாறி மாறி வருகின்றன . திறமையாகச் சிந்திப்பவர்கள் வெற்றி பெறுவர். சோர்ந்து போகிறவர்கள் வாழ்க்கையில் தோல்விகளைச் சந்திக்கின்றனர்.

உளவியல் அறிஞர்கள் ஆராய்ந்து முடிவுகளை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நான்கு அடிப்படை இயல்புகள் இருக்கின்றன.
வாழும் துடிப்பு , வளரும் ஆசை , தெரிந்து கொள்ளும் ஆர்வம் . எல்லாத் திறமைகளையும் சாதகமாக்கிக் கொண்டு வாழும் முயற்சியே அவைகள்.

உலகின் மாறுதல்களுக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்வது அவசியம் என்பதை உணர வேண்டும் .

சிலர் எல்லாம் நம் விதிப்படி தான் நடக்கும் என்று சோம்பி இருந்து வருகின்றனர் . பொறுப்புகளையும் மற்றவர்களிடம் தள்ளிவிட முயற்சிப்பார்கள் . வாழ்க்கையில் இவர்கள் முன்னேறுவது கடினம் .

பாரம்பரியத்தின் பெருமை பேசிக் கொண்டே இருப்பார்கள் சிலர் . அவ்வழியே தன் வழி என பிடிவாதம் பிடிப்பார்கள் . விதியை நம்பும் சோம்பேறிகளோடு தான் இவர்களைச் சேர்க்க வேண்டும் .

டாக்டர் உதயமூர்த்தி அவர்கள் அடிக்கடி சொல்வதுண்டு . ' அப்பன் வெட்டிய கிணறு என்று உப்புத் தண்ணீரைக் குடிக்கும் மகனின்' மனப்போக்கு நிறையப் பேர்களிடம் இருக்கின்றன . பாரம்பரியப் பெருமையை இதை விட அழகாகக் கூற இயலாது .

பாரதத்தின் பிரதமர் பதவியை நேரு குடும்பத்தாரால் மட்டுமே அலங்கரிக்க இயலும் என்பதை மாற்றியவர்கள் உண்டு .

எங்கோ பிறந்த தேவகெளடா, குஜ்ரால் , வாஜ்பாய் போன்றவர்கள் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டார்கள் .

திறமைகளை வளர்த்துக் கொண்டு உயர்பதவிகளுக்கு தகுதிகளைப் பெற்றுத் தங்களை வெளிப்படுத்தியவர்களை எண்ணிப் பாருங்கள்.

வாழ்வில் எது முக்கியம் , இலக்கை அடையத்தடைகள் இவைகளைப் பற்றிய தெளிவும் அறிவும் தான் தேவை என்பதை உளவியல் அறிஞர்கள் கூறும் உண்மைகள்.

மாற்றங்களை வரவேற்பதிலும் , அதற்கு ஏற்றாற்போல நம்மை மாற்றிக் கொள்வதின் முலம் வாழ்வில் உயருவோம்.


குரு ராதாகிருஷ்ணன்

Saturday, 17 December 2011

காலம் தவறாமை வேண்டும்



காலம் தவறாமையை வாழ்வில் கடைப்பிடித்தவர்கள் எல்லா நன்மைகளையும் கூடிப் பெறுவர்.

நண்பரை வீட்டுக்கு அழைத்துப் பேசி முடிவு செய்ய முதல் நாள் செய்தி சொல்லப்பட்டது . அவருக்காக காத்திருக்கிறார் . கால் மணி நேரம் கடந்து விட்டது
 அரை மணி நேரமும் சென்றது . நண்பர் வரவில்லை .
அவர் வரும் வழியில் ஏதாவது நடந்து விட்டதா ? சொன்ன நேரத்தில் வருபவராயிற்றே ! ஒரு வேளை உடல் நலக் குறைவு வந்திருக்குமோ ! காத்திருப்பவரின் மனதில் எண்ணங்கள் தொடராக வலம் வருகின்றன .

வரச் சொன்ன நண்பரிடம் முக்கிய விஷயத்தைப் பேசி முடிக்க வேண்டும் . பின் வேறு ஒரு நபரை அது விஷயமாகப் பார்க்க வேண்டும் என்ற திட்டம் நிறைவேறாது போகுமோ என் மனக்கிலேசம் வேறு .

காரணம் திருமணப் பேச்சு தான் . நண்பரது மகனுக்கு தன் மகளை மணம் முடிக்க எண்ணுபவருக்கு இவ்வாறு தானே மனம் குழம்பும் .

நமக்காகக் காத்திருப்பாரே . விரைவாகச் சென்று என்ன செய்தி என்பதை அறிய வேண்டாமோ . அரை மணி நேரம் கடந்து விட்டதால் , நான் போய் அவர் வெளியில் சென்று விட்டால் ஏமாற்றம் தானே மிஞ்சும் .

சரி , போய்த் தான் பார்ப்போம் . இருந்தால் வேறு வகையில் அவரைச் சமாதானம் சொல்லி விடுவோம் என எண்ணுகிற நண்பர் . இருவரையும் இடம் மாற்றிப் போட்டு எண்ணிப் பாருங்கள் .

முக்கியமான அல்லது சாதாரண விஷயமாக இருப்பினும் காலம் தவறாமல் செய்து பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

நாம் செய்யும் வேலைகளைத் திட்டமிட்டுச் செய்து பழகிக் கொண்டால் நன்மை பயக்கும் .

வேலைகளை முடிப்பதற்கு , போக வேண்டிய இடம் , பேருந்து அல்லது மின்சார ரயில் பயணம் , இவைகளுக்கென்று எவ்வளவு நேரம் செலவழியும் என்பதை திட்டமிட வேண்டும் . அப்போது தான் நாம் காணப்போகும் நண்பரைக் காலம் தவறாமல் சந்தித்துப் பேச முடியும் . நன்மையும் பெற முடியும் .

வேலைக்கான நேர்காணல் கடிதம் பெற்றவர் , வெளியூர் பயணத்துக்கான பயணசீட்டைப் பெற்றவர் , இதைப் போன்றவைகளுக்கு ஆட்பட்டவர்கள் காலம் தவறாமையைக் கடைப்பிடிக்காது போனால் என்ன ஆகும் . கற்பனை செய்து பாருங்கள் .

பல நல்ல விஷயங்கள் கை நழுவிப் போய் விடும் .

மற்றவர்களின் மதிப்பீடுகள் நம்மைத் தலைகுனியச் செய்து விடும் .

எல்லா காரியங்களையும் திட்டமிட்டுக் காலம் தவறாது செய்து பழக்கப்பட்டவர்கள் , எனக்கு நேரமே இல்லை என்ற பொய்யைக் கூற மாட்டார்கள்

தெரிந்தே பொய் சொல்பவர்கள் வாழ்க்கையில் உயர மாட்டார்கள் .


குரு
ராதாகிருஷ்ணன்